காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை.. கபினி அணையில் இருந்து 25,000 கன அடி நீர் திறப்பு!
சென்னை: கர்நாடக மாநிலத்தில் உள்ள கேஆர்எஸ், கபினி அணைகளில் இருந்து உபரிநீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. கபினி அணையில் இருந்து காவிரியில் விநாடிக்கு 25,000 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருவதால் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலத்தில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும், கேரள மாநிலம் வயநாட்டிலும் பெய்த கனமழை காரணமாக கர்நாடகாவில் உள்ள கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகள் நிரம்பி உள்ளன. இரு அணைகளுக்கும் வரும் நீரின் அளவைப் பொறுத்து உபரிநீர் திறக்கப்பட்டு வருகிறது.

காவிரி ஆற்றில் நீர் வரத்து
கடந்த வாரத்தில் 25 ஆயிரம் கன அடி அளவிற்கு உபரிநீர் திறக்கப்பட்ட நிலையில் கடந்த சில நாட்களாக 12 ஆயிரம் கன அடியாக குறைக்கப்பட்டது. இதனால் ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து குறைந்து வந்தது. நேற்று காலை நீர்வரத்து வினாடிக்கு 12 ஆயிரம் கன அடியாக இருந்த நிலையில் இன்று காலை 8 ஆயிரம் கனஅடியாக குறைந்தது.
இதேபோல் மேட்டூர் அணைக்கும் நீர்வரத்து குறைந்துள்ளது. நேற்று காலை 10,109 கனஅடி நீர் வந்து கொண்டிருந்த நிலையில் இன்று காலை 7,815 கன அடியாக குறைந்தது. அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு கடந்த 5 நாட்களாக வினாடிக்கு 18 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வந்த நிலையில் இன்று 20 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
மேட்டூர் அணைக்கு நீர்வரத்தை விட திறப்பு அதிகமாக இருப்பதால் நீர்மட்டம் சரிந்து வருகிறது. நேற்று காலை 113.37 அடியாக இருந்த நீர்மட்டம் இன்று 112.85 அடியாக குறைந்தது. அணையின் நீர் இருப்பு 82.52 டிஎம்சியாக உள்ளது.
கிருஷ்ணராஜ சாகர் அணை
இதற்கிடையே கர்நாடகாவின் கிருஷ்ணராஜ சாகர் அணையில் இருந்து நேற்று பிற்பகல் முதல் 30 ஆயிரம் கன அடி உபரிநீர் திறக்கப்பட்டது. இதனால் அம்மாநில காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இந்நிலையில் இன்று அணைக்கு நீர்வரத்து 20,315 கனஅடியாக குறைந்த நிலையில், நீர்திறப்பும் 18,300 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது.
கபினி அணையில் நீர் திறப்பு அதிகரிப்பு
இதேபோல் கபினி அணையில் இருந்து வினாடிக்கு 12 ஆயிரம் கன அடி வீதம் காவிரியில் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வந்தது. இந்நிலையில் இன்று, கபினி அணையில் இருந்து காவிரியில் 25,000 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. கபினி அணைக்கு 20,000 கன அடி நீர் வந்து கொண்டிருக்கும் நிலையில் 25,000 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.
வெள்ள அபாய எச்சரிக்கை
இதனால் காவிரியில் நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து வருகிறது. ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர் வரத்து அதிகரித்து வருகிறது. கர்நாடக அணைகளில் இருந்து உபரிநீர் திறப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளதால் மேட்டூர் அணை நீர்மட்டம் வரும் நாட்களில் வேகமாக உயர வாய்ப்பு உள்ளது. கர்நாடக அணைகளில் இருந்து உபரி நீர் திறக்கப்பட்டு உள்ளதால் காவிரி கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு மத்திய நீர்வளத்துறை அறிவறுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications