கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழாசிரியர்களை மத்திய பாஜக அரசு நியமிப்பதுதான் பிரச்சனைக்கு தீர்வு
சென்னை: தமிழகத்தில் செயல்படும் மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழ் மொழி பாடம் கட்டாயமாக்கப்பட்டு போதுமான தமிழாசிரியர்களை நியமிப்பதுதான் அத்தனை சர்ச்சைகளுக்கும் முடிவு கட்டும் என்பது கல்வியாளர்கள் கருத்து.
மத்திய அரசு பணியில் இருக்கும் ஊழியர்களின் குழந்தைகள் கல்வி கற்பதற்காக கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் உருவாக்கப்பட்டன. ஆனால் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள், பொதுசமூகத்தில் இருந்து அன்னியப்படுத்தப்பட்டதாகவே நடைமுறையில் இருந்து வருகின்றன.
அரசு பள்ளிகள், சிபிஎஸ்இ பாடப் பள்ளிகளுக்கு இடையேயான இடைவெளி கூட பொதுசமூகத்தில் மிக மோசமான வேறுபாடாக இருந்தது இல்லை. கேந்திரிய வித்யாலயா பள்ளிகள்தான் மிக மிக அன்னியப்படுத்தப்பட்டு இருக்கின்றன. ஏனெனில் இந்த பள்ளிகளில் சமஸ்கிருதம், இந்தி ஆகியவைதான் கட்டாயம்; கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழ் மொழியை படிக்காமலேயே படிக்கவும் முடியும் என்கிற அவலநிலை கட்டமைக்கப்பட்டுள்ளது.
அடிப்படை கட்டமைப்பு
திட்டமிட்டு கட்டமைக்கப்பட்ட இந்த அவலத்தை மத்திய அரசுகள்தான் இதுவரை அரங்கேற்றி உள்ளன. குறிப்பாக கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழ் கல்வி முறை எப்படியானதாக இருக்கிறது? சில மாதங்களுக்கு கேந்திரிய வித்யாலயா வெளியிட்ட வீடியோவில் சொல்லப்பட்ட தகவல் இதுதான். அதாவது கேந்திரிய வித்யாலயா பள்ளியில் 20 மாணவர்கள் விரும்பினால் தான் தமிழ் பயிற்றுவிக்கப்படும்; வாரத்தில் 3 வகுப்புகள்; தமிழை கற்றுத் தரும் தமிழாசிரியர்கள் தற்காலிகமானவர்கள்.. இப்படித்தான் கேந்திரிய பள்ளிகளையே மத்திய அரசு கட்டமைத்திருக்கிறது.
தமிழாசிரியர்கள் நியமனம்
இது தமிழ் மொழிக்கும் தமிழர்களின் கல்வி உரிமைக்கும் பச்சை துரோகம் செய்வதும் படுபாதகமானதுமாகும். ஆனால் இந்த சமூக அநீதியை தட்டிக் கேட்பதற்கு பதிலாக இந்தியை படித்தால் அப்படி உதவியாக இருக்கும்.. சமஸ்கிருதத்தை படிப்பதால் இப்படி நன்மைகள் கிடைக்கும் என சகட்டுமேனிக்கு சப்பை கட்டு கட்டுகிற போக்கைத்தான் பார்க்க முடிகிறது. தமிழ்நாட்டில் இயங்குகிற அல்லது பிற மாநிலங்களில் கேந்திரிய வித்யலயா பள்ளிகளில் ஒரு மாணவன் தமிழ் கற்க விரும்பினால் அதற்கான தமிழாசிரியர்களை நியமிக்க வேண்டிய தார்மீக கடமை மத்திய அரசுக்கு இருக்கிறது.
முதலில் நியமிக்க வேண்டும்
தமிழ்நாட்டில் இயங்குகிற 49 கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் எங்குமே தமிழாசிரியர்களே நியமிக்கப்படவில்லை என்கிற கொடுமை ஈட்டியை பாய்ச்சுகிற செயல் அல்லாமல் வேறு என்னவாக இருக்க முடியும்? தமிழ்நாட்டில் நடத்துகிற இப்பள்ளிகளுக்கு இந்தி, சமஸ்கிருத ஆசிரியர்களுக்கு தமிழக அரசுதான் ஊதியமே தருகிறது; ஆனால் இந்த பள்ளிகளில் தமிழாசிரியர்களை நியமிக்கவே மாட்டோம் என சவடால்தனம் பேசுவதும் சட்டாம்பிள்ளைத்தனமான இந்த அக்கிரமத்தை நியாயப்படுத்துவதும் எவ்வளவு பெரிய அநீதியானது? அத்தனை கேந்திரிய பள்ளிகளிலும் தமிழாசிரியர்களை இதர மொழி பாட ஆசிரியர்களுக்கு இணையானவர்களை நியமித்து உரிய ஊதியத்தை முதலில் வழங்கிடுங்கள்..
இதுதான் அவசியம்
அப்புறம் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளிலும் தமிழ் ஒலிக்குமா? இல்லையா? என்பது தெரிந்துவிடும். இந்த அடிப்படை கட்டமைப்பையே செய்ய மறுத்துக் கொண்டு படிக்க விருப்பம் இல்லை.. படிக்க மாணவர்கள் இல்லை.. படிக்க மாட்டாங்க என பம்மாத்து பேச்சு பேசுவது எல்லாம் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளே வேண்டாம் என்கிற எதிர்விளைவுகளை நோக்கித்தள்ளிவிட்டுவிடும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.