சமூக வலைதளங்களில் வதந்தி.. பொய் பரப்பிய அதிமுக நிர்வாகி சிடிஆர் நிர்மல்குமார் மீது வழக்கு!
சென்னை: சமூக வலைதளத்தில் பொய்யான தகவலை பரப்பிய புகாரில் அதிமுக நிர்வாகி சி.டி.ஆர். நிர்மல்குமார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை மெரினாவில் மழைநீரால் மின்கசிவு ஏற்பட்டதாக பொய்யான தகவலை பரப்பிய புகாரில் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஃபெஞ்சல் புயல் காரணமாக கொட்டிய கனமழை பல மாவட்டங்களை புரட்டி எடுத்த நிலையில், சென்னை பெரிய ஆபத்தின்றி தப்பியது. சென்னையின் தாழ்வான பகுதிகளில் கனமழை காரணமாக மழைநீர் தேங்கி இருந்த நிலையில், தமிழக அரசு மற்றும் சென்னை மாநகராட்சி நிர்வாகத்தின் நடவடிக்கைகள் காரணமாக விரைவாகவே வெள்ள நீர் வடிந்தது.

அந்த சமயத்தில் சென்னை மெரினா கடற்கரை அருகே மழைநீரில் மின்கசிவு ஏற்பட்டதாகக் கூறி காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டது. அதிமுக நிர்வாகியான சிடிஆர் நிர்மல் குமார், தனது எக்ஸ் பக்கத்தில், அந்த வீடியோவை பகிர்ந்து, "எங்கே பார்த்தாலும் மின் கசிவால் ஏற்படும் தீப்பொறி.. ஏன் இவ்வளவு அஜாக்கிரதை முதல்வரே?" எனக் கேள்வி எழுப்பி பதிவிட்டிருந்தார்.
அந்த வீடியோ, தமிழ்நாட்டில் எடுக்கப்பட்டது அல்ல. கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பாக வியட்நாம் நாட்டின் கேன் தோ நகரில் மழை வெள்ளத்தின்போது எடுக்கப்பட்டது என தமிழ்நாடு உண்மை சரிபார்ப்பு குழு ஆய்வு செய்து தெரிவித்தது.
மியான்மரில் நடந்ததை சென்னையில் நடந்தது போல் அதிமுக நிர்வாகி சி.டி.ஆர். நிர்மல்குமார் பதிவிட்டது கண்டுபிடிக்கப்பட்டது. தமிழ்நாடு அரசின் உண்மை சரிபார்ப்பகம் கண்டறிந்ததை அடுத்து, தான் வெளியிட்ட பதிவை நீக்கினார் நிர்மல்குமார். அதற்குள் அவரது பதிவை ஏராளமானோர் பகிர்ந்து, அது பலரையும் சென்றடைந்தது.
சமூக வலைதளத்தை கண்காணிக்கும் சென்னை காவல்துறை பிரிவு, சிடிஆர் நிர்மல்குமார் மீது புகார் அளித்தது. புகாரின் அடிப்படையில் அதிமுக நிர்வாகி சிடிஆர் நிர்மல்குமார் மீது 3 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications