பயணிகளே நோட் பண்ணுங்க! தென்மாவட்டம் வழியாக கேரளா செல்லும் ரயில் ரூட்டில் மாற்றம்! இந்த வழியாக போகாது
சென்னை: திருவனந்தபுரம் கோட்டத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் சென்னை எழும்பூர் - குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் பயணிகள் பகல் நேரத்தில் செல்வது என்றால் அதிகம் விரும்புவது குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயிலைதான். சென்னை எழும்பூரில் இருந்து காலை 8.25 மணிக்கு இந்த ரயில் புறப்படும்.

குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயில் தாம்பரம், செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், திண்டிவனம், விழுப்புரம், விருதாச்சலம், பென்னடம், அரியலூர், ஸ்ரீரகங்கம், திருச்சி, மணப்பாறை, திண்டுக்கல், கொடைக்கானல் ரோடு, சோழவந்தான், கூடல் நகர், மதுரை,விருதுநகர், சாத்தூர், கோவில் பட்டி, வாஞ்சிமணியாச்சி, திருநெல்வேலி, நாங்குநேரி, வள்ளியூர், ஆரல்வாய் மொழி, நாகர்கோவில், இரணியல், குளித்துறை, நெய்யடின்கரா, திருவனந்தபுரம், கொல்லம், காயன்குளம் வழியாக எர்ணாகுளம், ஆலுவா, திரிசூர் சென்று குருவாயூருக்கு சென்று சேரும்.
சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் பயணிகள் பலருக்கும் பகல் நேரத்தில் செல்ல ஏதுவாக இந்த ரயில் சேவையை அதிகம் பயன்படுத்துவார்கள். அதேபோல், கேரளாவிற்கு செல்லவும் இந்த ரயிலில் அதிக அளவில் பயணிகள் பயன்படுத்துவதுண்டு. கேரளாவில் இருந்து தமிழகத்திற்கும் தமிழகத்தில் இருந்து கேரளாவிற்கும் தொழில் நிமித்தமாகவும் , மருத்துவம், கல்வி உள்ளிட்ட காரணங்களுக்காக தினமும் ஏராளமான பயணிகள் வந்து செல்கிறார்கள்.
கேரளாவின் முக்கிய நகரங்களுக்கு குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயில் செல்வதால், கேரளாவிற்கு செல்லும் தமிழக பயணிகளும் இந்த ரயிலில் தான் அதிகம் பயணிப்பதுண்டு. இந்த நிலையில் தான் குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயில் செல்லும் வழித்தடத்தில் சில நாட்களுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
திருவனந்தபுரம் கோட்டத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் சென்னை எழும்பூர் - குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, சென்னை எழும்பூரில் இருந்து காலை 9.45 மணிக்கு புறப்பட்டு குருவாயூர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் (வண்டி எண் 16127) வரும் 9 மற்றும் 11-ந் தேததிகளில் கோட்டயம் வழியாக இயக்கப்படும். மேலும் இந்த ரெயில்கள் சங்கனாச்சேரி, திருவல்லா மற்றும் செங்கனூர் ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
அதே போல குருவாயூரில் இருந்து இரவு 11.15 மணிக்கு புறப்பட்டு எழும்பூர் வரும் எக்ஸ்பிரஸ் ரயில் (16128) வருகிற 9-ந் தேதி மட்டும் கோட்டயம் வழியாக இயக்கப்படும். மேலும் இந்த ரயில்கள் சங்கனாச்சேரி, திருவல்லா மற்றும் செங்கனூர் ரயில் நிலையங்களில் நின்று செல்லும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications