இரவோடு இரவாக குரோம்பேட்டையில் இடிக்கப்பட்ட கடைகள்.. விடிந்ததுமே அடையாளம் மாறிய தாம்பரம் மாநகராட்சி
சென்னை: சென்னை குரோம்பேட்டை ஜிஎஸ்டி சாலையில் இருந்து, சி.எல்.சி. ஒர்க்ஸ் லேன் பகுதிக்கு செல்லும் பாதையும், அங்கிருந்து ஜிஎஸ்டி சாலைக்கு வரும் பாதையும் ஆக்கிரமிப்பில் இருந்தது. இதனால் பொதுமக்கள் சாலையை கடந்து செல்ல மிகவும் சிரமப்பட்டு வந்தனர். இந்நிலையில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வந்தது. இதையடுத்து அகற்ற கெடு விதித்திருந்தார்கள் அதிகாரிகள்.ஆனால் அகற்றவில்லை.. இதையடுத்து குரோம்பேட்டை சி.எல்.சி. ஒர்க்ஸ் சாலையோரம் இயங்கி வந்த கடைகள் இரவோடு இரவாக அகற்றப்பட்டுள்ளது.
ஒரு காலத்தில் சென்னையின் புறநகர் பகுதியாக இருந்த குரோம்பேட்டை தாம்பரம் மாநகராட்சியில் உள்ள முக்கியமான வணிக மையமாக மாறி உள்ளது. தாம்பரம் ரயில் நிலையத்தை ஒட்டிய பகுதிகளில் கடைகள், வணிக நிறுவனங்கள் அமைக்க போதிய வசதிகள் இல்லாத காரணத்தால், அந்த பகுதியில் வர வேண்டிய வளர்ச்சி அனைத்தும், ரயில் நிலையம், பேருந்து நிலையம், ரேடியல் சாலை சந்திப்பு, குன்றத்தூர் சாலை இணைப்பு என எல்லாமே இணையும் குரோம்பேட்டையில் வந்தது. இதன் காரணமாக தென்சென்னையின் முக்கியமான வணிக மையமாக குரோம்பேட்டை, மாறி உள்ளது.

குரோம்பேட்டை ஜி.எஸ்.டி சாலையை ஒட்டி மிகப்பெரிய ஜவுளி கடைகள், நகைக்கடைகள், வாகன விற்பனை நிலையங்கள், ஹோட்டல்கள் மற்றும் தியேட்டர்கள் உள்ளன. இதே போல் பள்ளி, கல்லூரியும் இருக்கிறது. இப்பகுதி எப்போதும் நெரிசல் அதிகமாக இருந்து வருகிறது. குறிப்பாக குரோம்பேட்டை சரவணா ஸ்டோர் சிக்னல் சந்திப்பில் சாலையை கடக்கும் பாதசாரிகளின் நிலை கஷ்டமாகவே இருக்கும்.
ஏனெனில் இந்த பகுதியில் சாலையை கடப்பதற்கு சுரங்கப்பாதை, நடைமேம்பாலம் ௭ன பாதசாரிகளுக்கு வசதிகள் எதுவுமே கிடையாது. இதனால் மக்கள் சாலையை கடப்பதற்கு சிக்னலில் காத்திருக்க வேண்டும். வேறு எங்குமே கடக்க முடியாது,அதற்கு முன்பும் கடக்க முடியாது.. இல்லாவிட்டால் பொதுமக்கள் சாலையை கடக்க குரோம்பேட்டை ரயில் நிலையம் தான் போக வேண்டும். அங்கு தான் மேம்பாலம் இருக்கிறது.
இது ஒருபுறம் எனில், குரோம்பேட்டை ரேடியல் சாலை மேம்பாலத்தில் இருந்து,குரோம்பேட்டை பேருந்து நிலையம் வரை ஜிஎஸ்டி சாலையின் இரு பக்கங்களிலும் உள்ள வர்த்தக நிறுவனங்கள் சாலையின் பெரும்பகுதியை ஆக்கிரமிப்பு செய்திருப்பதாக புகார்கள் உள்ளது. இதன் காரணமாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இந்த பிரச்சினையை நெடுஞ்சாலைத் துறையும், போக்குவரத்து போலீஸாரும் கண்டு கொள்ளவில்லை என குற்றச்சாட்டும் இருந்து வந்தது. இது ஒருபுறம் எனில் வாகனங்கள் சாலை வரை நிறுத்தப்படுவதால், இச்சாலையில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது வாடிக்கையாக இருக்கிறது. இதனால் பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள் மிகுந்த சிரமத்தை சந்தித்து வந்தார்கள்.
அதேபோல் ஜிஎஸ்டி சாலையில் இருந்து, சி.எல்.சி. ஒர்க்ஸ் லேன் பகுதிக்கு செல்லவும், அங்கிருந்து ஜிஎஸ்டி சாலைக்கு வரும் பாதையும் ஆக்கிரமிப்பில் இருந்தது. இதனை சீரமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வந்தது. இந்நிலையில் தான் குரோம்பேட்டை சி.எல்.சி. ஒர்க்ஸ் சாலையோரம் இயங்கி வந்த கடைகள் இரவோடு இரவாக அகற்றப்பட்டுள்ளது. போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் கடைகளை அகற்றுமாறு, தாம்பரம் மாநகராட்சி விதித்த ஒருவார காலக்கெடுவுக்குள் கடைகள் அகற்றப்படாததால் மாநகராட்சி நிர்வாகமே கடைகளை இரவோடு இரவாக அப்புறப்படுத்தி இருக்கிறது. மாற்று இடம் ஒதுக்குமாறு கடை உரிமையாளர்கள், மாநகராட்சி பணியாளர்களுடன் வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications