கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணம்.. மது விலக்கு போலீசாரை விளாசிய சென்னை ஐகோர்ட்! குண்டாஸ் ரத்து!

Subscribe to Oneindia Tamil

சென்னை: கள்ளக்குறிச்சி விஷச் சாராய மரண சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட 18 பேரை குண்டர் சட்டத்தில் அடைத்த உத்தரவை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் கடந்த ஜூன் மாதம், விஷச் சாராயம் குடித்து 69 பேர் பலியான சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. விஷச் சாராயம் அருந்தி 69 பேர் உயிரிழந்தது தொடர்பாக சாராய வியாபாரிகள் உட்பட 22 பேர் கைது செய்யப்பட்டனர்.

kallakurichi tn government high court

கள்ளக்குறிச்சி விஷச்சாராய மரணம்

கள்ளக்குறிச்சியில் விஷச் சாராயம் அருந்தி 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தது தொடர்பாக கைது செய்யப்பட்ட 18 பேர் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டனர். குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டதை ரத்து செய்யக் கோரி 18 பேர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், எம். ஜோதிராமன் அமர்வில் விசாரணைக்கு வந்தது.

மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், கால தாமதமாக குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டதையும், ஆவணங்கள் முறையாக வழங்கப்படவில்லை என்பதையும் முன்வைத்து குண்டர் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என வாதிட்டனர்.

குண்டர் சட்டத்தில்

இதனையடுத்து, கள்ளச்சாராய சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டவர்கள் ஆறு மாதங்களுக்கு மேல் சிறையில் உள்ள நிலையில் இதற்கு மேலும் அவர்களை குண்டர் சட்டத்தில் சிறையில் வைத்திருப்பதில் என்ன தேவை இருக்கிறது? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

கள்ளச்சாராய விற்பனை பல ஆண்டுகளாக நடைபெற்று வரும் நிலையில் மது விலக்கு துறை என்ன செய்து கொண்டிருக்கிறது என்றும் கேள்வி எழுப்பினர். மது விலக்கு போலீசார் பதிவு செய்யும் வழக்குகளில் பாதிக்கும் மேற்பட்டவை ஜோடிக்கப்பட்டவை எனவும் முதன்மையான குற்றவாளிகள் கைது செய்யப்படுவதில்லை எனவும் தெரிவித்தனர்.

நீதிபதிகள் அதிருப்தி

கல்வராயன் மலைப் பகுதியில் கள்ளச்சாரயம் தயாரிப்பு மற்றும் விற்பனை பல ஆண்டுகளாக நடைபெற்று வரும் நிலையில், இத்தனை ஆண்டுகளாக அதனை தடுக்காமல் மது விலக்கு பிரிவு என்ன செய்து கொண்டிருக்கிறது என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

மேலும், இந்த விவகாரத்தில் அரசின் தோல்வியையும் கவனத்தில் கொள்ள வேண்டும் எனத் தெரிவித்தனர். மது விலக்கு பிரிவு போலீசார் பல தவறுகளை செய்வதாகவும் அவ்வாறு தவறிழைக்கும் அதிகாரிகள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பது குறித்து தெரியவில்லை எனவும் தெரிவித்தனர்.

அரசு தரப்பு பதில்

இதற்கு பதில் அளித்த அரசு தலைமை வழக்கறிஞர் பி.எஸ். ராமன், இந்த கள்ளச்சாராயம் கள்ளக்குறிச்சியில் தயாரிக்கப்படவில்லை எனவும் மாதவரத்தில் இருந்து வந்ததாகவும் இதற்கு கல்வராயன் மலைக்கும் தொடர்பில்லை என்றும் தெரிவித்தார்.

இந்த சம்பவம் தொடர்பான விசாரணை சிபிஐக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில் வழக்கின் ஆவணங்கள் இன்று அல்லது நாளை சிபிஐயிடம் ஒப்படைக்கப்படும் எனக் கூறினார்.

குண்டர் சட்டம் ரத்து

சுமார் 70 பேர் மரணம், நூற்றுக்கும் மேற்பட்டோர் பாதிப்பு என 110 நாட்கள் அந்த கிராமமே அசாதாரண நிலையில் இருந்ததன் காரணமாகவே அனைவரும் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டதாக கூறினார்.

இதனையடுத்து, மனுதாரர்கள் தரப்பு வாதங்களை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், அவர்கள் அனைவரின் மீதான குண்டர் தடுப்பு சட்டத்தை ரத்து செய்து உத்தரவிட்டனர்.

சிபிஐ விசாரணை

கள்ளக்குறிச்சி கருணாபுரம் விஷச்சாராய பலி சம்பவம் குறித்து சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், இந்த வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என சென்னை ஐகோர்ட்டில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்குகளை விசாரித்த சென்னை ஐகோர்ட் அமர்வு, சிபிஐக்கு வழக்கு விசாரணையை மாற்ற உத்தரவிட்டது. இதை எதிர்த்து, தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.

அந்த வழக்கில், சென்னை ஐகோர்ட் முடிவில் தலையிட விரும்பவில்லை என கூறிய நீதிபதிகள் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். மேலும் கள்ளக்குறிச்சி விஷ சாராய வழக்கை சிபிஐ விசாரிக்க தடையில்லை என்றும், சிபிஐ விசாரணையை நடத்தலாம் என்றும் நீதிபதிகள் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+