கொரோனா களப்பணியில் தன்னார்வலர்கள்.. ஊக்கம் அளிக்க ஊக்கத் தொகை வழங்கும் தமிழக அரசு
சென்னை : கொரோனா பணியில் ஈடுபட்டுள்ள தன்னார்வலர்களுக்கு சென்னை மாநகராட்சியால் ஊக்கத் தொகை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Recommended Video
கொரோனா பாதிப்பால் கடந்த 45 நாட்களுக்கும் மேலாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் இத்தனை நாட்களாக வேலையில்லாமல் பணமுமின்றி உணவுக்காக நிறைய பேர் அவதிப்பட்டனர்.
மாநில அரசும் உதவித்தொகை, அத்தியாவசிய பொருட்கள் உள்ளிட்ட உதவிகளை செய்த போதிலும் அது போதுமானதாக இல்லை. இதனால் உணவில்லாதவர்களுக்கு 3 வேளையும் உணவு வழங்க சில தன்னார்வலர்கள் முன்வந்தனர். தன்னார்வலர்கள் ஒன்றிணைந்து ஏழை, எளிய மக்களை கண்டறிந்து உணவு பொட்டலங்களையும் தண்ணீர் பாட்டிலையும் வழங்கி வந்தனர்.
உதவித்தொகை
இந்த நிலையில் கொரோனா பாதிப்பு பகுதிகளில் மாநகராட்சி அதிகாரிகளுடன் தன்னார்வலர்களும் பணியாற்ற அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதற்காக தன்னார்வலர்களின் சேவையை ஊக்கமளிக்கும் வகையில் அரசு அவர்களுக்கு உதவித்தொகை வழங்க முடிவு செய்துள்ளது.
ஆலோசனை
சென்னை மாநகராட்சியுடன் இணைந்து பணியாற்ற ஆர்வமுள்ள தொண்டு நிறுவனங்களுடனான ஆலோசனை கூட்டம் கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன், ஆணையர் பிரகாஷ் தலைமையில் அம்மா மாளிகை அரங்கில் நடைபெற்றது.
நடவடிக்கை
இந்த கூட்டத்தில் 40 தன்னார்வல அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சுமார் 650 குடிசை பகுதிகள் உள்ளன. அது போல் 500-க்கும் மேற்பட்ட நோய் கட்டுப்பாட்டு பகுதிகளுக்கும் மேற்கண்ட குடிசை பகுதிகளுக்கும் அத்தியாவசிய தேவைகளை வழங்குதல் மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்துதல் உள்ளிட்ட பணிகளில் மாநகராட்சி பணியாளர்களுடன் தன்னார்வலர்களும் இணைந்து பணியாற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
கூட்டத்தில் முடிவு
இந்த பகுதிகளில் காய்ச்சல் போன்ற நபர்களை கண்டறிந்து அவர்களை சிகிச்சைக்கு அழைத்து வர வேண்டும். இல்லாவிட்டால் மாநகராட்சி அலுவலகங்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் எனவும் ஆலோசிக்கப்பட்டது. மேலும் கட்டுப்படுத்த பகுதிகளில் பணியாற்றும் தன்னார்வலர்களுக்கு தேவையான முகக் கவசம், கையுறை, முழு உடற்கவசம் மற்றும் ஊக்கத் தொகை ஆகியவை மாநகராட்சியால் வழங்கப்படும் என இந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.