அமைச்சர் செந்தில்பாலாஜி மீதான மோசடி வழக்கு ரத்து.. சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
சென்னை: போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் தருவதாக மோசடியில் ஈடுபட்டதாக அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு எதிரான வழக்கை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் மின்சாரத்துறை அமைச்சசராக இருப்பவர் செந்தில் பாலாஜி. இவர் அ.தி.மு.க ஆட்சி காலத்தில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தார்.

மோசடி புகார்கள்
அப்போது போக்குவரத்து துறையில் வேலை தருவதாக கூறி பலரிடம் பணம் பெற்று மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இது தொடர்பாக பல்வேறு புகார்கள் அளிக்கப்பட்டன. இந்த புகார்களின் அடிப்படையில் செந்தில் பாலாஜி உள்ளிட்ட 4 பேருக்கு எதிராக வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்த வழக்கு சென்னை எம்.பி - எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது

செந்தில் பாலாஜிக்கு எதிராக வழக்கு
இதில் ஒரு வழக்கில் குற்றப்பத்திரிக்கை நகல் பெறுவதற்காக நேரில் ஆஜராகும்படி, அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளிட்டோருக்கு சென்னை எம்.பி - எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.இதற்கிடையில் அந்த வழக்கை ரத்து செய்யக் கோரி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சண்முகம் என்பவர் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

அதிரடி ரத்து
இந்த மனு நீதிபதி நிர்மல் குமார் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது காணொலி காட்சி மூலம் ஆஜராகியிருந்த புகார்தாரர்கள், பணத்தை திருப்பி பெற்றுக் கொண்டதாக தெரிவித்தனர்.இதை பதிவு செய்த நீதிபதி, அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார். இதற்கிடையில் சிறப்பு நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.

தள்ளி வைப்பு
அப்போது இந்த வழக்கை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ள விவரத்தை குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார். இதையடுத்து, உயர் நீதிமன்ற உத்தரவின் நகலை சமர்ப்பிக்க செந்தில் பாலாஜி உள்ளிட்டோருக்கு உத்தரவிட்ட சிறப்பு நீதிமன்ற நீதிபதி, விசாரணையை ஆகஸ்ட் 19-ம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளார்.












Click it and Unblock the Notifications