அர்ச்சகர்கள் நியமன அறிவிப்பை எதிர்த்த வழக்குகள்! முடித்து வைத்து உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை: உச்சநீதிமன்ற உத்தரவுப்படி அறநிலையத்துறை கோவில்களில் அர்ச்சகர்கள் நியமிக்கப்பட வேண்டுமென உத்தரவிட்ட சென்னை உயர் நீதிமன்றம், நியமனங்கள் தொடர்பான அறிவிப்புகளை எதிர்த்த வழக்குகளை முடித்துவைத்து உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள பல்வேறு கோவில்களில் அர்ச்சகர்கள் நியமனங்களில் விதிமீறல் உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக பல்வேறு புகார்களும் எழுந்தன.
இந்நிலையில் தமிகத்தின் பல்வேறு கோவில்களில் அர்ச்சகர்கள் நியமனங்களை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகள் தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரி, நீதிபதி என். மாலா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தன.
அப்போது தமிழக அரசு தலைமை வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம் ஆஜராகி, உச்ச நீதிமன்ற உத்தரவுப்படியே அர்ச்சகர்கள் நியமிக்கப்பட்டு வருவதாகவும், அறங்காவலர்கள் உள்ள கோவில்களில் அவர்கள் மூலமாகவே நியமிக்கப்பட்டு வருவதாகவும், அறங்காவலர்கள் இல்லாத கோவில்களில் அறநிலையத்துறையால் நியமிக்கப்பட்ட தக்கார்கள் மூலமாக அர்ச்சகர்கள் நியமிக்கப்படுவதாக விளக்கம் அளித்தார்.
அர்ச்சகர்கள் நியமனம்.. அறநிலைய துறையின் புதிய விதிகளை எதிர்த்து வழக்கு.. அரசுக்கு ஹைகோர்ட் நோட்டீஸ்
இந்த விளக்கத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், உச்ச நீதிமன்ற உத்தரவுபடி அர்ச்சகர்களை நியமிக்க வேண்டுமென கூறி, அர்ச்சகர்கள் நியமிக்கப்பட்டதை எதிர்த்த வழக்குகளை முடித்துவைத்து உத்தரவிட்டனர். அதேசமயம் அந்த நியமனங்களால் பாதிக்கப்பட்டதாக கருதும் நபர்கள் தனிப்பட்ட முறையில் வழக்கு தொடரலாம் என அறிவுறுத்தினர். அர்ச்சகர்கள் நியமிக்க பின்பற்றப்படும் விதிகளை எதிர்த்த வழக்குகளை அடுத்தக்கட்ட விசாரணைக்காக நீதிபதிகள் தள்ளிவைத்துள்ளனர்.