காலாவதியான 30 சுங்கச்சாவடிகள்.. கோர்ட்டுக்கு போகலாமே.. அமைச்சருக்கு நெட்டிசன் கேள்வி
சென்னை: 30க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகளில் ஒப்பந்த காலம் முடிந்தும் இன்னும் கட்டணம் வாங்குவதாக அமைச்சர் எ.வ.வேலு நேற்று பேசியது சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது. கடிதம் எழுத முடியுமே ஒழிய நாங்கள் என்ன பண்ண முடியும் என்று மாநில அமைச்சரே கேட்பது சரியல்ல என்று விமர்சித்துள்ள நெட்டிசன்கள். ஒப்பந்தம் முடிந்து விட்டது என்றால் கோர்ட்டுக்கு போகலாம் என்று தெரிவித்துள்ளனர்.
நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலு நேற்று திருநெல்வேலியில் செய்தியாளர்களிடம் பேசும் போது, தமிழ்நாட்டில் பல சுங்கச்சாவடிகள் காலாவதியாகிவிட்டன. காலாவதியான சுங்கச்சாவடிகளில் வழக்கமான கட்டணம் வசூலிக்கக்கூடாது. பராமரிப்பு கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டும். தமிழ்நாட்டில் காலாவதியாகியும் கட்டணம் வசூலிக்கப்பட்டு வரும் 4 சுங்கச்சாவடிகளை அகற்றக் கோரி மத்திய அரசுக்கு தொடர்ந்து கடிதம் எழுதி வருகிறோம்.

தமிழ்நாட்டில் காலம் கடந்து 30க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகள் செயல்பட்டு வருகிறது. தேசிய நெடுஞ்சாலையில் காலாவதியான பரனூர், கிருஷ்ணகிரி, ஸ்ரீபெரும்புதூர், இருங்காட்டுக்கோட்டை போன்ற சுங்கச்சாவடிகளை அகற்றக் கோரி மத்திய அரசுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் கடிதம் எழுதியுள்ளோம். கடிதம் எழுத முடியுமே ஒழிய நாங்க என்ன பண்ண முடியும்" என்றார்.
இந்த விவகாரத்தில் நெட்டிசன்கள் பலர் அமைச்சருக்கு கேள்வி எழுப்பி வருகிறார்கள். அந்த வகையில் தான்ஸ் என்ற நெட்டிசன் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில், இவர் மாநில நெடுஞ்சாலை துறை அமைச்சர் தானே, 30க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகளில் ஒப்பந்த காலம் முடிந்தும் இன்னும் வாங்குகிறார்கள் என்கிறார். எந்தெந்த சுங்கச்சாவடிகள் என்றால், திடீர்னு கேட்டால் சொல்ல முடியாது என்கிறார்.
இவர் குறிப்பிட்டு சொல்லும் நான்கில்.. ஸ்ரீபெரும்புதூர் என்பதும் இருங்காட்டுக்கோட்டை என்பதும் ஒன்றுதான். பரனூர் டோல் முடிந்துவிட்டது என்றால், அடுத்து வரும் ஆத்தூர் (திண்டிவனம்) டோலும் முடிந்து விட்டது என்று தான் அர்த்தம். இவை முடிந்து விட்டது என்றால் வானகரம் டோலும் அவ்வாறே தானே வரும்?

கடிதம் எழுத முடியுமே ஒழிய நாங்க என்ன பண்ண முடியும் என்று மாநில அமைச்சரே கேட்பது சரியல்ல. எழுதிய கடிதத்தின் நகலை வெளியிட்டு பேசலாம், ஒப்பந்தம் முடிந்து விட்டது என்றால் கோர்ட்டுக்கு போகலாம். மக்கள் அவதிப்படுகிறார்கள் ஆனால் இவ்வாறு பேசுவது ஃபேக்பயர் ஆகிட வாய்ப்புள்ளது என தெரியாமல் பேசுகிறாரா? இப்படி திடீர்ன்னு கேட்டா எப்படி சொல்வது என கேட்பது பேட்டிக்கு தயாராகாமல் வந்தது போல உள்ளது.
பொதுமக்கள் கேட்டாலே தேசிய நெடுஞ்சாலை ஆணையம் பதில் சொல்லாது, அமைச்சர் கேட்டால் சொல்வாங்களே. எவ்வளவு வசூலாகி உள்ளது இன்னும் எவ்வளவு ஆகனும் என சொல்வார்கள்? ஆக மொத்தம் யாருமே மக்களோட பிரச்சனைகளை பெரிதாக எடுத்துக் கொள்வது இல்லை.." என்று கூறினார்.












Click it and Unblock the Notifications