5 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு எதிரான ஒழுங்கு நடவடிக்கை உத்தரவு ரத்து - சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி ஆணை!
சென்னை: கடலூரில் 2015 முதல் காவல்துறை எஸ்.பிக்களாக பணியாற்றிய 5 பேருக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும்படி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்தது சென்னை உயர்நீதிமன்றம். காவல்துறை அதிகாரிகள் தாக்கல் செய்த மேல் முறையீட்டு வழக்கில் இரு நீதிபதிகள் அமர்வு உத்தரவிட்டுள்ளது.
கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி காவல் நிலையத்தில் பதிவான வழக்கு தொடர்பாக இறுதி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. புகாரை விசாரித்து முடித்து வைக்கப்பட்டு விட்டதாக விசாரணையின் போது காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

புகாரை முடித்து வைப்பதாக இருந்தால், அதுகுறித்து சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும், புகார்தாரருக்கும் தகவல் தெரிவிக்க வேண்டும் எனத் தெரிவித்த நீதிபதி, இதை செய்யத் தவறிய குள்ளஞ்சாவடி காவல் நிலையத்தில் ஆய்வாளர்களாக பணியாற்றிய 11 பேருக்கு எதிராக துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க தமிழக காவல்துறை டிஜிபி-க்கு உத்தரவிட்டார்.
அதேபோல, இறுதி அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டதா என்பதை கண்காணிக்கத் தவறிய காவல் கண்காணிப்பாளர்களாக பதவி வகித்த பி.சரவணன், எம்.ஸ்ரீ அபினவ், எஸ்.சக்தி கணேசன், எஸ்.ஜெயக்குமார் மற்றும் எஸ்.பி ஆர்.ராஜாராம் ஆகிய 5 ஐ.பி.எஸ் அதிகாரிகள் மீதும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
இதனை எதிர்த்து காவல்துறை அதிகாரிகள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீடு மனு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், வி.லட்சுமி நாராயணன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, காவல்துறை அதிகாரிகள் தரப்பில், தங்கள் தரப்பு விளக்கத்தை கேட்காமல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், தனி நீதிபதி உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டுமென கோரப்பட்டது.
இதையடுத்து, 5 ஐபிஎஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்குமாறு தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு இரு நீதிபதிகள் அமர்வு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் காவல்துறை அதிகாரிகள் தாக்கல் செய்த மேல் முறையீட்டு வழக்கில் இரு நீதிபதிகள் அமர்வு இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.
கடலூரில் 2015 முதல் காவல்துறை எஸ்.பிக்களாக பணியாற்றிய 5 பேருக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும்படி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது சென்னை உயர்நீதிமன்றம். ஆய்வாளர்கள் செய்த தவறுக்கு கண்காணிப்பாளர்கள் பொறுப்பாக முடியாது என நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications