அன்பான நண்பர்களே... பகைவர்களே... மரணத்தை உணர்ந்து சுய இரங்கல் குறிப்பு எழுதிய சென்னை தொழிலதிபர்..!
சென்னை: மரணம் நிகழவிருப்பதை உணர்ந்து முன் கூட்டியே தனது இரங்கல் குறிப்பை கைப்பட எழுதி குடும்பத்தினரிடம் அளித்துள்ளார் சென்னையை சேர்ந்த ஒருவர்.
சென்னையை சேர்ந்த எஜ்ஜி உமா மகேஷ் என்பவர் தொழிலதிபராகவும், நடிகராகவும் இருந்து வந்தார். இவர் கடந்த வெள்ளிக்கிழமையன்று காலமான நிலையில் நாளிதழ்களில் அது தொடர்பாக அளிக்கப்பட்ட விளம்பரத்தை பார்த்தவர்களுக்கு பெரும் வியப்பு ஏற்பட்டது.
தனது மரணத்திற்கான இரங்கல் குறிப்பை தாமே கைப்பட எழுதி அதை பிரசுரிக்குமாறு உமா மகேஷ் குடும்பத்தினரிடம் கேட்டுக்கொண்டிருந்தார். வழக்கமாக ஒருவர் இறந்தால் அவருடைய நண்பர்கள், உறவினர்கள், குடும்பத்தினர்கள், நிறுவன ஊழியர்கள் பெயரில் இரங்கல் தெரிவித்து காலமான செய்தி விளம்பரமாக கொடுக்கப்படும்.
ஆனால் எஜ்ஜி உமா மகேஷ் சற்று மாற்றியோசித்து உலகிற்கு தாம் சொல்ல நினைத்த கருத்தை தனது இரங்கல் குறிப்பில் கூறியுள்ளார். அதில், ''அன்பான நண்பர்களே, பகைவர்களே, இந்த இரண்டுக்கும் இடைப்பட்டவர்களே, எனது அழகான வாழ்நாளில் பங்கெடுத்து கொண்டதற்கு நன்றி. யாரையும் நான் அந்தரத்தில் விட்டுச்செல்லவில்லை என நினைக்கிறேன்.
எல்லோருக்குமான நேரம் ஓடிக்கொண்டே இருக்கிறது. அழகான முறையில் வாழ்ந்து வாழ்க்கையை கொண்டாடுங்கள், எனக்கான பார்ட்டி முடிந்துவிட்டது, உங்கள் பார்ட்டியை தொடருங்கள்'' என உமாமகேஷ் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே மறைந்த தொழிலதிபர் எஜ்ஜி உமாமகேஷ் தனது உடல் உறுப்புகளை தானமாக கொடுத்துச்சென்றது குறிப்பிடத்தக்கது. கண், சிறுநீரகம், உள்ளிட்ட உறுப்புகளை உடலுறுப்பு மாற்று அறுவைச்சிகிச்சைக்கு காத்திருப்பவர்களுக்கும் உடலை மருத்துவக் கல்லூரி மாணவர்கள் ஆராய்ச்சிக்காகவும் கொடுத்துச்சென்றுள்ளார்.
மேலும், தனது மரணம் குறித்த செய்தி அறிந்த பின்னர் இரங்கல் தெரிவிப்பதற்காக யாரும் வரவேண்டாம் எனவும் எஜ்ஜி உமா மகேஷ் தெரிவித்திருக்கிறார். இந்த இரங்கல் விளம்பரம் சமூக வலைதளங்களில் கடந்த 2 நாட்களாக வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.