வெள்ளத்தில் மூழ்கிய சென்னை புறநகர்.. ஏரியாவுக்கு மீட்க சென்ற படகுகள்! வீடுகளில் இடுப்பளவு நீர்
சென்னை: போரூரை அடுத்த முகலிவாக்கம் பகுதியில் கனமழை காரணமாக வெள்ள நீர் சூழ்ந்து வீடுகளுக்கு புகுந்து இருக்கும் நிலையில் பொதுமக்கள் படகுகள் மூலமாக மீட்கப்பட்டு வருகிறார்கள்.
வடகிழக்கு பருவமழையின் காரணமாக தமிழ்நாடு முழுவதும் கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது. குறிப்பாக தலைநகர் சென்னையில் கடந்த 3 நாட்களாக மழை பெய்திருக்கிறது.
தொடர் கனமழை காரணமாக சென்னை போரூரை அடுத்த முகலிவாக்கம் திருவள்ளுவர் நகர் மழை நீரால் மூழ்கி இருக்கிறது. இடுப்பளவு வெள்ள நீர் தேங்கி இருப்பதால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் முடங்கி உள்ளனர்.

போரூர் ஏரி
தொடர் மழை காரணமாக நிரம்பிய செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் போரூர் ஏரிக்கும் வருகிறது. போரூர் ஏரியும் நிரம்பியதால் தண்ணீர் தேக்கி வைப்பதற்கான வாய்ப்புகள் இல்லாமல் திறந்துவிடப்பட்டது. இதனால் அங்கிருந்து வரும் தண்ணீர் முகலிவாக்கம் குடியிருப்புகளை மூழ்கடித்து உள்ளதாக கூறப்படுகிறது.

வீடுகளுக்குள் தண்ணீர்
500 க்கும் அதிகமான குடியிருப்புகளை கொண்ட இப்பகுதியில் வீதிகளில் தேங்கிய மழை நீர் வீடுகளுக்கு உள்ளேயும் புகுந்து இருப்பதால் மக்கள் பெரும் துயருக்கு ஆளாகி இருக்கிறார்கள். மக்கள் வீடுகளில் இருக்க முடியாமல், அதை விட்டு வெளியேறவும் முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர்.

படகுகளில் மீட்பு
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை வீடுகளில் இருந்து வெளியேற்றும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். மரப்படகுகள், பைபர் படகுகள் உதவியோடு பொதுமக்கள் மீட்கப்பட்டு வருகின்றனர்.

மீட்புப்பணி தீவிரம்
வில்லிவாக்கம், பூந்தமல்லி ஆகிய பகுதிகளில் இருந்து தீயணைப்பு வீரர்கள் இப்பகுதிக்கு வரவழைக்கப்பட்டு மீட்புப்பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. அதேபோல் அப்பகுதியில் தேங்கி இருக்கும் மழை நீரை வெளியேற்றும் பணிகளில் தீயணைப்புத்துறை உதவியோடு மாநகராட்சி ஈடுபட்டு வருகிறது.

வடிகால் பணிகள்
சென்னையில் வடகிழக்கு பருவமழைக்கு முன்பே மழை நீர் வடிகால் பணிகள் தொடங்கப்பட்டதால் பல இடங்களில் மழை நீர் விரைவாக வடிந்தது. ஆனால், பல ஆண்டுகளாக மழை நீர் தேங்கி வரும் இப்பகுதியில் மழை நீர் வடிகால் பணிகள் முறையாக மேற்கொள்ளாததால் வெள்ளம் தேங்கியுள்ளதாக மக்கள் தெரிவித்து வருகின்றனர்.

உணவு பொருட்கள்
கடந்த 2 நாட்களாக மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் சிரமப்பட்டு வருகிறார்கள். அதை யாரும் தங்களுக்கு வழங்கவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்தது. இந்த நிலையில் அவர்கள் பால், குடிநீர் போன்ற அத்தியாவசிய பொருட்களும் வழங்கப்பட்டு வருகிறது.

வடிகால் இல்லை
இதுகுறித்து பேசிய அப்பகுதியை சேர்ந்த நபர், "சுற்றிலும் வீடுகள் கட்டி, தடுப்பு சுவர்கள் இருப்பதால் தண்ணீர் செல்வதற்கான பாதை இல்லை. இது தொடர்பாக அதிகாரிகளிடம் நாங்கள் ஏற்கனவே புகாரளித்து உள்ளோம். அவர்களும் வடிகால் வசதி செய்து கொடுத்தார்கள். இருப்பினும் அதிக மழை பெய்ததால் தண்ணீர் தேங்கியுள்ளது.

அதிகாரிகள் நடவடிக்கை
எங்கள் பகுதி பள்ளமான இடமாக உள்ளது. இது தொடர்பாக மீண்டும் அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்து இருக்கிறோம். முதல் கட்டமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டு இருக்கிறது. படகு வசதியை ஏற்படுத்தி தந்து உள்ளார்கள். பால், தண்ணீர் போன்றவற்றை வழங்கி வருகிறார்கள்." என்ற தெரிவித்து உள்ளார்.












Click it and Unblock the Notifications