அமமுகவை பதிவு செய்ய தடை கோரிய வழக்கு.. தேர்தல் ஆணையம் பதிலளிக்க ஹைகோர்ட் உத்தரவு
சென்னை: அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கட்சியை பதிவு செய்ய தடை விதிக்கக் கோரிய வழக்கில் இந்திய தேர்தல் ஆணையம் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு டிடிவி தினகரன் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற கட்சியை தொடங்கினார். இரட்டை இலை சின்னம் கிடைக்காத நிலையில், டிடிவி தினகரன் ஆர் கே நகர் இடைத்தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

இந்நிலையில் அமுமுக கட்சியை பதிவு செய்வதற்காக தன்னிடமும், உறுப்பினர்கள் தங்கதமிழ்செல்வன், உட்பட 100 பேரிடம் ஒப்புதல் வாங்கப்பட்டு தனித்தனியாக பிரமாணப்பத்திரங்கள் இந்திய தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்தது..
இந்நிலையில் கட்சியை பதிவு செய்வதற்கு பிரமாண பத்திரம் தாக்கல் செய்த உறுப்பினர்கள் பலர், அமுமுகவில் இருந்து விலகினர். இது குறித்து தேர்தல் ஆணையத்திடம் கடந்த அக்டோபர் மாதம் புகார் மனு அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
எனவே அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை பதிவு செய்வதற்கான நடைமுறைகளை தேர்தல் ஆணையம் மேற்கொள்ளும் முன்னர் தன்னிடம் அனுமதி பெறாமல் எந்த நடவடிக்கைகளும் மேற்கொள்ள கூடாது.
அதுவரை அக்கட்சியை பதிவும் செய்யும் தேர்தல் ஆணைய நடைமுறைகளுக்கு இடைக்கால தடை விதிக்க கோரி அக்கட்சியில் இருந்து விலகிய புகழேந்தி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி கார்த்திக்கேயன், நீதிமன்றத்தை அரசியல் மேடையாக பயன்படுத்த அனுமதிக்க முடியாது என்றார். அமமுகவில் இருந்து வெளியேறிய பின் அக்கட்சியை பற்றி கவலைப்படுவதேன்? என புகழேந்தி தரப்புக்கு கேள்வி எழுப்பினார்.
இதன் பின்னர் உத்தரவிட்ட நீதிபதி கட்சி பதிவுக்காக புகழேந்தி அளித்த பிரமாண பத்திரத்தை நீக்கிவிட்டு அமமுக கட்சி பதிவு குறித்து பரிசீலிக்க தேர்தல் ஆணையத்துக்கு அறிவுறுத்தினார். மேலும் இந்த வழக்கில் தேர்தல் ஆணையம், தினகரன் ஆகியோர் பதிலளிக்க உத்தவிட்டு வழக்கு விசாரணை டிசம்பர் 9ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.












Click it and Unblock the Notifications