CBI raid: சென்னை மீனம்பாக்கம் உள்பட 6 இடங்களில் சிபிஐ சோதனை.. தங்க நகை வியாபார முறைகேடா? பரபரப்பு
சென்னை: தமிழகத்தில் இன்று 6 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள். சென்னை மீனம்பாக்கம், பூக்கடை மற்றும் செங்கல்பட்டு உள்பட 6 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். தங்க நகை வியாபாரம் முறைகேடு தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. சுங்கத்துறை அதிகாரிகள் வீடுகளிலும் இந்த சோதனை நடைபெற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
நாடு முழுவதும் விமான நிலையங்களில் தீவிர கண்காணிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. வெளிநாடுகளில் இருந்து சட்ட விரோதமாக பொருட்கள் எதுவும் கடத்தப்படுகிறதா? என்பதை கண்டுபிடிக்க தீவிர கண்காணிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. எனினும், இதனையும் மீறி விமான நிலையங்களில் சமீப காலமாக தங்கம் கடத்தல் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.

தங்கம் கடத்தல் புகார்
இத்தகைய கடத்தலுக்கு சுங்கத்துறை மற்றும் மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரிகள் ஒருசிலர் துணைபோவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அண்மையில் கன்னட நடிகை ரன்யா ராவ், துபாயில் இருந்து பெங்களூர் ஏர்போர்ட்டில் தங்கம் கடத்தி வந்த போது கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்திய விசாரணையில் ரன்யா ராவ் பலமுறை தங்க கடத்தலில் ஈடுபட்டது தெரியவந்தது.
இவர், சுமார் ரூ.12.56 கோடி மதிப்புள்ள 14.2 கிலோ தங்கத்தை பலமுறை தனது விமான பயணத்தின் மூலம் கடத்தியதாக குற்றம் சாட்டப்பட்டது. இந்த கடத்தலுக்கு மத்திய அரசு ஊழியர்கள் சிலர் ஆதாயம் பெற்று உதவியதாகவும் சிபிஐ தரப்பு குற்றம் சாட்டியது. இதுதொடர்பாக ஏற்கெனவே சிபிஐ வழக்கு பதிவு செய்து விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளது.
காலையிலேயே சிபிஐ சோதனை
இந்த நிலையில் சென்னையில் தங்கக் கடத்தல் விவகாரம் தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் இன்று காலை திடீர் சோதனை நடத்தினர். சென்னை மீனம்பாக்கம், கோயம்பேடு, ஏழுகிணறு உள்பட 6 இடங்களில் சோதனை நடைபெற்றுள்ளது. மீனம்பாக்கம் மற்றும் கோயம்பேடு பகுதிகளில் சுங்கத்துறை அதிகாரி வீட்டிலும், ஏழுகிணறு பகுதியில் தனியார் நகைக்கடை உரிமையாளர் வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது.
முக்கிய ஆவணங்கள் பறிமுதல்?
இதில் கோயம்பேட்டில் சுங்கத்துறை அதிகாரி வீட்டில் சோதனைக்கு சென்றபோது அவருடைய வீடு பூட்டப்பட்டிருந்ததாகவும், இதனால், பல மணி நேரம் காத்திருந்து அதிகாரிகள் அங்கு சோதனை செய்ததாகவும் சொல்லப்படுகிறது. துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் சிபிஐ சோதனை நடைபெற்றது. இந்த சோதனையின் முடிவில், முறைகேடு தொடர்பாக முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன.
சிபிஐ அதிகாரிகள் விளக்கம்
எனினும், சிபிஐ தரப்பில் ரெய்டு தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிக்கை எதுவும் தரப்படவில்லை. சிபிஐ அதிகாரிகள் தரப்பில் இது பற்றி கேட்ட போது, சோதனையானது ஆரம்பக் கட்டத்தில் மட்டுமே உள்ளது. எனவே, இது தொடர்பான விவரங்களை தற்போது வெளியிட இயலாது. சோதனை முடிவடைந்த பிறகு உரிய தகவல் அளிக்கப்படும்" என்றனர். இன்று காலையிலேயே சென்னை மீனம்பாக்கம் உள்பட பல்வேறு இடங்களில் சிபிஐ நடைபெற்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.












Click it and Unblock the Notifications