“அலறிய” சென்னை ஐஐடி.. தூக்கில் கிடந்த மாணவர்! நீடிக்கும் “மர்மம்” - விசாரணைக் குழு அமைத்த நிர்வாகம்
சாதி, மத ரீதியான ஒடுக்குமுறைகள் ஐஐடி வளாகங்களில் நிகழ்வதாகவும், முறையாக இடஒதுக்கீடு பின்பற்றப்படாததால் உயர்சாதியினர் ஆதிக்கம் உள்ளதாக குற்றச்சாட்டுக்கள் உள்ளன.
சென்னை: ஆந்திராவை சேர்ந்த 3 ஆம் ஆண்டு பி டெக் மாணவர் சென்னை ஐஐடியில் மர்மமான முறையில் மரணமடைந்து இருக்கும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், இது தொடர்பாக ஐஐடி நிர்வாகம் விளக்கம் கொடுத்து உள்ளது.
இந்தியாவில் இயங்கி வரும் கல்வி நிறுவனங்களிலேயே மத்திய அரசால் நடத்தப்படும் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி (ஐஐடி) தலை சிறந்ததாக கூறப்படுகிறது.
சென்னை, மும்பை, கான்பூர், லக்னோ உட்பட இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் கிளை பரப்பி செயல்பட்டு வரும் இந்த ஐஐடி படைக்கும் சாதனைகளுக்கு இணையாக அங்கிருந்து அதிர்ச்சி செய்திகளும் வருகின்றன.

தொடரும் மரணங்கள்
சாதி, மத ரீதியான ஒடுக்குமுறைகள் ஐஐடி வளாகங்களில்நிகழ்வதாக அடிக்கடி செய்திகள் வெளியாகி வருகின்றன. அவ்வப்போது ஐஐடி வளாகங்களில் மாணவ, மாணவிகளின் தற்கொலை சம்பவங்களும், மர்ம மரணங்களும் நடந்துகொண்டு இருக்கின்றன. முறையாக இங்கு இடஒதுக்கீடு பின்பற்றப்படாததால் இங்கு உயர்சாதியினர் ஆதிக்கம் உள்ளதாக குற்றச்சாட்டுக்கள் உள்ளன.

மர்ம மரணம்
சென்னை ஐஐடியில் சாதிய ஒடுக்குறை அதிகம் இருப்பதாக கேரளாவை சேர்ந்த உதவி பேராசிரியர் பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்தார். அதேபோல் கேரளாவை சேர்ந்த ஃபாத்திமா என்ற மாணவி கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் மர்மமான முறையில் ஐஐடி வளாகத்தில் உயிரிழந்ததும் பெரும் சர்ச்சைக்கு உள்ளானது.

பாத்திமா வழக்கு
ஐஐடி பேராசிரியர் சுதர்ஷன் பத்மனாபன் உள்ளிட்டோர் மீது பாத்திமா குற்றம்சாட்டி தனது செல்போனில் எழுதி இருந்த படங்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தின. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த ஸ்டீவன் மர்மமான முறையில் உயிரிழந்தார். அவர் தூக்கிட்டு தற்கொலை செய்ததாக தகவல்கள் வெளியாகின.

இன்று ஒரு மரணம்
இந்த நிலையில் இன்று ஐஐடியில் பி டெக் 3 ஆம் ஆண்டு எலெக்ட்ரிகல் இஞ்சினியரிங் படித்த ஆந்திர மாநிலத்தை சேர்ந்த மாணவர் புஷ்பக் ஸ்ரீ சாய், விடுதியில் உள்ள அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டார். அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்த போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.

ஐஐடி விளக்கம்
இதுகுறித்து சென்னை ஐஐடி வெளியிட்டு இருக்கும் செய்திக் குறிப்பில், "சென்னை ஐஐடியில் 3 ஆம் ஆண்டு பி டெக் எலெக்ட்ரிகல் இஞ்சினியரிங் படித்து வந்த மாணவர் மறைந்தது வேதனை அளிக்கிறது. கொரோனாவுக்கு பிந்தைய காலம் சவாலானதாக இருக்கிறது. மாணவர்கள், கல்வியாளர்கள், ஊழியர்களின் நலன் காக்க ஐஐடி மெட்ராஸ் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

விசாரணைக் குழு
அவர்களின் நல்வாழ்வுக்காக தொடர்ந்து பல்வேறு உதவிகளை செய்து வருகிறோம். ஐஐடியில் இதுபோன்ற விசயங்களை கண்காணிக்கவும் விசாரிக்கவும் மாணவர் பிரதிநிதிகளை கொண்ட உள் விசாரணை குழு அண்மையில் அமைக்கப்பட்டது. மாணவருடைய குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

ஆன்மா சாந்தி அடையட்டும்
இதுபோன்ற எதிர்பாராத சூழலில் மாணவரின் குடும்பத்தின் தனியுரிமையை மதிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். மாணவரின் மறைவுக்காக ஐஐடி சென்னை நிர்வாகம் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதுடன், துக்கத்தில் இருக்கும் மாணவருடைய நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் துணை நிற்போம். அவரின் ஆன்மா சாந்தி அடையட்டும்." என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.












Click it and Unblock the Notifications