ஆளுநராக மீண்டும் ஆர்என் ரவியை நியமிக்க கூடாது.. இல்லையென்றால்.. அமித்ஷாவுக்கு பறந்த பரபரப்பு கடிதம்
சென்னை: தமிழக ஆளுநர் ஆர். என். ரவியின் பதவிக் காலம் ஜூலை 31 ஆம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில் அவரை 2-வது முறையாக ஆளுநராக நியமிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு மூத்த வழக்கறிஞர் எஸ் துரைசாமி கடிதம் எழுதியுள்ளார்.
தமிழக ஆளுநராக கடந்த 2021 ஆம் ஆண்டு செப்டம்பர் 1 ஆம் தேதி ஆர் என் ரவி நியமிக்கப்பட்டார். நாகலாந்தில் இரண்டு வருடம், தமிழ்நாட்டில் மூன்று வருடம் என அவரின் பதவிக்காலம் ஜூலை 31 ஆம் தேதியுடன் முடிவடைகிறது. பொதுவாக மாநில ஆளுநராக நியமனம் செய்யப்படுபவர் 5 ஆண்டுகள் அந்த பதவியில் இருக்கலாம்.

அதன்பிறகு, அடுத்த ஆளுநர் நியமிக்கப்படும் வரை அவரது பதவி நீட்டிக்கப்படலாம், அல்லது மத்திய அரசு விரும்பும் பட்சத்தில் ஆளுநராக மீண்டும் நியமிக்கப்படலாம். தமிழக ஆளுநராக இருக்கும் ஆர்.என். ரவியின் பதவிக் காலம் இந்த மாத இறுதியில் நிறைவடைகிறது. இதனால், தமிழ்நாடு, புதுச்சேரி, தெலுங்கானா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்களை நியமிக்கலாமா என்பது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை ஆளுநர் ஆர்.என். ரவியின் பதவிக்காலம் நீட்டிக்கப்படலாம் என்றே கூறப்படுகிறது. இதற்கு வலு சேர்க்கும் விதமாக தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி கடந்த 15 ஆம் தேதி டெல்லி சென்றார். அங்கு பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, தர்மேந்திர பிரதான், கிரண் ரிஜிஜு ஆகியோரை சந்தித்து முக்கிய ஆலோசனை நடத்தினார். அப்போது, பிரதமர் மோடியிடமும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடமும் பதவி நீட்டிப்பு தொடர்பாக பேசியதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் தான், தமிழ்நாடு ஆளுநர் ஆர் என் ரவியை இரண்டாவது முறையாக ஆளுநராக நியமிக்க திட்டம் உள்ளதா என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் சென்னை உயர் நீதிமன்றமத்தின் மூத்த வழக்கறிஞர் என் துரைசாமி கடிதம் அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாவது:-
தமிழக ஆளுநர் ஆர் என் ரவியின் பதவிக்காலம் ஜூலை 31 ஆம் தேதி முடிவடைய உள்ளது. இதனால் தமிழகத்தில் அடுத்த கவர்னர் யார் என்ற கேள்வி எழுந்திருந்த நிலையில், மீண்டும் ஆளுநர் ஆர் என் ரவியை தமிழக ஆளுநராக நியமிக்க மத்திய அரசு ஆலோசித்து வருவதாக தகவல்கள் வருகின்றன. ஒருவேளை ஆர் என் ரவி மீண்டும் தமிழ்நாடு ஆளுநராக நியமிக்கப்பட இருந்தால் அது அரசியலைமைப்பு சட்டத்திற்கு விரோதமானது. இரண்டாவது முறையாக ஆர் என் ரவி ஆளுநராக நியமிக்கப்பட்டால் வழக்கு தொடரப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும், "ஆர் என் ரவியை இரண்டாவது முறையாக ஆளுநராக நியமிக்கக்கூடிய திட்டம் இருக்கிறதா?.. புதிய ஆளுநர் நியமிக்கப்படும் வரை ஆர் என் ரவியே பதவியில் தொடருவதற்கான திட்டம் இருக்கிறதா?.. ஆர் என் ரவிக்கு பிறகு புதிய ஆளுநர் நியமிக்கப்படுவதற்கான திட்டம் இருக்கிறதா? என்று தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கேள்வி கேட்கப்பட்டுள்ளது. இந்த கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டும்" என்றும் அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications