இந்து அறநிலையத்துறையின் 2 அறிவிப்புகள்.. தடை கோரி வழக்கு.. தள்ளுபடி செய்ய அரசு வலியுறுத்தல்
சென்னை: தமிழ்நாடு அரசின் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம், கோவில் கருவறைக்குள் தமிழ் என்ற அறிவிப்புக்கு தடை விதிக்கக்கோரி தொடுக்கப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்ய தமிழ்நாடு அரசு வலியுறுத்தி உள்ளது.
Recommended Video
சென்னை சிஐடிநகரைச் சேர்ந்த எஸ்.ஸ்ரீதரன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் "தமிழகத்தில் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் 44 ஆயிரம் கோயில்கள் இருக்கிறது. இதில் 500 கோயில்களில் மட்டுமே ஆகம விதிகள் முறையாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த 500 கோயில்களில் ஆகம விதிகளின்படி குறிப்பிட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமே கோயிலின் கர்ப்பக்கிரகத்துக்குள் நுழைந்து அர்ச்சனை, பூஜைகள் செய்ய முடியும்.
எனவே, அதன்படியே ஆகம விதிகளை முறையாகக் கடைபிடிக்கும் கோயில்களில், குறிப்பிட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்களை மட்டுமே கோயில் அர்ச்சகர்களாக நியமிக்க வேண்டும். ஆனால் இதை மீறி அர்ச்சகர் பயிற்சி முடித்து விட்டால் ஆட்சியமைத்த 100 நாட்களில் அனைத்துசாதியினரையும் அனைத்து கோயில்களிலும் அர்ச்சகர்களாக நியமிப்போம் என தமிழக அறநிலையத் துறை அமைச்சர் தெரிவித்து இருக்கிறார். இது ஏற்புடையது அல்ல.
வியப்பாக இருக்கிறது.. இந்து சமய அறநிலையத் துறை அமைச்சரின் செயல்பாடு.. பாஜகவில் இருந்து ஒரு பாராட்டு
மற்ற சமுதாயம்
தமிழக அரசின் இந்த அறிவிப்பு குறிப்பிட்ட சமூகத்தினரிடையே குழப்பத்தை உருவாக்கும். கோயில்களில் தமிழில் அர்ச்சனை செய்ய அனுமதித்தால் அதன் மூலமும் மற்ற சமுதாயத்தைச் சேர்ந்தவர்களை கோயில் கர்ப்பக்கிரகத்துக்குள் மறைமுகமாக அனுமதிப்பதுபோல் ஆகும்.
அர்ச்சகர்கள்
எனவே, தமிழில் அர்ச்சனை செய்ய தடை விதித்து, ஆகம விதிகளைக் கடைபிடிக்கும் கோயில்களில் குறிப்பிட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்களை மட்டுமேஅர்ச்சகர்களாக நியமிக்க உத்தரவிட வேண்டும்" இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். .
அரசு வாதம்
இந்த வழக்கு, தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில் வழக்கறிஞர் பி.முத்துக்குமார் ஆஜராகினார். அப்போது அவர் வாதிடுகையில் "சிவாச்சாரியார்கள் தொடர்ந்த ஒரு வழக்கில் ஆகம விதிகளின்படி பயி்ற்சி முடித்தவர்கள் கோயில் அர்ச்சகர் ஆகலாம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. எனவே அதற்கு முரணாக தொடரப்பட்டுள்ள இந்த வழக்கை ஆரம்பக் கட்டத்திலேயே தள்ளுபடி செய்ய வேண்டும்:" என கோரினார்.
உயர்நீதிமன்றம்
அதையடுத்து இதுதொடர்பான உச்ச நீதிமன்ற உத்தரவுகளை ஆய்வு செய்துவிட்டு வாதங்களை முன்வைக்க மனுதாரருக்கு அறிவுறுத்திய உயர்நீதிமன்ற நீதிபதிகள், வழக்கு விசாரணையை 3 வாரங்களுக்கு தள்ளிவைத்துள்ளனர்.