மேயர் பிரியா நிகழ்ச்சியில்.. லிப்ஸ்டிக் பூசிய சென்னை மாநகராட்சி பெண் தபேதார் பணி இடமாற்றம்
சென்னை: சென்னை மாநகராட்சியின் முதல் பெண் தபேதார் மாதவி அதிரடியாக பணி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இந்த பணியிட மாற்றத்தின் பின்னணியில் பெண் தபேதார் மாதவி உதட்டில் லிப்ஸ்டிக் பூசியது தான் காரணம் என்று சொல்லப்படுவதால் சர்ச்சை கிளம்பி உள்ளது.
சென்னை மாநகராட்சியின் மேயராக பிரியா செயல்பட்டு வருகிறார். இவர் திமுகவை சேர்ந்தவர். நீதிபதிகள், கலெக்டரை போல் மேயர்களுக்கும் தபேதார்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அந்த வகையில் மேயர் பிரியாவுக்கும் தபேதார் உள்ளனர்.

குறிப்பிட்டு சொல்ல வேண்டும் மேயர் பிரியாவின் தபேதாராக சென்னை மாநகராட்சியின் முதல் பெண் தபேதாரான மாதவி பணி செய்து வந்தார். மாதவியின் பணி என்பது பிற தபேதார்களை போன்றது தான். கையில் செங்கோல் ஏந்து வழியில் கூட்ட நெரிசல் இல்லாமல் வழி ஏற்படுத்தி தருவது தான் தபேதாரின் பணியாகும்.
சென்னை மாநகராட்சி கூட்டம் உள்பட முக்கிய நிகழ்ச்சிகளில் மேயர் பிரியா பங்கேற்கும்போது அவருடன் மாதவி செல்வார். மாதவி உதட்டில் லிப்ஸ்டிக் பயன்படுத்தும் பழக்கத்தை வைத்துள்ளார். இதனால் லிப்ஸ்டிக் பயன்படுத்த கூடாது என அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. ஆனாலும் கூட மாதவி லிப்ஸ்டிக் பூசி வந்துள்ளார்.
கடந்த மாதம் மேயர் பிரியாவின் நிகழ்ச்சியில் இருந்து தபேதார் மாதவி லிப்ஸ்டிக் பயன்படுத்தி உள்ளார். இதனை மேயர் பிரியாவின் உதவியாளர் (Personal Assistant) சிவசங்கர் கண்டித்துள்ளார். இந்த கண்டிப்பை தொடர்ந்து அவர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். சிவசங்கர் கண்டித்த அடுத்த சில நிமிடங்களில் தபேதார் மாதவி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்
மேயர் பிரியாவின் அலுவலகத்தில் பணி செய்த தபேதார் மாதவி தற்போது மணலி மண்டலத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அங்கு தபேதாருக்கான காலியிடம் உள்ள நிலையில் மாதவி அங்கு தூக்கியடிக்கப்பட்டுள்ளார். அதுமட்டுமின்றி கடமை தவறுதல், பணிக்கு உரிய நேரத்தில் வராமல் இருத்தல், சீனியர்களின் உத்தரவுகளை மதிக்காதது உள்ளிட்ட காரணங்களை குறிப்பிட்டு மெமோ என்பது அனுப்பி வைக்கப்பட்டு இருந்தது. மேயர் பிரியாவின் உதவியாளர் சிவசங்கரிடம் இருந்து மாதவிக்கு ஆகஸ்ட் 6ம் தேதி மெமோ அனுப்பப்பட்டது.
அந்த மெமோவுக்கு மாதவி பதிலளித்தார். அதில், ‛‛நீங்கள் லிப்ஸ்டிக் அணியகூடாது என கூறினீர்கள். ஆனால் நான் லிப்ஸ்டிக் அணிந்தேன். இது குற்றம் என்றால் லிப்ஸ்டிக் அணிய தடை விதித்து அரசு பிறப்பித்த உத்தரவை காட்டுங்கள்'' என பதிலளித்து இருந்தார். சென்னை மாநகராட்சி போன்ற ஒரு அமைப்பில் மனித உரிமைகளை மீறும் வகையிலான இத்தகைய விதிமீறல் கவலையளிக்கிறது. உங்களின் மெமோ என்பது எனது பணி நேரத்தில் நான் வேலை செய்யாமல் இருந்தால் மட்டுமே பொருந்தும்'' என கூறியுள்ளார்.
மாதவி இப்படி சர்ச்சையில் சிக்குவது இது முதல் முறையல்ல. முன்னதாக தபேதார் மாதவி சென்னை மாநகராட்சி அலுவலகத்தின் ரிப்பன் கட்டடத்தில் மகளிர் தின விழா நடந்தபோது பேஷன் ஷோவில் பங்கேற்றது விவாதமானது. இதுபற்றி மேயர் பிரியாவிடம் கேட்டதற்கு, ‛‛இந்த விஷயம் பற்றி அவருக்கு (தபேதார் மாதவிக்கு ) தெரிவிக்கப்பட்டது. லிப்ஸ்டிக் அணிந்திருக்கும்போது அது கவர்ச்சிகரமாக இருந்தது. மேயர் அலுவலகம் என்பது அடிக்கடி அமைச்சர்கள், தூதர அதிகாரிகள் வந்து செல்லும் இடம். இதனால் லிப்ஸ்டிக் அணிய வேண்டாம் என்று எனது உதவியாளர் (பிஏ) கேட்டு கொண்டார். இருப்பினும் தற்போதைய இடமாற்றம் என்பது லிப்ஸ்டிக் பயன்படுத்தியதற்காக அல்ல'' என்றார்.
அதேவேளையில் தபேதார் மாதவி கூறும்போது, ‛‛என்னை பழிவாங்கும் நோக்கத்தில் பணியிடமாற்றம் செய்துவிட்டனர். நான் வசிக்கும் இடத்தில் இருந்து அருகே உள்ள அண்ணாநகர், அம்பத்தூர், வளசரபாக்கம் உள்ளிட்ட இடங்களுக்கு இடமாற்றம் செய்யாமல் மணலிக்கு மாற்றம் செய்துவிட்டனர்'' என குற்றம்சாட்டி உள்ளார். பெண் தபேதார் மாதவிக்கு தற்போது 50 வயது ஆகிறது. இவர் Single Parent என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications