தென் மாவட்ட பயணிகளுக்கு குட் நியூஸ்! தீபாவளிக்கு முன் ரெடியாகும் அடுத்த பஸ்டாண்ட்.. எங்கே தெரியுமா?
செங்கல்பட்டு: செங்கல்பட்டில் புதிதாக 2 அடுக்கு பிரம்மாண்டமாக கட்டப்பட்டு வரும் புதிய பேருந்து நிலையம் பயணிகளின் வசதிக்காக வரும் தீபாவளிக்கு முன்பு திறக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல் தளத்தில் ஒரே நேரத்தில் 41 பேருந்துகளை நிறுத்த முடியும் வசதியும், கீழ் தளத்தில் வணிக வளாகம் அமைகிறது. 35 கடைகள், குளிர்சாதன வசதி கொண்ட காத்திருப்பு அறைகள் ஆகியவையும் அமைக்கப்படுகின்றன.
சென்னைக்கு அடுத்தபடியாக அதிவேகமாக வளர்ந்து வரும் இடமாக செங்கல்பட்டுதான் உள்ளது. சென்னையின் புறநகர் மாவட்டமாக இருக்கும் செங்கல்பட்டு பகுதியில் இருந்து நாள்தோறும் பல ஆயிரக்கணக்கான பயணிகள் சென்னைக்கு பல்வேறு காரணங்களாக வந்து செல்கிறார்கள். இதனால், செங்கல்பட்டு ரயில் நிலையம் மற்றும் பேருந்து நிலையங்களில் பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது.

செங்கல்பட்டில் புதிய பேருந்து நிலையம்
இதனால், செங்கல்பட்டு பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் மற்றும் மக்கள் நெரிசல் அதிகரித்து வருகிறது. செங்கல்பட்டு நகரில் தற்போது உள்ள பேருந்து நிலையம் இந்த பயணிகள் கூட்டத்தை கையாளும் வகையில் இல்லை. இதனால், நகர விரிவாக்கம், மக்கள் தொகை பெருக்கத்தை கணக்கில் கொண்டு புதிய பேருந்து நிலையம் கட்ட முடிவு செய்யப்பட்டது.
செங்கல்பட்டில் இருந்து கிளாம்பாக்கம், காஞ்சிபுரம், திருப்பதி, மதுராந்தகம், விழுப்புரம் என பல்வேறு ஊர்களுக்கு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இதனால், புதிய நவீன வசதிகளுடன் புதிய பேருந்து நிலையம் அமைக்க கோரிக்கை வைக்கப்படது. இதன்படி, 9.5 ஏக்கர் பரப்பளவில் சுமார் ரூ.10 கோடி மதிப்பீட்டில் செங்கல்பட்டில் புதிய பேருந்து நிலையம் அமைக்க முடிவு செய்யப்படது.
மாவட்ட ஆட்சியர் ஆய்வு
செங்கல்பட்டு நீதிமன்றம் அருகே உள்ள இடத்தில் இந்த பேருந்து நிலையம் அமைக்கும் பணி கடந்த ஆண்டு ஜனவரி மாதம் தொடங்கப்பட்டது. பேருந்து நிலையம் இரண்டு அடுக்குகளாக கட்டப்படுகிறது. தரைதளம், முதல் தளம் என இரண்டடுக்குகளாக கட்டபட்டு வருகிறது. முதல் தளத்தில் ஒரே நேரத்தில் 41 பேருந்துகளை நிறுத்த முடியும். கீழ் தளத்தில் வணிக வளாகம் அமைகிறது. 35 கடைகள், குளிர்சாதன வசதி கொண்ட காத்திருப்பு அறைகள் ஆகியவையும் அமைக்கப்படுகின்றன.
55 கார்கள், 325 இருசக்கர வாகனங்களும் நிறுத்தும் அளவுக்கு பார்க்கிங் அமைக்கப்படுகிறது. செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் செவ்வாய்க்கிழமை நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். சிஎம்டிஏ அதிகாரிகள், மாவட்ட நிர்வாகிகள் உள்ளிட்டோரும் பேருந்து நிலையம் கட்டப்பட்டு வரும் இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த மாவட்ட ஆட்சியர் அருண் ராஜ் கூறியதாவது:-
தீபாவளிக்கு முன் திறக்கப்படும்
பேருந்து நிலைய கட்டுமான பணிகள் செப்டம்பர் மாதத்திற்குள் முடிவு பெறும் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக தீபாவளிக்கு முன்பாக திறக்கப்படும். தற்போது உள்ள பேருந்து நிலையம் சந்திப்பு அருகே உள்ளது. எனவே புதிய பேருந்து நிலையம் ஜிஎஸ்டி சாலையில் உள்ள போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வாக அமையும்" என்றார்.
14 நடைமேடைகளுடனும் இந்த பேருந்து நிலையம் அமைக்கப்பட உள்ளது. புதிய பேருந்து நிலையம் தீபாவளிக்கு முன்பாக பயன்பாட்டிற்கு வரும் என்று மாவட்ட ஆட்சியர் கூறியிருப்பது பயணிகளுக்கு பெரும் மகிழ்ச்சியை அளித்துள்ளது. தீபாவளி பண்டிகை நாட்களில் சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகள், கார்களால் செங்கல்பட்டு ஜிஎஸ்டி சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் காணப்படும்.
ஜூன் மாதம் திறக்கப்படுமா?
புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட்ட பிறகு ஜிஎஸ்டி சாலையில் போக்குவரத்து நெரிசல் குறையும் என கலெக்டர் கூறியுள்ளதால் தீபாவளி போன்ற பண்டிகை காலங்களில் போக்குவரத்து நெரிசல் வெகுவாக குறைந்து பயண நேரம் மிச்சமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே, சென்னையில் அமைக்கப்பட்டு வரும் புதிய குத்தம்பாக்கம் பேருந்து நிலையம் அடுத்த 50 நாட்களில் திறக்க திட்டமிடப்பட்டுள்ளது. 427 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டு உள்ள குத்தம்பாக்கம் பேருந்து நிலையம் 2025 ஆம் ஆண்டு மே மாதத்திற்குள் கட்டி முடிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. ஜூன் மாதம் மக்களுக்காக திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications