"அந்த தொகுதிகளில்" ஓட்டுக்கு 5000.. பரபரக்கும் தமிழக தேர்தல் களம்.. கியரை மாற்றும் வருமான வரித்துறை
சென்னை: இது வெறும் டிரைலர் தான் அடுத்த அடுத்த நாட்களில் மெயின் பிக்சர்கள் காட்டப்படும் என்கிறார்கள் வருமானவரித் துறை வட்டாரத்தில்.
தேர்தல் நெருங்கும் நிலையில் வரிசையாக வருமான வரி சோதனைகள் அணி வகுக்கின்றன.
இன்று காலை முதல் சென்னை நீலாங்கரையில் இருக்கும் ஸ்டாலின் மருமகன் சபரீசன் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகிறார்கள்.
சென்னை ரெய்டுகள்
இதேபோல சபரீசனின் நண்பர்களான சென்னை அண்ணாநகர் திமுக எம்.எல்.ஏ. மோகனின் மகன் கார்த்திக் மோகன், பாலா ஆகியோரது வீடுகள், அலுவலகங்களிலும் வருமான வரி சோதனை நடைபெறுகிறது. கரூர் மாவட்டத்தில் செந்தில் பாலாஜிக்கு சொந்தமான இடங்களிலும் ரெய்டுகள் நடைபெற்று வருகின்றன.
அது போன வாரம்
கடந்த வாரம் திமுக மூத்த பிரமுகர், எ.வ. வேலு தொடர்பான இடங்களில் வருமான வரித்துறை சோதனைகள் நடைபெற்றன. ஆனால், அங்கு சில ஆவணங்கள்தான் கிடைத்ததாகவும் எதிர்பார்த்த பணம் இல்லை என்றும் கூறப்படுகிறது.
பணம் முக்கியம்
என்னதான் பிரச்சாரங்கள், தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள், கட்சி சின்னங்கள் உள்ளிட்டவை வாக்களிப்பு நாளில் முக்கிய பங்கு வகிக்கும் என்றாலும், கடைசி 2 நாட்களில் ஆறு போல பாயும் பணப்பட்டுவாடா, வாக்குகளை வேறு பக்கமாக மாற்றக்கூடிய சக்தி கொண்டதாக இருக்கிறது. ஒவ்வொரு கட்சியும் தனது வேட்பாளர்களுக்கு குறிப்பிட்ட தொகையை ஒதுக்கி அதை வாரி வழங்குவதற்கு உத்தரவிடும் காலம் தேர்தல் வாக்குப்பதிவுக்கு முந்தைய சில தினங்கள்தான்.
கடைசி நேர மூவ்
ஏப்ரல் 6ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. தேர்தலுக்கு இன்னும் 4 நாட்கள்தான் இருப்பதால், ஒரு கட்சியிடம் இருந்து அடிமட்ட நிர்வாகிகளுக்கு பணம் பட்டுவாடா நடக்கும் காலம் இதுதான். ஒவ்வொரு கட்சியிலும் யார் பண விஷயங்களை கையாளுவார்களோ அவர்கள் வீடுகளிலும் அலுவலகங்களிலும் வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகிறது.
இனி ரெய்டு அதிகரிக்கும்
கடந்த சில தினங்களாகவே ரெய்டுகள் நடக்கின்றன. ஆனால் அடுத்தடுத்த நாட்களில் இந்த சோதனை என்னும் விரிவுபடுத்தப்படும், வருமான வரி சோதனை என்பது அன்றாட நிகழ்வாக மாறப்போகிறது என்றும் கூறப்படுகிறது. திமுக மட்டுமல்ல, ஆளும் கட்சி பிரமுகர்கள் வீடுகள் சிலவற்றிலும் சில தினங்களாக ரெய்டுகள் நடந்துள்ளன.
ஓட்டுக்கு 5000
திமுக பொதுச் செயலாளர் துரைமுருகனிடம் இதுபற்றி கேட்டபோது, திமுகவினரிடம் ரெய்டு நடத்துவது, பயமுறுத்துவதற்காக.. ஆளுங்கட்சி பிரமுகர்கள் வீடுகளில் நடத்தப்படும் சோதனை கண்துடைப்புக்காக.. என்று தெரிவித்தார். தமிழகத்தில் மினிமம் 500 முதல் சராசரியாக ஆயிரம் ரூபாய் என்ற அளவில் ஓட்டுக்கு "டிமாண்ட்" இருக்கிறதாம். சில விஐபி தொகுதிகளில் ஒரு ஓட்டுக்கே, ஐந்தாயிரம் ரூபாய் வரையிலும் வழங்கப்பட இருப்பதாக தகவல்கள் கசிகின்றன.
அதிருஷ்டம் தட்டும்
இந்த நிலையில், அடுத்தடுத்த நாட்களில் ரெய்டு மிகப்பெரிய அளவுக்கு தொடரும் என்கிறார்கள். ஆனால், அதற்கும் மாற்று வழிகளை கண்டுபிடித்து வைத்துள்ளனராம் கட்சியினர். இனி வரும் நாட்கள் இரவு நேரங்களில் மக்கள் ஈஸியாக தூங்க மாட்டார்கள். எப்போது வேண்டுமானாலும் "அதிருஷ்டம்" கதவை தட்டும். அதுவும் இரவு நேரத்தில்தான் தட்டும் என்ற "விழிப்புணர்வு" இதற்கு காரணமாம்.