இந்த ரயில்களில் புக்கிங் செய்தவர்கள் சென்னை சென்டரலில் ஏற முடியாது.. ரயில்வே முக்கிய அறிவிப்பு
சென்னை: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தை அடுத்த பேசின்பிரிட்ஜ் மற்றும் வியாசர்பாடி இடையே பாலம் அமைக்கும் பணி நடைபெறுகிறது.இதன் காரணமாக சில ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது
தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி, ஈரோடு - சென்னை சென்ட்ரல் ஏற்காடு விரைவு ரயில் (வண்டி எண்.22650) ஜூன் 11, 13-ம் தேதிகளில் பெரம்பூர் வரை மட்டுமே இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாலக்காடு - சென்னை சென்ட்ரல் விரைவு ரயில் (22652), கேஎஸ்ஆர் பெங்களூரு - சென்னை சென்ட்ரல் விரைவு ரயில் (12658) ஆகியவை வரும் 13-ம் தேதி சென்ட்ரலுக்கு பதிலாக ஆவடி வரை மட்டுமே இயக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தன்பாத் -ஆலப்புழா விரைவு ரயில் (வண்டி எண்.13351), இந்தூர் - கொச்சுவேலி வாராந்திர விரைவு ரயில்(22645) இன்றும், நாளையும் சென்னை சென்ட்ரலுக்கு பதிலாக வியாசர்பாடி, வண்ணாரப்பேட்டை, சென்னை கடற்கரை மற்றும் எழும்பூர் வழியாக மாற்றுப் பாதையில் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
ரயில்வே வெளியிட்டுள்ள மற்ற அறிவிப்புகளையும் இந்த செய்தியில் பார்ப்போம். நாகூர் திருவிழாவையொட்டி தாம்பரத்தில் இருந்து காரைக்கால் வரை சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. ஜூன் 21ஆம் தேதி தாம்பரம் - காரைக்கால் இடையேயும், ஜூன் 22ஆம் தேதி காரைக்கால் - தாம்பரம் இடையேயும் சிறப்பு ரயில் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை - மதுரை இடையே 8 பெட்டிகள் கொண்ட வந்தே பாரத் ரயிலை இயக்க ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ரயில்வே சிக்னலிங், தண்டவாள சீரமைப்பு, மற்றும் ரயில் நிலையத்தை மேம்படுத்தும் பணிகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
கன்னியாகுமரி - ஹவுரா செல்லும் வாராந்திர விரைவு ரயில் இன்று ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. ஒடிசா ரயில் விபத்து காரணமாக பல்வேறு ரயில்கள் தாமதமாக வருவதால் வாராந்திர ரயில் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக ரயில் நிலையங்களில் ரூ.5,000 செலுத்தி அனுமதி பெற்று புதுமணத் தம்பதிகள் போட்டோ ஷூட் நடத்திக்கொள்ளலாம் என்று தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ரயில்பெட்டி முன் நின்று புகைப்படம் எடுக்க கூடுதலாக ரூ.1,500 செலுத்த வேண்டும் என்று அறிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications