இன்று சென்னையில் கிரிக்கெட் போட்டி.. மெட்ரோ பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு! ரயில் சேவை நீட்டிப்பு
சென்னை: சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் டி20 போட்டி நடக்கும் நிலையில், சென்னை மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கடைசி மெட்ரோ ரயில் இன்று இரவு 12 மணிக்கு அரசினர் தோட்டத்தில் இருந்து புறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 5 போட்டிகளை கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடுகிறது. ஜனவரி 22 முதல் கொல்கத்தா, சென்னை, ராஜ்கோட், புனே மற்றும் மும்பை என மொத்தம் 5 இடங்களில் நடைபெறும் போட்டிகளில் இந்தியா இங்கிலாந்துக்கு எதிராக களமிறங்குகிறது.

இந்தியா vs இங்கிலாந்து டி20 தொடரின் முதல் போட்டி கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் 22 ஆம் தேதி நடைபெற்றது. இரண்டாவது போட்டி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் இன்று நடைபெறுகிறது. இந்நிலையில், கிரிக்கெட் போட்டியை பார்க்கச் செல்வோர் இன்று மெட்ரோ ரயில் சேவையை இலவசமாக பயணிக்கலாம் என மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
மேலும், சென்னையில் இன்று மெட்ரோ ரயில் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது, சென்னை அரசினர் தோட்டம் மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து விம்கோ நகர் பணிமனை மற்றும் விமான நிலையம் மெட்ரோ இரயில் நிலையம் வரை செல்லும் கடைசி மெட்ரோ இரயில் இரவு 12 மணிக்கு புறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மெட்ரோ அறிவிப்பு
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்துடன் (TNCA) இணைந்து இன்று எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் நடைபெறும் இந்தியா vsஇங்கிலாந்து T20 சர்வதேச கிரிக்கெட் போட்டியைப் பார்வையிட வருபவர்களுக்கு தடையற்ற போக்குவரத்தை வழங்குவதற்காக மெட்ரோ ரயில் சேவையை நீட்டித்துள்ளது.
நீட்டிக்கப்பட்ட மெட்ரோ இரயில் சேவைகள்
கடைசி மெட்ரோ ரயில்: அரசினர் தோட்டம் மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து விம்கோ நகர் பணிமனை மற்றும் விமான நிலையம் மெட்ரோ இரயில் நிலையம் வரை செல்லும் கடைசி மெட்ரோ இரயில் இரவு 12:00 மணிக்கு புறப்படும்.
பச்சை வழித்தடத்தில் உள்ள மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு செல்லும் பயணிகள் (ஈக்காட்டுத்தாங்கல், அசோக் நகர், வடபழனி, அரும்பாக்கம், புரட்சித்தலைவிடாக்டர். ஜெ. ஜெயலலிதா புறநகர் பேருந்து நிலையம் மெட்ரோ, கோயம்பேடு, திருமங்கலம், அண்ணாநகர் கோபுரம், அண்ணாநகர் கிழக்கு, செனாய் நகர், பச்சையப்பன் கல்லூரி, கீழ்ப்பாக்கம், நேரு பூங்கா, எழும்பூர்) புரட்சித்தலைவர் டாக்டர்.எம்.ஜி. இராமச்சந்திரன் சென்ட்ரல் மெட்ரோ நிலையத்தில்(நடைமேடைகள் 1 & 2) வழித்தடம் மாற்றம் செய்துகொள்ளலாம்.
பரங்கிமலை மெட்ரோ இரயில் நிலையத்திற்கு செல்லும் பயணிகள் அறிஞர் அண்ணா ஆலந்தூர் மெட்ரோ நிலையத்தில்(நடைமேடை 3) வழித்தடம் மாற்றம் செய்து கொள்ளலாம்.
பயணிகள் கடைசி மெட்ரோ இரயில் புறப்படுவதற்கு 10நிமிடங்களுக்கு முன்னதாகவே அரசினர் தோட்டம் மெட்ரோஇரயில் நிலையத்திற்குள் வருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
ஸ்பான்சர் செய்யப்பட்ட மெட்ரோ பயணம்:
தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் கிரிக்கெட் போட்டிக்கானபயணச்சீட்டு வைத்திருப்பவர்களுக்கு மெட்ரோ பயணங்களை ஸ்பான்சர் செய்கிறது.
• கிரிக்கெட் போட்டிக்கான நுழைவுச்சீட்டை பயன்படுத்தி போட்டி நடைபெறும் நாளில் பயணிகள் எந்த மெட்ரோ இரயில் நிலையத்தில் இருந்தும் அரசினர் தோட்டம் மெட்ரோ நிலையத்திற்கு இடையிலான சுற்றுபயணத்தினை மேற்கொள்ளலாம்.
• டிஜிட்டல் மற்றும் அச்சிடப்பட்ட நுழைவு பயணச்சீட்டுகள் இரண்டும் தனித்துவமான QR குறியீடுகளைக்கொண்டுள்ளன, இதை பயன்படுத்தி மெட்ரோ இரயில் நிலையங்களில் உள்ள தானியங்கி நுழைவு இயந்திரத்தில் ஸ்கேன் செய்து மெட்ரோவில் பயணிக்கலாம்.
• கிரிக்கெட் போட்டிக்கான நுழைவுச்சீட்டை வைத்திருப்பவர்கள் ஜனவரி 25, 2025 அன்று ஒரு சுற்றுப்பயணத்திற்கு (2 நுழைவு மற்றும் 2 வெளியேறுதல்)பயன்படுத்தலாம்.
வாகன நிறுத்துமிடம்:
பயணிகளின் வசதிக்காக அனைத்து மெட்ரோ இரயில் நிலையங்களிலும் போதுமான வாகன நிறுத்துமிடங்கள் உள்ளன. நிலையான வாகன நிறுத்தம் கட்டணம் பொருந்தும்.
மெட்ரோ சேவைகளை பயன்படுத்துவதற்கு பங்கேற்பாளர்கள் தங்கள் நுழைவுச்சீட்டுகளை பாதுகாப்பாகக் கையாளவும் அல்லது டிஜிட்டல் QR குறியீடு பயணச்சீட்டுகளை தங்கள் மொபைலில் பதிவிறக்கம் செய்யவும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் மற்றும் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் இந்தப் போட்டியில் கலந்துகொள்ளும் அனைத்து கிரிக்கெட் ஆர்வலர்களுக்கும் பாதுகாப்பான மற்றும் எளிதான பயண அனுபவத்தை வழங்குவதை நோக்கமாக கொண்டுள்ளன.












Click it and Unblock the Notifications