போலீஸ் ஸ்டேஷன் கழிவறைகளில் இன்ஸ்பெக்டர்கள் மட்டும் வழுக்கி விழுவதில்லையே ஏன்? நீதிபதி கேள்வி
சென்னை: தமிழக காவல் நிலைய கழிவறைகளில் குற்றவாளிகள் மட்டும் வழுக்கி விழும் வகையில் உள்ளது ஏன் என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ஜாகிர் உசேன் என்பவருக்கு கை, கால் முறிவுக்கு சிகிச்சை வழங்கக் கோரி அவரது தந்தை இப்ராஹிம் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில், இடது காலிலும், வலது கையிலும் ஏற்பட்ட எலும்பு முறிவுக்கு உரிய சிகிச்சை வழங்க சிறைத்துறை நிர்வாகத்திற்கு உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் ஜி ஆர் சுவாமிநாதன் மற்றும் வி லட்சுமி நாராயணன் அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள், கைது செய்யப்பட்ட நபருக்கு எவ்வாறு காயம் ஏற்பட்டது என கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதில் அளித்த அரசு வழக்கறிஞர், கழிவறையில் வழுக்கி விழுந்ததால் காயம் ஏற்பட்டதாகத் தெரிவித்தார். மேலும் அவருக்கு உரிய சிகிச்சை வழங்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், காவல் நிலையங்களில் உள்ள கழிவறைகள் கைதிகள் மட்டும் வழுக்கி விழுந்து காயம் ஏற்படும் வகையில் உள்ளதா? அந்த கழிவறைகளை ஆய்வாளர்கள் பயன்படுத்துவதில்லையா? அவர்களுக்கு எதுவும் ஆவதில்லை ஏன் என கேள்வி எழுப்பினர்.
இதுபோன்ற செயலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என தெரிவித்த நீதிபதிகள், சம்பந்தப்பட்ட காவலர்கள் பணியை இழக்கும் நிலை ஏற்படும் எனவும் எச்சரித்தனர்.
பின்னர் மனுதாரரின் மகனுக்கு சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை வழங்க சிறைத் துறைக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கை முடித்து வைத்தனர்.












Click it and Unblock the Notifications