மத்திய அரசு நிதி ஓகே! ஆனா சென்னை மெட்ரோவுக்கு வந்த புது சிக்கல்! இந்த பிரச்னையை யாரும் எதிர்பார்க்கல
சென்னை: தமிழ்நாடு அரசின் தொடர் கோரிக்கைகளுக்கு பிறகே சென்னை மெட்ரோ 2ம் கட்டத்திற்கு நிதியளிக்க மத்திய அரசு சம்மதித்தது. நிதி விடுவிக்கப்பட்டதைத் தொடர்ந்து சென்னை மெட்ரோ பணிகள் விரைந்து நடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இப்போது மெட்ரோ 2ம் கட்டத்திற்குப் பெரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இது குறித்து நாம் பார்க்கலாம்.
சென்னை மெட்ரோ இப்போது 2 ரூட்களில் இயங்கி வரும் நிலையில், இதற்கான வரவேற்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மறுபுறம் 2ம் கட்ட மெட்ரோ கட்டுமானமும் தீவிரமாக நடந்து வருகிறது.

மெட்ரோ: இப்போது மாதவரம்- சிறுசேரி சிப்காட், பூந்தமல்லி- கலங்கரை விளக்கம், மாதவரம்- சோழிங்கநல்லூர் என 116.1 கிமீ தூரத்திற்கு மெட்ரோ 2ம் கட்ட கட்டுமானமும் நடந்து வருகிறது. தொடக்கத்தில் இந்தத் திட்டத்தில் மத்திய அரசின் நிதி கிடைப்பதில் சிக்கல் நிலவியது. தமிழ்நாடு அரசின் தொடர் முயற்சிக்கு பிறகே மத்திய அரசின் நிதி கிடைத்தது. இதையடுத்து கட்டுமானம் வேகமாக நடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இதற்கிடையே சென்னை மெட்ரோவுக்கு இப்போது புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. ரூ. 63,246 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் சென்னை மெட்ரோ 2ம் கட்டத்தின் கட்டுமானத்திற்குப் போதியளவில் தொழிலாளர்கள் கிடைப்பதில்லை என்ற புகார் எழுந்துள்ளது. சென்னை மெட்ரோ கட்டுமானத்தில் சுமார் 40% தொழிலாளர்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் கட்டுமான பணிகள் பாதிக்கப்படுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
தொழிலாளர்கள்: சென்னை மெட்ரோ 2ம் கட்டத்தின் கட்டுமானம் கடந்த சில ஆண்டுகளாக நடந்து வரும் நிலையில், பல ஆயிரம் தொழிலாளர்கள் இந்த கட்டுமான பணிகளில் ஈடுபட்டு இருந்தனர். பெரும்பாலும் பீகார், ஜார்கண்ட், மேற்கு வங்கம், சத்தீஸ்கர் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்களே கடந்த இரண்டு ஆண்டுகளாக இதன் கட்டுமானத்தில் ஈடுபட்டு இருந்தனர்.
கடந்த ஏப்ரல் மாதம் பல ஆயிரம் தொழிலாளர்கள் லோக்சபா தேர்தலில் வாக்களிக்க தங்கள் சொந்த ஊருக்குச் சென்றுள்ளனர். அப்போது தான் தொழிலாளர் பற்றாக்குறை முதலில் ஏற்பட்டுள்ளது. அவர்கள் மே மாதம் அல்லது ஜூன் மாதம் திரும்புவார்கள் என்றே எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவர்களில் பலர் இப்போது நவ. மாதம் வரை திரும்பவில்லை. இதுவே பிரச்சினைக்குக் காரணமாகும்.
சிக்கல்: தொழிலாளர் பற்றாக்குறையை உணர்ந்த சிஎம்ஆர்எல், சொந்த ஊர் சென்ற தொழிலாளர்களுக்குப் பதிலாக புதிய தொழிலாளர்களை பணியில் ஈடுபடுத்தவும் கான்டிராக்டர்களை வலியுறுத்தியுள்ளது. இருப்பினும், சில நூறு புதிய பணியாளர்களை மட்டுமே கண்டுபிடிக்க முயன்றதாகவும் இதனால் பணியாளர்கள் பற்றாக்குறை பெரிய பிரச்சினையாக மாறியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
பற்றாக்குறை: இது தொடர்பாக அதிகாரிகள் கூறுகையில், "பற்றாக்குறை காரணமாக முதலில் ஒரு ஒப்பந்ததாரர் சில தொழிலாளர்களை விமானம் மூலம் அழைத்து வந்தார். மற்ற கான்டிராக்டர்களும் ரயில் மூலம் தொழிலாளர்களை அழைத்து வந்தனர். ஆனால், அவை போதுமானதாக இல்லை. இன்னுமே கூட சுமார் 40% தொழிலாளர்கள் பற்றாக்குறை உள்ளது.
தற்போதைய சூழலில் காரிடார் 4இல் உள்ள பூந்தமல்லி- போரூர் பகுதியைப் பயன்பாட்டிற்குக் கொண்டு வருவதே எங்கள் நோக்கம். எனவே, இதற்காக அதிகபட்ச தொழிலாளர்களைத் திரட்டியுள்ளோம். ஆனாலும், இன்னுமே கூட போதியளவில் தொழிலாளர்கள் கிடைக்கவில்லை. இதனால் திட்டமிட்டபடி அடுத்தாண்டிற்குள் கட்டுமானம் முடியுமா என்று உறுதியாகத் தெரியவில்லை. மேலும், காரிடார் 5இல் உயர்த்தப்பட்ட பகுதியில் தொழிலாளர்களின் எண்ணிக்கை போதுமானதாக இல்லை. ஏனென்றால் பொதுவாகவே சுரங்க மெட்ரோ பாதையைக் காட்டிலும் உயர்த்தப்பட்ட மெட்ரோ பாதைக்குத் தான் அதிகளவில் தொழிலாளர்கள் தேவை.
இதுதான் பிரச்சினை: இங்கு பணிபுரிந்த தொழிலாளர்கள் இப்போது நாட்டின் வடக்கு மற்றும் மத்திய பகுதிகளில் நடக்கும் மெட்ரோ ரயில் கட்டுமானம் உட்படப் பிற திட்டங்களுக்கு வேலைக்குப் போய்விட்டனர். அவர்களின் சொந்த ஊருக்கு அருகே இருப்பதால் அவ்வப்போது வீட்டிற்குச் செல்ல முடியும் என்பதால் அவர்கள் அங்கு வேலை செய்யவே ஆர்வம் காட்டுகிறார்கள்" என்றார்












Click it and Unblock the Notifications