சென்னையில் பொது இடங்களில் கட்டிடக்கழிவுகளை கொட்டினால் ரூ.5,000 அபராதம்.. அதிரடி உத்தரவு!
சென்னை: சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பொது இடங்களில் கட்டிடக்கழிவுகளை கொட்டினால் ரூ.5,000 வரை அபராதம் விதிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சி குறிப்பிட்ட 15 இடங்களில் மட்டுமே கட்டிட கழிவுகளை கொட்ட வேண்டும் என்று கூறியுள்ளது. இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

பெருநகர சென்னை மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் உருவாக்கப்படும் கட்டிடம் மற்றும் இடிப்பாட்டு கழிவுகளை மறுபயன்பாட்டிற்கு உட்படுத்துவதற்கு ஏதுவாக கொடுங்கையூர் மற்றும் பெருங்குடி குப்பைக் கொட்டும் வளாகங்களில் தலா 400 மெட்ரிக் டன் திறன் கொண்ட மறுபயன்பாட்டு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

மேலும், பொதுமக்கள் தங்களால் குறைந்த அளவில் உருவாக்கப்படும் கட்டிடக் கழிவுகளை கொட்டுவதற்கு ஏதுவாக மாநகராட்சியின் சார்பில் 15 இடங்கள் கண்டறியப்பட்டுள்ளன. பொதுமக்கள் கட்டிடம் மற்றும் இடிபாட்டு கழிவுகளை இந்த இடங்களில் மட்டுமே கொண்டு சேர்க்க வேண்டும். இதை மீறும் நபர்களின் மீது திடக்கழிவு மேலாண்மை விதிகள் 2016 மற்றும் துணை விதிகள் 2019ன் படி பொது இடங்களில் 1 டன் அளவிற்கு குறைவாக கட்டிடக் கழிவுகளை கொட்டுபவர்கள் மீது ரூ.2000/-மும், 1 டன் அளவிற்கு அதிகமாக கட்டிடக் கழிவுகளை கொட்டுபவர்கள் மீது ரூ.5000/-மும் அபராதம் விதிக்கப்படும்.
சென்னையை தூய்மையாக பராமரிக்கும் வகையில் பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த நடவடிக்கைக்கு பொதுமக்கள் தங்களின் முழு ஒத்துழைப்பை வழங்குமாறு தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சி கட்டிட கழிவுகளை கொட்டுவதற்கு 15 இடங்களை அறிவித்துள்ளது. அந்த 15 இடங்கள் குறித்த விவரங்கள் இந்த செய்தியுடன் இணைக்கப்பட்டுள்ள அறிக்கையில் உள்ளது. இதனை பார்த்து தெரிந்து கொள்ளலாம்.













Click it and Unblock the Notifications