ஆட்டத்தை ஆரம்பித்த மழை.. சென்னையில் இன்று முதல் 10 நாட்களுக்கு பெரிய சம்பவம்! வெதர்மேன் அலர்ட்
சென்னை: தலைநகர் சென்னையில் இந்தாண்டு மே மாதம் நல்ல மழை பெய்த போதிலும், அடுத்து ஜூன் மாதம் மழையே இல்லை. இதனால் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவியது. இதற்கிடையே சென்னையில் இன்று தொடங்கி அடுத்த 10 நாட்களுக்கு மாலை மற்றும் இரவு நேரங்களில் நல்ல மழை பெய்யும் என்று வெதர்மேன் பிரதீப் ஜான் கூறியிருக்கிறார்.
தமிழ்நாட்டில் இந்தாண்டு கோடைக் காலம் கொஞ்சம் வித்தியாசமாகவே இருந்தது. வழக்கமாக மே மாதம் வெயில் படுத்தி எடுக்கும். ஆனால், இந்தாண்டு மே மாதம் மழை கொட்டியது. குறிப்பாக சென்னையில் பல்வேறு இடங்களிலும் நல்ல மழை இருந்தது. ஆனால், அடுத்து ஜூன் மாதம் நிலைமை மாறியது. பெரியளவில் மழை இல்லாமலேயே இருந்தது.

10 நாட்கள் வறண்ட வானிலை
குறிப்பாகக் கடந்த 10 நாட்கள் சென்னையில் வறண்ட வானிலையே நிலவியது. இதனால் வெப்பநிலையும் கணிசமாக உயர்ந்தது. இதன் காரணமாகப் பொதுமக்கள் கடும் சிரமத்தை எதிர்கொண்டனர். ஆனால், இன்று கிளைமேட் மாறிவிட்டது. மாலை நேரத்தில் சென்னையில் பல்வேறு இடங்களில் மழை ஆரம்பித்துவிட்டது. திடீர் மழை சென்னைவாசிகளிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கிடையே இந்த மழை அடுத்த 10 நாட்களுக்குத் தொடரும் என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டரில் மேலும் கூறுகையில், "கேடிசிசி (சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு) வடக்கு தமிழ்நாட்டில் மழை அறிவிப்பு.. 10 வறண்ட நாட்களுக்குப் பிறகு சிறிது நிவாரணம் தரும் வகையில் இருக்கும்.
சென்னை கிளைமேட்
சென்னை மற்றும் புறநகர் மாவட்டங்களான கேடிசிசி பகுதிகளில் கிட்டத்தட்ட 10 வறண்ட நாட்கள் நிலவிய நிலையில், இப்போது சிறிய நம்பிக்கை தென்படுகிறது! இன்று முதல், சென்னையின் பல்வேறு பகுதிகளில் குறுகிய மழையை எதிர்பார்க்கலாம். அடுத்த 10 நாட்களுக்கு மாலை / இரவு நேரங்களில் இந்த குறுகிய கால மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதேநேரம் நகரத்தின் அனைத்து இடங்களிலும் மழை பெய்யாது. ஹிட் அண்ட் மிஸ்ஸாகவே இவை இருக்கும்.
இன்றைய கேடிசிசி வானிலை.. பல பகுதிகளில் குறுகிய மழை பெய்ய வாய்ப்பு அதிகம். மழை பரவலாகவும், கடந்து செல்லும் மழையாகவும் இருக்கும்.. எனவே பரவலாக மழை பெய்யும் என்று எதிர்பார்க்க வேண்டாம். இவை குறுகிய கால மழையைப் போலவே இருக்கும். ஜூன் மாதத்தில் மழை மிஸ்ஸான நிலையில், அதற்குப் பதிலாக இது தென் சென்னைக்கு அதிக மழை தரும் என நம்புகிறேன்.
வட தமிழ்நாட்டின் பிற பகுதிகள்
பின்வரும் மாவட்டங்கள் ஓரிரு இடங்களில் தனிமைப்படுத்தப்பட்ட இடங்களில் மழை பெய்ய வாய்ப்புகள் உள்ளன.. ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் போன்ற மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருக்கிறது.
ஒரு விஷயத்தைக் கவனத்தில் கொள்ளுங்கள்.. இந்த மழைகள் பருவமழையால் ஏற்படுவது இல்லை. உள்ளூர் காரணிகள் மற்றும் வெப்பச்சலனம் காரணமாகவே இந்த மழை பெய்கிறது" என்று அவர் ட்வீட் செய்திருக்கிறார்.
சென்னைவாசிகள்
சென்னையில் ஏற்கனவே பல்வேறு இடங்களிலும் மழை ஆரம்பித்துவிட்டது. இந்த திடீர் மழையால் வெப்பம் குறையும் என்பதால் சென்னைவாசிகள் உற்சாகத்தில் உள்ளனர். அதேநேரம் சரியாக ஆபீஸில் இருந்து கிளம்பும் நேரம் மழை ஆரம்பித்துள்ளதால் வீடு திரும்புவதிலும் மக்கள் சிரமத்தை எதிர்கொண்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications