வேலி தாண்டிய ஆடு! அதிமுக- திமுக- பாஜக! சென்னை மாநகராட்சி கவுன்சிலரை தூக்கிய அண்ணாமலை! ட்விஸ்ட் தான்!
சென்னை : அதிமுகவில் இருந்து விலகி சுயேட்சையாக வெற்றி பெற்று திமுகவில் இணைந்த சென்னை மாநகராட்சி கவுன்சிலரான லியோ சுந்தரம் என்பவர் இன்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை முன்னிலையில் பாஜகவில் இணைந்துள்ள நிலையில் சென்னை மாநகராட்சியில் பாஜக வார்டு உறுப்பினர்களின் எண்ணிக்கை 2ஆக உயர்ந்துள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தமிழகத்தில் நீண்ட காலமாக நடத்தப்படாமல் இருந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் திமுக ஆட்சிக்கு வந்ததற்கு பிறகு நடத்தப்பட்டது.
இதில் திமுக கூட்டணி, அதிமுக, பாஜக, பாமக, நாம் தமிழர், உள்ளிட்ட கட்சிகள் களமிறங்கிய நிலையில், பல கட்ட போட்டிகள், வேட்பாளர்களின் பிரச்சாரங்கள், வாக்குறுதிகள், கலவரங்களுக்கிடையே வாக்குப் பதிவு நடைபெற்றது.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்
வாக்குப் பதிவுக்குப் பிறகு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் வெளியாகி பெரும்பாலான இடங்களை திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளே வென்றுள்ளன. கடந்த 2011ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் அப்போது இருந்த 10 மாநகராட்சிகளையும் கைப்பற்றி அதிமுக சாதனை படைத்தது. அதேபோன்று தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகளையும், 90 சதவித நகராட்சி, பேரூராட்சிகளும் திமுக வசம் ஆனது.

சென்னை மாநகராட்சி
அதிமுக கூட்டணியில் இருந்து விலகி தனித்து போட்டியிட்ட பாஜக சில இடங்களில் வெற்றியை இந்த தேர்தலில் பதிவு செய்துள்ளது. குறிப்பாக சென்னை மாநகராட்சித் தேர்தலில் 134வது வார்டில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் உமா ஆனந்தன் வெற்றி பெற்றார். தன்னை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளரை விட சுமார் 2 ஆயிரம் வாக்குகளை அவர் கூடுதலாக பெற்றார். இதன் மூலம் முதன்முறையாக பாஜக கவுன்சிலர் ஒருவர் சென்னை மாமன்றத்தில் நுழைந்தார்.

மேலும் ஒரு கவுன்சிலர்
இந்நிலையில் சென்னை மாநகராட்சியில் பாஜக வார்டு உறுப்பினர்களின் எண்ணிக்கை 2ஆக உயர்ந்துள்ளது. சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 198வது வார்டில் அதிமுகவில் விலகி சூயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்ற லியோ சுந்தரம் என்பவர் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையில் பாஜகவில் தன்னை இணைத்துக் கொண்டார். அவரை அண்ணாமலை உள்ளிட்ட நிர்வாகிகள் பொன்னாடை போர்த்தி வரவேற்றனர்.

திமுக கவுன்சிலர்
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 198வது வார்டில் அதிமுகவில் இருந்த லியோ சுந்தரம் மாநகராட்சி தேர்தலில் சுயேட்சையாகப் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தொடர்ந்து சென்னை மாநகராட்சியை திமுக கைப்பற்றியதற்குப் பிறகு கடந்த பிப்ரவரி மாதம் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் லியோ சுந்தரம் திமுகவில் இணைந்தார். இந்நிலையில் தற்போது பாஜகவில் இணைந்துள்ள நிலையில், சென்னை மாநகராட்சி வரலாற்றில் பாஜகவுக்கு இரு உறுப்பினர்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications