அண்ணா பல்கலைக்கழக வழக்கு.. காவல்துறை எல்லை மீறினால் சுப்ரீம் கோர்ட்டை அணுகலாம்.. ஐகோர்ட் உத்தரவு!
சென்னை: அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு விசாரணையில் காவல்துறை எல்லை மீறினால் உச்ச நீதிமன்றத்தை அணுகலாம் என சென்னை ஐகோர்ட் தெரிவித்துள்ளது.
சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கை பொதுவெளியில் கசிந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பாலியல் வன்கொடுமை வழக்குகளில் பதிவு செய்யப்படும் முதல் தகவல் அறிக்கை ரகசியம் காக்கப்பட வேண்டும் என்ற சட்ட விதிகள் இருந்தபோதும் இது எப்படி வெளியானது என்பது குறித்து காவல்துறை சிறப்பு புலனாய்வுக் குழு விசாரித்து வருகிறது.

இந்த விசாரணையின் ஒரு பகுதியாக, சிறப்பு புலனாய்வுக் குழு பத்திரிகையாளர்களுக்கு அழைப்பாணை அனுப்பி அவர்களிடம் விசாரித்து வருகிறது. அவ்வாறு விசாரணைக்கு செல்லும் பத்திரிக்கையாளர்களை சிறப்பு புலனாய்வுக் குழு மணிக்கணக்கில் காக்க வைப்பதாகவும், குற்றவாளிகளைப் போல் நடத்துவதாகவும், தேவையற்ற மற்றும் விசாரணைக்கு சற்றும் பொருந்தாத கேள்விகளை கேட்பதாகவும் பத்திரிக்கையாளர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
சென்னை பத்திரிகையாளர் மன்றத்தின் சார்பில் வழக்கறிஞர் சூரிய பிரகாசம் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், ஜோதிராமன் அமர்வு முன்பு முறையீடு செய்தார். விசாரணை என்ற பெயரில் செய்தியாளர்களின் செல்போன்களை பறிமுதல் செய்வதாகவும்,
ஏற்கனவே பிறப்பிக்கப்பட்ட உத்தரவில் மீடியா குறித்து எந்த உத்தரவும் இல்லை என்று சுட்டிக்காட்டினார்.
மேலும் செய்தியாளர்களிடமும் தனிப்பட்ட விவரங்களை கேட்டு துன்புறுத்துவதாகவும் இதுகுறித்து தாங்கள் தலையிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அப்போது குறுக்கிட்ட நீதிபதி இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதாக தெரிவித்தார்.
அதற்கு பதில் அளித்த வழக்கறிஞர் சூரியபிரகாசம், காவல்துறை ஆணையர் குறித்த கருத்துக்கள் தொடர்பான மேல்முறையீடுதான் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதாக குறிப்பிட்டார். பத்திரிகையாளர் சுதந்திரம் பாதுகாக்கப்பட வேண்டும் என்று தெரிவித்தார்.
அதற்கு பதில் அளித்த நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம், ஏற்கனவே பிறப்பிக்கப்பட்ட உத்தரவில் தெளிவாக குறிப்பிட்டதாகவும் அது பற்றி மட்டுமே நடத்தப்பட விசாரணை வேண்டும் என்றும், முதல் தகவல் அறிக்கை பொதுத் தளத்துக்கு வந்து பிறகு அது யார் வேண்டுமானாலும் பார்க்கலாம் என்றும் குறிப்பிட்டார்..
ஏற்கனவே தான் பிறப்பித்த உத்தரவின்படிதான் விசாரணை நடத்தப்பட வேண்டும் என நீதிபதி தெளிவுபடுத்தினார். காவல்துறை எல்லை மீறினால் இது தொடர்பாக ஏதாவது மனு தாக்கல் செய்ய வேண்டும் என்றால் உச்ச நீதிமன்றத்தில் அணுகுமாறும் அவர் கேட்டுக் கொண்டார்.












Click it and Unblock the Notifications