கடலூர், விழுப்புரம், மயிலாடுதுறையில் கனமழைக்கு வாய்ப்பு... குமரிக்கடலில் பலத்த காற்று வீசும்
தமிழகத்தில் நாளை முதல் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.
சென்னை: அதிகாலையில் குளிரும் பகலில் வெயிலும் நீடித்து வரும் நிலையில் தமிழகத்தில் சில தினங்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. கடலூர், விழுப்புரம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையோர மாவட்டங்களில் பனியின் தாக்கம் அதிகரித்துள்ளது. உதகையில் 0 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை நீடிக்கிறது. தமிழக கடற்கரையை ஒட்டி நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று முதல் 3ஆம் தேதி வரைக்கும் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் கணித்துள்ளது.

வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பு:
இன்றைய தினம் கடலோர மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழையும், டெல்டா மாவட்டங்கள், கடலூர், விழுப்புரம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் மிதமான மழையும், உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.
நாளைய தினம் கடலூர், விழுப்புரம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கன மழையும், ஏனைய கடலோர மாவட்டங்களில் அநேக இடங்களில் மிதமான மழையும், உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இலேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

ஜனவரி 1ஆம் தேதியன்று கடலூர், விழுப்புரம், மயிலாடுதுறை, செங்கல்பட்டு மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கன மழையும், ஏனைய கடலோர மாவட்டங்களில் அநேக இடங்களில் மிதமான மழையும், உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இலேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.
ஜனவரி 2ஆம் தேதியன்று கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழையும், மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இலேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.
ஜனவரி 3ஆம் தேதி தென் தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் இலேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இலேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 31 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.
கடந்த 24 மணி நேரத்தில் ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் கடலூர் மாவட்டம் புவனகிரியில் தலா 1 செமீ மழை பதிவாகியுள்ளது. 30.12.2021 முதல் 03.01.2022 வரை குமரிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்பதால் இப்பகுதிகளுக்கு செல்லும் மீனவர்கள் எச்சரியகையுடன் செல்லுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.












Click it and Unblock the Notifications