தண்ணி கிடைக்காமல் உயிருக்கு போராடியவரை போதையில் விழுந்ததாக விட்டுச் சென்ற மக்கள்! மெரினா சோகம்
சென்னை: சென்னை மெரினாவில் நடந்த விமான சாகச நிகழ்ச்சிக்கு வந்த இடத்தில் பார்க்கிங்கில் மயங்கி விழுந்த தனது கணவர் குடித்துவிட்டு மயங்கி கிடப்பதாக நினைத்துவிட்டு யாருமே முதலுதவி செய்யவில்லை என அவருடைய மனைவி கண்ணீர் மல்க பேட்டி அளித்துள்ளார்.
இந்திய விமான படை தொடங்கப்பட்டு 92 ஆண்டுகள் முடிவடைந்து 93ஆவது ஆண்டு தொடங்கியுள்ளது. இதைக் கொண்டாடும் வகையில் சென்னை மெரினாவில் விமான சாகச நிகழ்ச்சி நேற்று நடந்தது. இந்த விழா காலை 11 மணி முதல் மதியம் 1 வரை நடந்தது.

இந்த நிகழ்வுக்கு வருவோர் போதிய அளவில் தண்ணீர், குடை, தொப்பி, உணவு, ஸ்னாக்ஸ் உள்ளிட்டவைகளை கொண்டு வருமாறு தமிழக அரசு அறிவுறுத்தியிருந்தது. இந்த நிகழ்வை காண 10 லட்சம் பேர் வந்ததாக கூறப்படுகிறது. மெரினாவில் மட்டும் 4 லட்சம் பேர் திரண்டிருந்தனர்.
11 மணிக்கு தொடங்கும் நிகழ்வுக்கு காலை 6 மணி முதலே மக்கள் வரத் தொடங்கினர். ஒரு 10 மணி வாக்கில் காமராஜர் சாலைக்குள் செல்ல முடியாதபடி தடுப்புகள் போடப்பட்டிருந்தது. அது போல் காலை 9.30 மணிக்கே இரு சக்கர வாகனம், 4 சக்கர வாகனம் ஆகியவற்றை பார்க்கிங் ஸ்பேஸ் மூடப்பட்டுவிட்டது. இதனால் நிறைய பேர் ஆங்காங்கே வாகனங்களை நிறுத்திவிட்டு சென்றதால் கடும் போக்குவரத்து பாதிப்பு இருந்தது.
காலையில் விமான சாகச நிகழ்ச்சிக்கு வந்த மக்கள் வெவ்வேறு நேரங்களில் வந்த நிலையில் முடிந்தவுடன் போக்குவரத்துக்கு அஞ்சி ஒரே நேரத்தில் மெரினாவிலிருந்து வெளியேறினர். இதனால் மெரினாவிலிருந்து வெளியேற முடியாத அளவிற்கு டிராபிக் இருந்தது. மேலும் வெயிலினால் பாதிக்கப்பட்டவர்கள் மயக்கமடைந்தனர். அவர்களை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் ஆம்புலன்ஸ்களுக்கு கூட வழி இல்லாத நிலை இருந்தது.
இந்த நிலையில் வெயிலால் 100 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் 7 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார்கள். மேலும் 5 பேர் பலியாகிவிட்டனர். அவர்களில் கார்த்திகேயன் என்ற 34 வயது இளைஞரும் ஒருவர். திருவொற்றியூரை சேர்ந்த அவருக்கு சிவரஞ்சினி என்ற மனைவியும் இரண்டரை வயதில் குழந்தையும் இருக்கிறது.
இவர் நிகழ்ச்சி முடிந்ததும் தான் இரு சக்கர வாகனங்களை பார்க் செய்த இடத்திற்கு சென்றிருந்தார். அங்கு அவர் பைக்கை எடுக்கும் போது வாந்தி எடுத்து திடீரென மயங்கி விழுந்தார். இதையடுத்து அவர் 2 மணி நேரங்களுக்கு பிறகு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல ஆம்புலன்ஸில் ஏற்றினர். இந்த நிலையில் அவர் இறந்துவிட்டார்.
இதுகுறித்து கார்த்திகேயனின் தங்கை கூறுகையில், கார்த்திகேயன் எனது பெரியம்மா பையன், கொரோனாவில் என் பெரியப்பாவை இழந்துவிட்டோம். காவல் துறையோ ஆம்புலன்ஸோ என் அண்ணனை சரியான நேரத்தில் மீட்டு காப்பாற்றியிருக்கலாம். என் அண்ணனுக்கு திருமணமாகி 4 ஆண்டுகள்தான் ஆகின்றன. அவருக்கு இரண்டரை வயதில் சிறிய குழந்தை உள்ளது.
அவர்களுக்கெல்லாம் யார் பதில் சொல்வது. என் அண்ணனை ஆம்புலன்ஸில் ஏற்றிய போதே அவருக்கு பல்ஸ் இல்லை என அங்கிருந்த ஊழியர் என் அண்ணியிடம் தெரிவித்தாராம். மேலும் சிபிஆர் சிகிச்சை செய்தும் அவரது இதயத்தை மீண்டும் துடிக்க வைக்க முடியவில்லை. எனினும் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது அங்கு மருத்துவரும் பரிசோதனை செய்துவிட்டு அவர் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இந்த விஷயம் குறித்து அவருடைய மனைவி சிவரஞ்சனி கூறுகையில் என்னையும் குழந்தையையும் அழைத்துக் கொண்டு ஒரு இடத்தில் நிற்குமாறு என் கணவர் கூறினார். பிறகு அவர் பார்க்கிங்கில் இருந்து வண்டி எடுக்க சென்றார். ஒன்றரை மணிக்கு எங்களை காத்திருக்குமாறுவிட்டுச் சென்ற என் கணவர், 3 மணியாகியும் வரவில்லை. நான் போன் செய்து கொண்டே இருந்தேன். எடுக்கவில்லை. பிறகு ஒரு முறை டவர் கிடைத்தது. அப்போதுதான் ஒருவர் எடுத்து பேசினார்.
எங்களிடம் பேசியவர், "நீங்கள் போன் செய்யும் நபர் வாந்தி எடுத்து விழுந்து கிடக்கிறார். அவர் என்ன குடித்திருக்கிறாரா" என கேட்டார். குடித்திருந்தால் கூட ஏன் முதலுதவி செய்யக் கூடாதா, குடிப்பவர்களுக்கும் ஒரு குடும்பம் இருக்கிறது என யோசிக்க மாட்டார்களா? அவர்களுடைய வீட்டில் யாராவது குடித்துவிட்டு விழுந்து கிடந்தால் இப்படித்தான் விட்டுவிட்டு சென்றுவிடுவார்களா? என் வீட்டுக்காரர் காபி, டீ கூட குடிக்க மாட்டார் என கண்ணீர் மல்க தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications