கரூரில் விஜய் மீது கல் வீச முயற்சியா? உங்களுக்கு யார் சொன்னது? ஜான் ஆரோக்கியசாமிக்கு சிபிஐ சம்மன்?
சென்னை: கரூர் கூட்ட நெரிசல் விவகாரத்தில் நடிகர் விஜய்யை தொடர்ந்து தவெகவின் வியூக வகுப்பாளர் ஜான் ஆரோக்கியசாமிக்கு சிபிஐ சம்மன் அனுப்பப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
2025 ஆம் ஆண்டு செப்டம்பர் 27ஆம் தேதி கரூர் வேலுச்சாமிபுரத்தில் தவெக சார்பில் பிரச்சார பொதுக் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் விஜய்யை காண முண்டியடிக்கும் போது நெரிசல் ஏற்பட்டு 41 பேர் பலியாகிவிட்டனர்.

இது தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த விசாரணையை ஓய்வு பெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி, மூத்த ஐபிஎஸ் அதிகாரிகள் உள்ளிட்டோர் அடங்கிய குழு கண்காணித்து உச்சநீதிமன்றத்தில் அறிக்கையை சமர்ப்பிக்கும்.
இந்த நிலையில் இந்த வழக்கில் புஸ்ஸி ஆனந்த், நிர்மல் குமார், ஆதவ் அர்ஜுனா, நிர்மல் குமார், மதியழகன், சட்டம் ஒழுங்கு ஏடிஜிபியாக இருந்தவரும், தற்போதைய தமிழக ஆயுதப்படை டிஜிபியுமான டேவிட்சன் தேவாசிர்வாதம் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டது.
அது போல் நடிகர் விஜய்க்கும் சிபிஐ சம்மன் அனுப்பியிருந்தது. அதன் பேரில் அவர் கடந்த 12 ஆம் தேதி ஆஜரானார். அவரிடம் 7 மணி நேரம் சிபிஐ அதிகாரிகள் பல்வேறு கேள்விகள் கேட்டனர்.
இதையடுத்து அவரிடம் அடுத்த நாளான ஜனவரி 13 ஆம் தேதியும் விசாரணைக்கு வருமாறு சிபிஐ அதிகாரிகள் கூறினர். ஆனால் விஜய்யோ தவெக சார்பில் சென்னையில் பொங்கல் விழாவில் கலந்து கொள்ளவிருப்பதால் வேறு நாளில் ஆஜராவதாக அனுமதி கேட்டார்.
அதற்கு அதிகாரிகள், வேறொரு நாளில் ஆஜராவதாக இருந்தால் விலக்கு அளிப்பதாக தெரிவித்தனர். அந்த வகையில் விஜய்க்கு ஜனவரி 19-ஆம் தேதி சம்மன் அனுப்பப்பட்டது. அதன்பேரில் அவர் இன்று டெல்லிக்கு புறப்படுகிறார்.
இந்த நிலையில் தவெகவின் வியூக வகுப்பாளரும் நடிகர் விஜய்யின் ஆலோசகருமான ஜான் ஆரோக்கியசாமியையும் விசாரணைக்கு அழைக்க சிபிஐ முடிவு செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.
காரணம், நடிகர் விஜய்யின் பிரச்சார பயண கூட்டங்களை திட்டமிடுதலில் ஜான் ஆரோக்கியசாமிக்கு முக்கிய பங்கு இருக்கிறதாம். அவர் வடிவமைத்து கொடுத்ததன் அடிப்படையில் தமிழகத்தில் விஜய் பிரச்சார பயணம் மேற்கொண்டிருந்தாராம்.
மேலும் கரூர் சென்ற விஜய்யின் வாகனத்தை அனுமதிக்கப்பட்ட இடத்தை கடந்து சென்று நிறுத்தி பேசுமாறு கட்சியினருக்கும் வாகன ஓட்டுநருக்கும் உத்தரவிடப்பட்டதாம். அந்த உத்தரவை இட்டது ஜான் ஆரோக்கியசாமிதானாம். மேலும் அந்த வாகனம் எங்கு நிறுத்த வேண்டும் என அனுமதிக்கப்பட்ட இடத்தில் வாகனத்தின் மீது கற்கள் வீசக் கூடும் என்பதால் ஜான் ஆரோக்கியசாமி கூறியதன் பேரில் வாகனத்தை மக்கள் கூட்டத்தில் இயக்கியதாக விசாரணைக்கு ஆஜரான தவெகவினர் தெரிவித்துள்ளனர்.
எனவே விஜய்யின் வாகனம் மீது கற்கள் வீசப்படும் என்ற தகவல் ஜான் ஆரோக்கியசாமிக்கு எப்படி தெரியும்? அவரிடம் அந்த தகவலை யார் கூறியது, அதன் உண்மைத்தன்மை என்ன என்பது குறித்தும் சிபிஐ விசாரிக்க வேண்டி இருக்கிறதாம்.
இதனால் ஜான் ஆரோக்கியசாமியிடம் விசாரணை நடத்த விரைவில் சிபிஐ சம்மன் அனுப்ப போகிறதாம். நாளை சிபிஐ முன்பு 2ஆவது நாளாக விஜய் ஆஜராகிறார், அவரிடம் சிபிஐ என்ன கேட்கும் என்பது குறித்து எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளன.












Click it and Unblock the Notifications