மறுபடியுமா.. மீண்டும் உயர்ந்த தக்காளி விலை! சென்னை கோயம்பேடு சந்தை காய்கறிகளின் விலை பட்டியல் இதோ
சென்னை: சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் தக்காளி விலை இன்று மீண்டும் அதிகரித்துள்ளது. அதேபோல் சின்னவெங்காயம், இஞ்சி, பூண்டு உள்ளிட்டவற்றின் விலையும் தொடர்ந்து உச்சத்தில் உள்ளதால் இல்லத்தரசிகள் ஷாக்காகி உள்ளனர்.
இந்தியாவில் கடந்த 10 நாட்களாக தொடர்ந்து தக்காளியின் விலை அதிகரித்துள்ளது. பல இடங்களில் தக்காளி விலை ரூ.200யை கடந்தது. தமிழகத்தை பொறுத்தமட்டில் தக்காளி விலை ரூ.150யை கடந்து விற்பனையானது. இந்த விலை உயர்வால் மக்கள் அதிகமாக பாதிக்கப்பட்டனர்.

தக்காளி விலை உயர்வை சரிசெய்ய மத்திய அரசு மற்றும் அந்தந்த மாநில அரசுகளும் நடவடிக்கையை எடுத்தனர். தமிழ்நாட்டில் ரேஷனில் குறைந்த விலைக்கு தக்காளி விற்பனை தொடங்கியது. இது பொதுமக்களுக்கு ஓரளவுக்கு கைக்கொடுத்தது.
இதற்கிடையே தான் தக்காளியை போல் சின்ன வெங்காயத்தின் விலையும் அதிகரிக்க தொடங்கியது. தக்காளி, சின்ன வெங்காயம் உள்ளிட்டவை சமையலில் முக்கிய பொருளாக உள்ளதால் மக்கள் சிரமத்தை சந்தித்தனர். மேலும் அவர்களுக்கு கூடுதல் செலவு ஏற்படும் நிலை உருவானது. இதனால் பல குடும்பத்தினர் தக்காளி பயன்பாட்டை குறைத்து கொண்டனர்.
இந்நிலையில் தான் தற்போது தக்காளி விலை என்பதும் தங்கம் போன்று ஏறி இறங்கி வருகிறது. அதன்படி கோயம்பேடு மார்க்கெட்டில் ரூ.120க்கு விற்பனையான தக்காளி இன்று திடீரென விலை உயர்ந்தது. இன்று காலையில் ஒரு கிலோ தக்காளி ரூ.5 உயர்ந்து ரூ.125க்கு விற்பனை செய்யப்பட்டது. நவீன் தக்காளி ரூ.140க்கு விற்பனை செய்யப்பட்டது.
அதேபோல் சின்ன வெங்காயம் ரூ.180க்கு விற்பனையாகி வருகிறது. சின்ன வெங்காயத்தின் விலை கடந்த சில நாட்களாக மாற்றம் இல்லாமல் உள்ளது. இருப்பினும் கிலோ ரூ.180க்கு விற்பனை செய்யப்பட்டதால் ஏழைகள் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனாலும் பெரிய வெங்காயம் கிலோ ரூ.20க்கு விற்பனையாகிறது.
இதுதவிர இஞ்சி கிலோ ரூ.230க்கும், பூண்டு கிலோ ரூ.200க்கும் விற்பனையாகிறது. உருளை கிலோ ரூ.30, பீன்ஸ் ரூ.100, ஊட்டி கேரட் ரூ.65, வண்ண குடைமிளகாய் ரூ.200, பட்டாணி ரூ.190 விற்பனை செய்யப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications