"இளையராஜாவின் முதல் மாணவர்!" செஸ் ஒலிம்பியாட்டில் மாஸாக தெறிக்கவிட்ட லிடியன் நாதஸ்வரம்! யார் இவர்
சென்னை: செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது என்றால் அது லிடியன் நாதஸ்வரத்தின் பியானோ நிகழ்ச்சி தான்.
Recommended Video
44ஆவது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் இன்று தொடங்கி வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி வரை சென்னை மாமல்லபுரத்தில் நடைபெறுகிறது.
இந்தப் போட்டிகளில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர். இந்தியாவில் செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடைபெறுவது இதுவே முதல்முறையாகும்.

செஸ் ஒலிம்பியாட்
இதற்கான ஏற்பாடுகளைத் தமிழக அரசு சிறப்பாகச் செய்துள்ளது. போட்டிக்காகக் கடந்த சில நாட்களாகவே வீரர்கள் சென்னை வந்த நிலையில், அனைவரும் நிகழ்ச்சி ஏற்பாடுகளை வெகுவாக பாராட்டி வருகின்றனர். இதனிடையே செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழா இன்று நேரு உள்விளையாட்டு அரங்கில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதில் பிரதமர் நரேந்திர மோடி, முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட பல தலைவர்கள் கலந்துகொள்கின்றனர்.

தொடக்க விழா
செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில் தமிழர் பாரம்பரியத்தைச் சிறப்பிக்கும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. பிரதமர் மோடி மற்றும் முதல்வர் ஸ்டாலினின் படங்கள் மணற்சிற்பங்களாக வரையப்பட்டன. மேலும், தமிழ் கலாச்சார செழுமை, வணிகம் உள்ளிட்டவை குறித்து கமல்ஹாசன் குரலில் அனிமேஷன் மூலம் நிகழ்ச்சி ஒன்று நடத்தப்பட்டது. இப்படி பல நிகழ்ச்சிகள் உடன் தொடக்க விழாக் கோலமாக நடத்தப்பட்டன.

கவனம் ஈர்த்த லிடியன் நாதஸ்வரம்
இந்த தொடக்க விழாவில் அனைவரது கனத்தையும் ஈர்த்தது என்றால் அது லிடியன் நாதஸ்வரத்தின் பியானோ நிகழ்ச்சி தான். முதலில் கண்களைக் கட்டியபடி மிஸ்டர் பீன், பைரேட்ஸ் ஆப் தி கரீபியன் உள்ளிட்ட தீம் மியூசிக் இசைத்து அங்கிருந்தவர்களை லிடியன் நாதஸ்வரம் ரசிக்க வைத்தார். கண்களைக் கட்டிக்கொண்டு ஹாரிபார்ட்டர் தீம் மியூசிக் இசைத்தது பலரது கவனத்தையும் ஈர்த்து.

ஒரே நேரத்தில் இரண்டு பியானோ
அதைத் தொடர்ந்து அவர் ஒரே நேரத்தில் இரண்டு பியானோக்களை இசையமைத்து அசத்தினார். லிடியன் நாதஸ்வரம் பியானோ வாசிக்க வாசிக்க அரங்கமே அதிர்ந்தது. அங்குக் கூடியிருந்த அனைவரும் லிடியன் நாதஸ்வரத்தை உற்சாகப்படுத்தினர். குறிப்பாக அங்கு இருந்து வெளிநாட்டு வீரர்கள் லிடியன் நாதஸ்வரம் பியானோ வாசிப்பதைக் கொண்டாடி ரசித்தனர்.

யார் இந்த லிடியன் நாதஸ்வரம்
லிடியன் நாதஸ்வரம் தமிழ் இசையமைப்பாளர் வர்சா சதீஷ் என்பவரின் இரண்டாவது மகன் ஆவர். இவர் தனது இரண்டு வயது முதலே டிரம்ஸ் வாசித்து வருகிறார். எட்டு வயது முதல் பியானோ வாசித்து வருகிறார். இவர் மொத்தம் 14 இசைக்கருவிகளை வாசிக்க கற்றுள்ளார். கடந்த 2019இல் சிபிஎஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்புப் பரிசை பெற்றவர். இவர் மோகன்லாலின் பரோஸ் படத்தின் மூலம் இசையமைப்பளாரக அறிமுகம் ஆக உள்ளார்.

இளையராஜாவின் முதல் மாணவர்
கடந்த சில மாதங்களுக்கு முன், லிடியன் நாதஸ்வரம் தனது ட்விட்டரில் இசையமைப்பாளர் இளையராஜா உடன் இருக்கும் படத்தைப் பகிர்ந்து உள்ளார். அதில் அவர், "'எனது இசை ஆசான் மேஸ்ட்ரோ இளையராஜா என்னிடம், நான் தான் அவரது முதல் மற்றும் ஒரே மாணவன் என்றார். ஒவ்வொரு நாளும் அவர் அன்பு மற்றும் அரவணைப்புடன் எனக்கு கற்றுக் கொடுக்கிறார்" என்று பதிவிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications