Chennai IT employee: சென்னை ஐடி ஊழியருக்கு விபரீத ஆசை! ’ஆப்’ நண்பரை தனிமையில் சந்திக்க போனவருக்கு நடந்த கொடூரம்
சென்னை: சென்னை முகலிவாக்கத்தில் ஓரினச் சேர்க்கை செயலி பயன்படுத்திய சாப்ட்வேர் இன்ஜினியருக்கு வாழ்நாளில் மறக்க முடியாத சம்பவம் நடந்துள்ளது. டேட்டிங் செயலியில் அழைத்த நண்பரை தனிமையில் சந்திக்க போயிருக்கிறார். இருவரும் தனிமையில் இருந்த சில நிமிடங்களில் அந்த சாப்ட்வேர் இன்ஜினியருக்கு என்ன நடந்தது என்பது பற்றிய விவரங்களை பார்க்கலாம்.
இன்றைய இளம் தலைமுறையினர் மத்தியில் செல்போன்களின் பயன்பாடு அதிகமாக உள்ளது. எப்போதும் செல்போனில் மூழ்கி கிடக்கும் இளைஞர்கள் சிலர் டேட்டிங் செயலிகளை பயன்படுத்தி முன் பின் தெரியாதவர்களை நம்பி சென்று பெரும் சிக்கலில் மாட்டிக்கொள்ளும் சம்பவங்கள் நடைபெறுவதை பார்க்க முடிகிறது.

முதலை வாயில் தலையை கொடுப்பது போல
டேட்டிங் செயலிகளில் பழகியவர்களை நம்பி, ஆள் நடமாட்டம் இல்லாத இடங்களுக்கு சென்று வில்லங்கத்தில் சிக்கிக் கொள்கிறார்கள். சிலர் வீடியோ எடுத்து மிரட்டி பணம் பறிப்பது, அல்லது ஆட்களை வரவழைத்து கையில் இருக்கும் பணம், தங்க நகைகளை பறித்து செல்வது போன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபடுகிறார்கள்.
இந்த மோசடி கும்பலிடம் தானாக சென்று முதலை வாயில் தலையை கொடுப்பது போல சில அப்பாவி இளைஞர்கள் சிக்கிக் கொள்கிறார்கள். போலீசார் இது தொடர்பாக பலமுறை எச்சரிக்கை விடுத்தாலும் இதுபோன்ற சம்பவங்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. அப்படியான ஒரு சம்பவம்தான் சென்னையில் நடைபெற்றுள்ளது. இது பற்றிய விவரங்களை பார்க்கலாம்.
சென்னை ஐடி ஊழியருக்கு விபரீத ஆசை
சென்னை முகலிவாக்கம் பகுதியில் வசிப்பவர் கவுதம். 25 வயதான இவர் சாப்ட்வேர் இன்ஜினியர். புதுப்பேட்டையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். நல்ல சம்பளம், கவுரவமான வேலை என இருந்த கவுதமிற்கு விபரீத ஆசை வந்துள்ளது. அதாவது, ஓரினச் சேர்க்கையாளர்கள் பயன்படுத்தும் கிரைண்டர் செயலியை பயன்படுத்தியுள்ளார்.
அந்த செயலியில் ராஜேஷ் என்பவர் கவுதமிற்கு அறிமுகமானார். ராஜேஷ் கூப்பிட்டதன் பேரில், கவுதம் தனது பைக்கில் நந்தம்பாக்கம் பகுதியில் உள்ள ஆள் நடமாட்டம் இல்லாத காலியிடத்திற்கு சென்றுள்ளார். அங்கு இருவரும் தனிமையில் பேசிக்கொண்டிருந்தனர். அப்போது அங்கு திடீரென 2 பைக்குகளில் 5 பேர் கொண்ட கும்பல் வந்துள்ளது.
ஜிபே மூலம் பணம் பறிப்பு
இதை சற்றும் எதிர்பாராத கவுதம் அதிர்ச்சி அடைந்துள்ளார். கண் இமைக்கும் நேரத்தில் கவுதமை கையால் தாக்கிய அந்த கும்பல், அவரிடம் இருந்த செல்போனை பறித்து 'ஜிபே' மூலம் ரூ.24 ஆயிரத்தை தங்களது வங்கி கணக்கிற்கு அனுப்பிவிட்டு செல்போனை மீண்டும் அவரிடம் கொடுத்துவிட்டு சென்றனர். இதனால் அதிர்ச்சி அடைந்த கவுதம், தனக்கு நேர்ந்த கொடூரம் பற்றி காவல்துறையில் புகார் அளித்தார்.
7 செல்போன்கள் பறிமுதல்
நந்தம்பாக்கம் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அதில் கவுதமை தனிமையில் சந்திக்க அழைத்த ராஜேஷ், தனது நண்பர்களுடன் சேர்ந்து பணத்தை பறித்தது தெரியவந்தது.
இதையடுத்து போரூர் பகுதியைச் சேர்ந்த ராஜேஷ் (வயது 25), அவரது நண்பர்களான மணிகண்டன் (23), வரதராஜ் என்ற சஞ்சய் (24), கோகுல் (22), கணேஷ்குமார் (24), கவுதம் (19) ஆகிய 6 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 7 செல்போன்கள், 3 பைக்குகளையும் பறிமுதல் செய்தனர். இவர்கள் மேலும் பலரிடம் இதுபோல் மோசடியில் ஈடுபட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications