சதுர்வேதி சாமியார் மே 23ல் ஆஜராக கோர்ட் உத்தரவு! இருக்க இடம் கொடுத்த வீட்டில் பாலியல் வன்கொடுமை!
சென்னை: பாலியல் தொல்லை வழக்கில் சிக்கிய பிரசன்ன வெங்கடாச்சாரியார் சதுர்வேதி மே 23 ஆம் தேதிக்குள் ஆஜராகாவிட்டால் அவர் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்படுவார் என சென்னை அல்லிக்குளம் மகளிர் நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
சென்னை தி.நகர் பசுல்லா சாலையில் ஸ்ரீராமானுஜர் மிஷன் அறக்கட்டளை, பாஷ்யகரா அறக்கட்டளை என இரு நிறுவனங்கள் உள்ளன. இதை நடத்தி வந்தவர் 47 வயதாகும் சதுர்வேதி சாமியார்.

இவரது இயற்பெயர் வெங்கட சரவணன். இவர் பிரசன்ன வெங்கடாச்சாரியார் சதுர்வேதி என அழைக்கப்படுகிறார். பல்வேறு ஆன்மீக சொற்பொழிவுகளை நடத்தியுள்ளார்.
இந்த நிலையில் சென்னை ஆழ்வார்பேட்டையைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் தனது தொழில் பிரச்சினையை தீர்த்து வைக்கக் கோரி சதுர்வேதி சாமியாரிடம் சென்றாராம். பிரச்சினையை நிச்சயம் தீர்ப்பதாக கூறிய சதுர்வேதி அந்த தொழிலதிபரின் வீட்டிற்கே சென்று கீழ் தளத்தில் தங்கியிருந்தாராம்.
இந்த நிலையில் தொழிலதிபரின் மனைவி மற்றும் மகளை சதுர்வேதி கடத்தி பாலியல் வன்கொடுமை செய்ததாக சொல்லப்படுகிறது. இது தொடர்பாக 2004 ஆம் ஆண்டு சதுர்வேதி சாமியார் மீது சென்னை காவல் துறை ஆணையர் அலுவலகத்தில் ஆழ்வார்பேட்டை தொழிலதிபர் புகார் தெரிவித்தாராம்.
இதையடுத்து மத்திய குற்றப்பிரிவு போலீஸார் சதுர்வேதி சாமியார் பாலியல் வன்கொடுமை வழக்கின் கீழ் கைது செய்து குண்டர் சட்டத்தின்கீழ் அடைத்தனர். இதை எதிர்த்து சதுர்வேதி தொடர்ந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
அப்போது அவரை குண்டர் சட்டத்தில் அடைத்தது செல்லாது என உத்தரவிட்டது. இதனால் சதுர்வேதி சிறையிலிருந்து வெளியே வந்தார். ஆனால் அவ்வப்போது நடக்கும் வழக்கு விசாரணைகளுக்கு ஆஜராகாமல் தலைமறைவானார். இதையடுத்து 2016ஆம் ஆண்டு மீண்டும் கைதானார்.
அப்போதும் ஜாமீனில் வெளியே வந்த அவர் மீண்டும் தலைமறைவானார். அவரை கைது செய்யக் கோரி சென்னை அல்லிக்குளம் மகளிர் நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்தது. ஆனாலும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த நிலையில்தான் சதுர்வேதி சாமியார் வரும் மே 23 ஆம் தேதி பாலியல் வழக்கு விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும்.
அப்படி ஆஜராகாவிட்டால் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்படுவார் என மகளிர் நீதிமன்றம் எச்சரித்தது. இந்த தகவலை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனால் அவரை தேடும் பணிகளை போலீஸார் முடுக்கிவிட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications