தொழில்நுட்ப கோளாறு சரிசெய்யப்பட்டது.. மீண்டும் வழக்கம்போல் இயக்கப்படும் சென்னை மெட்ரோ ரயில் சேவை
சென்னை: சென்னை தண்டையார்பேட்டை மெட்ரோ ரயில் நிலைய சுரங்கப்பாதையில் திடீர் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக இன்று காலை முதல் மெட்ரோ ரயில்கள் தாமதமாக இயக்கப்பட்டு வந்ததால் பயணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். தற்போது பிரச்சனை சரிசெய்யப்பட்டுள்ளதால் காலை 8.50 மணி முதல் சென்னை மெட்ரோ ரயில்கள் வழக்கம்போல் இயங்க தொடங்கி உள்ளன.
சென்னையில் போக்குவரத்து நெரிசலில் சிக்காமல் பொதுமக்கள் விரைவாக பயணிக்க மெட்ரோ ரயில் சேவை உள்ளது. இந்த மெட்ரோ ரயில் சேவையை தினமும் 3 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் தான் நேற்று இரவு திடீரென்று தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. அதாவது சென்னை தண்டையார்பேட்டை மெட்ரோ ரயில் நிலைய சுரங்கபாதையில் திடீர் கோளாறு ஏற்பட்டது.
இதனால் நேற்று இரவு 10 மணி முதல் மெட்ரோ ரயில் சேவையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த தொழில்நுட்ப கோளாறு காரணமாக 20 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டன. இந்த பிரச்சனை இன்னும் முழுமையாக சரிசெய்யப்படவில்லை. இதனால் ஒரு வழித்தடத்தில் மட்டுமே மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
இதன் காரணமாக இன்று காலையிலும் மெட்ரோ ரயில் இயக்கத்தில் தாமதம் ஏற்பட்டுள்ளது. அதன்படி விமான நிலையம் முதல் விம்கோ நகர் டெப்போ வரையிலான மெட்ரோ ரயில் சேவை 18 நிமிடத்துக்கு ஒருமுறை இயங்குகிறது. விமான நிலையம் முதல் வண்ணாரப்பேட்டை, டோல்கேட் முதல் விம்கோ நகர் டெப்போ இடையே மெட்ரோ ரயில்கள் 6 நிமிட இடைவெளியில் இயக்கப்பட்டு வருகிறது.
அதேபோல் சென்ட்ரல் - ஏர்போர்ட் வழித்தடத்தில்7 நிமிடத்துக்கு ஒருமுறை மெட்ரோ ரயில் இயக்கப்படுகிறது. இதனால் மெட்ரோ ரயிலில் இன்று காலையில் வேலை, கல்லூரிக்கு செல்லும் பயணிகள் முன்கூட்டியே திட்டமிட்டு பயணிப்பது நல்லது. இந்த தொழில்நுட்ப கோளாறுக்கு சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் வருத்தம் தெரிவித்துள்ளது. அதோடு பிரச்சனையை விரைவில் சரிசெய்வதாக தெரிவித்துள்ளது. இதனால் மெட்ரோ பயணிகள் பாதிக்கப்பட்டனர்.
இந்நிலையில் தான் தொழில்நுட்ப கோளாறு இன்று காலை 8.50 மணிக்கு சரிசெய்யப்பட்டது. இதையடுத்து சென்னை விம்கோ நகர் டெப்போ - விமான நிலையம் இடையே வழக்கம்போல் மெட்ரோ ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இதுபற்றி சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில், ‛‛பராமரிப்பு பணி சரிசெய்யப்பட்டுள்ளது. விம்கோ நகர் டெப்போ மற்றும் விமான நிலையம் (நீலநிற வழித்தடம்) இடையேயான மெட்ரோ ரயில் சேவை இன்று காலை 8.50 மணி முதல் வழக்கம்போல் இயங்க தொடங்கி உள்ளது. சிரமத்துக்கு மன்னிக்கவும்'' என்று கூறியுள்ளது.












Click it and Unblock the Notifications