அரசு பஸ், டிரைவர்களுக்கு கிடிக்கிப்பிடி.. சென்னை மாநகர போக்குவரத்து கழகம் போட்ட ஆர்டர்
சென்னை: அனைத்து டெப்போக்களிலும் பணிபுரியும் டிரைவர்கள், கண்டக்டர்கள் பணியின் போது சீருடை மற்றும் பேட்ஜ் அணிந்து பணிபுரிய வேண்டும் என சென்னை மாநகர் போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது. மேலும், இதனை கிளை மேலாளர்கள் மற்றும் மண்டல மேலாளர்கள் கண்காணிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் இயக்கப்படும் பேருந்துகள் பயணிகளின் போக்குவரத்து தேவையை பெரிதும் தீர்த்து வைக்கின்றன. என்னதான் புறநகர் ரயில், மெட்ரோ ரயில் வசதி இருந்தாலும் சென்னையின் அனைத்து இடங்களுக்கும் தங்கு தடையின்றி செல்ல வேண்டும் என்றால் பஸ்சையே நாட வேண்டியிருக்கும்.

ஏனெனில் புறநகர் ரயில் போக்குவரத்தை பொறுத்தவரை குறிப்பிட்ட சில வழித்தடங்களில் மட்டுமே இயங்குகிறது. மெட்ரோ ரயில்களும் அப்படித்தான். இதனால், பஸ்களே பயணிகளுக்கு பெரிதும் கை கொடுக்கின்றன. சென்னையை பொறுத்தவரை 3 ஆயிரத்திற்கு மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. கல்லூரி செல்லும் மாணவ மாணவிகள், அலுவலகம் செல்வோர், அன்றாடம் கூலி வேலைக்கு செல்வோர் என தினமும் லட்சக்கணக்கானோர் இந்த சேவையை பயன்படுத்தி வருகிறார்கள்.
மாநகர பேருந்துகளில் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய பல்வேறு நடவடிக்கைகளை மாநகர பேருந்து கழக நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. அதேபோல, பணியில் உள்ள கண்டக்டர்கள், டிரைவர்களும் விதி மீறலில் ஈடுபட்டால் உடனடியாக நடவடிக்கை பாய்கிறது. பயணிகளின் பாதுகப்பு மற்றும் பேருந்து சேவையின் தரத்தை உறுதிப்படுத்தும் விதமாக இத்தகைய நடவடிக்கைகளை சென்னை மாநகர போக்குவரத்து கழகம் மேற்கொண்டு வருகிறது.
இந்த நிலையில்தான் தற்போது அரசு பேருந்து டிரைவர்கள், மற்றும் நடத்துனர்களுக்கு புதிய அறிவுறுத்தல் ஒன்றை மாநகர போக்குவரத்து கழகம் விடுத்துள்ளது. அதில் கூறியிருப்பதாவது:- மாநகர் போக்குவரத்து கழகத்தை சேர்ந்த அனைத்து டெப்போக்களிலும் பணிபுரியும் டிரைவர்கள், கண்டக்டர்கள் தங்கள் பணியின் போது சீருடை மற்றும் பேட்ஜ் அணிந்து பணிபுரிய வேண்டும் என ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது.
தற்போது, மேற்படி ஓட்டுனர்கள், நடத்துனர்கள் அனைவரும் பணியின் போது சீருடை மற்றும் பேட்ஜ் அணியாமல் பணி செய்வது தெரிய வருகிறது. எனவே, ஓட்டுனர்கள், நடத்துனர்கள் அனைவரும் பணியின்போது சீருடை மற்றும் பேட்ஜ் அணிந்து பணிபுரிய வேண்டும் என மீண்டும் இதன் மூலம் அறிவுறுத்தப்படுகிறது. இதனை கிளை மேலாளர்கள் மற்றும் மண்டல மேலாளர்கள் கண்காணிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்" என்று கூறப்பட்டுள்ளது.
முன்னதாக கடந்த சில நாட்களுக்கு முன்பாக இருசக்கர வாகன ஓட்டிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு இருந்தது. அதில் , "இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள், பாதசாரிகள் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக பேருந்தில் பக்கவாட்டில் கம்பிகள் அமைத்து மேம்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. விபத்துக்களின் போது பஸ்சின் கீழ் பக்கமாக பைக்கில் செல்பவர்களோ அல்லது பாதசாரிகளோ சிக்கி கொள்வதை தடுக்கும் விதமாக இது உள்ளது.
குறிப்பாக எதிர்பாராத நேரங்களிலோ யாரும் பேருந்துக்கு அடியில் விபத்தில் சிக்குவதை தடுக்கும் வகையில் தடுப்பு கம்பிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதற்காக 2,212 பேருந்துகளை தேர்வு செய்து உள்ளோம். முதல்கட்டமாக 600 பேருந்துகளில் பொருத்தப்பட்டுள்ளன. இரண்டாவது கட்டமாக 1,612 பேருந்துகள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. கம்பிகளை பொருத்தும் பணி தொடர்ந்து முழு வீச்சில் பணிகள் நடைபெற்று வருகின்றன" இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது












Click it and Unblock the Notifications