அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை தமிழக அரசால் நடைமுறைப்படுத்த முடியுமா? என்ன சிக்கல்
சென்னை: தமிழக அரசு பழைய ஓய்வதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த இன்று வரை தயங்கி வருகிறது. முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு ஆட்சி பொறுப்புக்கு வந்து 4 ஆண்டுகள் முடிந்துவிட்டது. அடுத்த ஆண்டு சட்டசபையில் அறிவித்தாலும், நடைமுறைக்கு வருவது என்பது 2026ல் ஆட்சிக்கு வரும் புதிய அரசு கையில் தான் உள்ளது. பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்துவது சாத்தியமா? அரசுக்கு நடைமுறையில் என்ன சிக்கல் என்பதை பார்ப்போம்.
2003ம் ஆண்டு வரை தமிழ்நாட்டில் நடைமுறையில் இருந்து பழைய ஓய்வூதியத் திட்டம் (OPS) என்பது அரசு ஊழியர்களுக்கு அவர்களின் கடைசி சம்பளத்தில் 50% ஓய்வூதியமாக வழங்கும் ஒரு திட்டமாகும். இந்தத் திட்டத்தின் கீழ் கணிசமான அரசு ஊழியர்கள் மாதந்தோறும் ஓய்வூதியம் பெற்று வருகிறார்கள்.

இந்த திட்டப்படி குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் பணி முடித்த அரசு ஊழியர்களுக்கு, அவர்களின் கடைசி சம்பளத்தின் அடிப்படையில் உத்தரவாதம் செய்யப்பட்ட ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. பணியில் இருந்து விலகுபவர்களுக்கு பணிக்கொடை, ஓய்வூதியத்தில் மூன்றில் ஒரு பங்கினை ஒப்படைத்து அதற்கான தொகையை முன்கூட்டியே பெறுவது, குடும்ப ஓய்வூதியம் ஆகிய பலன்கள் இருக்கின்றன.
ஆனால் அதற்கு பிறகு நடைமுறைப்படுத்தப்பட்ட புதிய ஓய்வூதிய திட்டப் படி, அரசு ஊழியர்கள் தங்களது ஓய்வூதியத் தொகையை பங்களிப்பு அடிப்படையில் சேமித்து, ஓய்வு பெறும் போது ஒரு தொகையாகப் பெற்று வருகிறார்கள். இதனால் பெரிய நன்மை அரசு ஊழியர்களுக்கு இல்லை..
ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம்
அதேபோல் மத்திய அரசு புதிதாக அறிமுகம் செய்துள்ள ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தில், முழு ஓய்வூதியம் பெற 25 ஆண்டுகள் பணியாற்றி இருக்க வேண்டும் என்று நிபந்தனை உள்ளது. உண்மையில் பல அரசு ஊழியர்கள் 20 ஆண்டுகளில் ஓய்வு பெறுகின்றனர். அதனால், இத்திட்டத்திற்கு அவர்கள் தகுதியற்றவர்கள் ஆவார்கள். இதனால் தான் புதிய ஓய்வூதிய திட்டம் மற்றும் ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தை ஏற்க தமிழக அரசு ஊழியர்கள் மறுக்கிறார்கள்.
பழைய ஓய்வூதியம் குறித்து திமுக வாக்குறுதி
பழைய ஓய்வூதியத் திட்டம் வேண்டும் என்கிற முதன்மைக் கோரிக்கைக்காக தமிழக அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் தொடர் போராட்டத்தில் இப்போது இறங்கி உள்ளனர். திமுக ஆட்சிக்கு வரும் முன்பு அளித்த தேர்தல் வாக்குறுதி எண் 309 இல் , அரசு ஊழியர், ஆசிரியர்களுக்குப் புதிய ஓய்வூதியம் கைவிடப்பட்டு, பழைய ஓய்வூதியத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்று கூறப்பட்டிருந்தது. ஆனால் அரசு அதற்கு பதில் பழைய ஓய்வூதியம் கொண்டுவருவது தொடர்பாக கமிட்டி அமைத்துள்ளது. இந்த கமிட்டி அறிக்கையின் படி தான் அரசு முடிவெடுக்கும் என தெரிகிறது.
ஓய்வூதியம் வாங்கும் அரசு ஊழியர்கள் விவரம்
தமிழ்நாட்டில் தற்போது பணியில் இருக்கும் தமிழக அரசு ஊழியர், ஆசிரியர்களில் 2.29 லட்சம் பேர் பழைய ஓய்வூதியத் திட்டத்திலும், 6.14 லட்சம் பேர் புதிய ஓய்வூதியத் திட்டத்திலும் இருப்பதாக புள்ளி விவரம் ஒன்றில் கூறப்பட்டுள்ளது. ஆயுள் காப்பீட்டு ஓய்வூதிய நிதியில் அரசு சேமித்து வைத்துள்ள ஊழியர்களின் தொகையான ரூ.73,974 கோடி தொகையில் இருந்து கணிசமான தொகையை வைத்து பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த முடியும் என்றும் தற்போது புதிய ஓய்வூதியத் திட்டத்தில் ஆண்டு தோறும் ஓய்வு பெறும் சுமார் 8 ஆயிரம் பேருக்கும் இந்த திட்டத்தை செயல்படுத்த முடியும் என்றும் அரசு ஊழியர்கள் கூறுகிறார்கள்.
பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த எவ்வளவு செலவாகும்
மேலும் தற்போது ரூ.37,763 கோடி ஓய்வூதியத்திற்காக செலவு செய்யும் அரசுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்தினால் ரூ.376 கோடிதான் கூடுதல் செலவாகும் என்றும், அந்த தொகையையும் வட்டி மூலம் அரசு பெற முடியும் என்றும் ஆனால் அரசு நடைமுறைப்படுத்துவதில் தயக்கம் காட்டி வருகிறது என்றும் அரசு ஊழியர்கள் கூறுகிறார்கள்.
பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்
இது தொடர்பாக நிதியமைச்சராக இருந்த பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கடந்த 2022ம் ஆண்டு சட்டசபையில் பேசும் போது, "பழைய ஓய்வூதியத் திட்டத்தின் படி தனிநபர் ஒருவருக்கு 2 லட்சம் ரூபாய் செலவாகிறது. அதேநேரம் புதிய ஓய்வூதியத் திட்டத்தின் படி தனிநபர் ஒருவருக்கு 50 ஆயிரம் ரூபாய்தான் செலவிடப்படுகிறது. எனவே, பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துவது சாத்தியமற்றது என்றும் கூறினார். இப்போது அரசு பழைய ஓய்வூதியம், புதிய ஓய்வூதியம், ஒருங்கிணைந்த ஓய்வூதியம் ஆகியவற்றை ஆராய குழு அமைத்துள்ளது. உண்மையில் அரசு என்ன செய்ய போகிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்..












Click it and Unblock the Notifications