தமிழகத்தில் இந்த 8 மாவட்டங்களில் இன்று கனமழை கொட்ட போகுது.. சென்னை நிலவரம் என்ன தெரியுமா?
சென்னை: தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் திருவள்ளூர், சேலம் உள்பட 8 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
மேலும் 1 வாரம் ஊரடங்கு நீட்டிப்பா.. தளர்வுகள் அறிவிக்கப்படுமா.. அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஸ்டாலின்
சென்னையில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக் கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவிக்கப்பட்டது.
மாவட்டங்களில் கனமழை
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியதாவது:- மத்திய பிரதேசம் முதல் வட தமிழ்நாட்டின் கடலோர பகுதிகள் வரை வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, திருவள்ளூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், வட தமிழகத்தின் ஏனைய மாவட்டங்களில், ஒரு சில இடங்களில் மிதமான மழையும், தென் தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக் கூடும்.
தென் மாவட்டங்களில் மழை
07.06.2021 மற்றும் 08.06.2021 ஆகிய நாட்களில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், ஏனைய மாவட்டங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும். 09.6.2021 மற்றும் 10.6.2021 ஆகிய நாட்களில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் ஏனைய மாவட்டங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.
சென்னையில் எப்படி
சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்துக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸ் ஆகவும் இருக்கும். கடந்த 24 மணி நேரத்தை பொறுத்தவரையில் அதிகபட்சமாக திருமயம்(புதுக்கோட்டை) 19 செ.மீ மழையும் , லப்பைகுடிக்காடு(பெரம்பலூர்) 9 செ.மீ மழையும் பெய்துள்ளது.
மீனவர்களுக்கு அறிவுறுத்தல்
08.06.2021-ல் மன்னார் வளைகுடா மற்றும் தெற்கு வங்கக் கடல் பகுதிகளில் மணிக்கு 40-50 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசும். 09.06.2021 மற்றும் 10.06.2021-ல் மத்திய வங்கக் கடல், தெற்கு கடல் பகுதிகளில் மணிக்கு 40-50 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசும். இந்த பகுதிகளில் மீனவர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். கேரள கடலோர பகுதிகள் மற்றும் லட்சதீவு பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ வேகத்தில் வீசக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.