ஒரே புகை மூட்டமா இருக்கே..சென்னைவாசிகள் அதிகாலை பேச்சு.. மூடுபனியால் ரயில்,விமான சேவை பாதிப்பு
சென்னை: பனிமூட்டம் காரணமாக அதிகாலை முதலே சென்னையிலும் புற நகர் பகுதிகளிலும் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. பனிமூட்டத்தால் சென்னை விமான நிலையத்தில் விமானங்கள் தரையிறங்குவதில் தாமதம் ஏற்பட்டது. பெங்களூர், ஹைதராபாத்தில் இருந்து சென்னை வந்த விமானங்கள் சிறிதுநேரம் திருப்பிவிடப்பட்டு மீண்டும் தரையிறக்கப்பட்டன. ரயில் சேவையும் பாதிக்கப்பட்டதால் வேலைக்கு செல்வோர் சிரமத்திற்கு ஆளாகினர்.
ஹைதராபாத், பெங்களூர், கொல்கத்தா, மும்பை, மலேசியா ஆகிய விமானங்கள் தாமதமாக தரையிறங்கின. இதேபோல், சென்னையில் இருந்து புறப்படும் ஹைதராபாத் விசாகப்பட்டினம், ராஜமுந்திரி, மதுரை, மும்பை உள்ளிட்ட 8 விமானங்கள் சுமார் அரைமணி நேரம் தாமதமாக புறப்பட்டன.
சென்னையில் நேற்று காலை முதல் அதீத பனிமூட்டம் நிலவியதால் சென்னை விமான நிலையத்தில் சேவைகள் பாதிக்கப்பட்டது.
கடலோர மாவட்டங்களில் லேசான மழை - மேற்குத் தொடர்ச்சி மலையோர மாவட்டங்களில் பனிமூட்டம்

விமான சேவை பாதிப்பு
சென்னை புறநகர் பகுதிகளில் நேற்று காலை 6.30 மணியில் இருந்து கடுமையான பனிமூட்டம் நிலவியது. இதனால் சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் விமான சேவைகள் பாதிக்கப்பட்டன. நேற்று காலை 6.30 மணிக்கு மஸ்கட்டில் இருந்து 284 பயணிகளுடன் வந்த விமானம் கடும் பனிமூட்டம் காரணமாக சென்னையில் தரையிறங்க முடியாமல் பெங்களூருக்கு திருப்பிவிடப்பட்டது.

திருப்பி விடப்பட்ட விமானங்கள்
அதேபோல் காலை 6.55 மணிக்கு குவைத்தில் இருந்து சென்னைக்கு 182 பயணிகளுடன் வந்த விமானம், சென்னையில் தரையிறங்க முடியாமல் நீண்ட நேரமாக வானில் வட்டமடித்து கொண்டு இருந்தது. அதன் பிறகும் தரையிறங்க முடியாததால் ஹைதராபாத்துக்கு திருப்பி விடப்பட்டது. குவைத்தில் இருந்து வந்த ஏர் இந்தியா விமானம் மற்றும் மஹாராஷ்டிரா மாநிலம் புனேவில் இருந்து வந்த இண்டிகோ விமானம் ஹைதராபாத்துக்கு திருப்பி விடப்பட்டது.

வானில் வட்டமடித்த விமானங்கள்
ஹைதராபாத், பெங்களூரு, கொல்கத்தா, மும்பை உள்ளிட்ட நகரங்களில் இருந்தும், மலேசியாவில் இருந்தும் வந்த 7 விமானங்கள், சென்னையில் நிலவிய பனிமூட்டத்தால் வானில் நீண்டநேரமாக வட்டமடித்து விட்டு தாமதமாக தரையிறங்கின. இதே போல் சென்னையில் இருந்து புறப்படும் ஹைதராபாத், விசாகப்பட்டினம், ராஜமுந்திரி, மதுரை, மும்பை உள்ளிட்ட 8 விமானங்கள் சுமார் அரைமணி நேரம் வரை தாமதமாக புறப்பட்டு சென்றன. வெயில் அடிக்க தொடங்கிய பிறகு பனிமூட்டம் விலகியதும் மீண்டும் விமான சேவை இயல்பு நிலைக்கு திரும்பியதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

ரயில்கள் தாமதம்
அதிகாலை 4 மணி முதல் பனிமூட்டம் காரணமாக அரக்கோணம் மார்க்கமாக இயக்கப்படும் ரயில்கள் கால தாமதமாக இயக்கப்பட்டன. ரயில்களின் வேகம் குறைக்கப்பட்டது. சென்னை பெங்களூரு எக்ஸ்பிரஸ் ரயில்கள், கோவை, சென்னை இன்டர்சிட்டி ரயில்களின் வேகம் குறைக்கப்பட்டது. மின்சார ரயில்களும் மெதுவாக இயக்கப்பட்டன, பனி மூட்டம் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. ரயில்கள் தாமதமாக இயக்கப்பட்டதால் வேலைக்கு செல்வோர் பாதிக்கப்பட்டனர்.