சென்னை அரசு மருத்துவமனை...கொரோனா சிகிச்சை...5 மாதங்கள் வீட்டுக்கே செல்லாத டாக்டர்!!
சென்னை: சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் கொரோனா வார்டில் பணிபுரிந்து வரும் மருத்துவர் ரமேஷ் மகாலிங்கம் கடந்த ஐந்து மாதங்களாக தனது குடும்பத்தினரை பார்க்க முடியாமல் வேலைப்பளு, கடமை அவரை கட்டிப் போட்டுள்ளது. தனது மகனின் பிறந்த நாளையும் வீடியோவில் பார்த்து வாழ்த்தியுள்ளார்.
சேலத்தைச் சேர்ந்தவர் டாக்டர் ரமேஷ் மகாலிங்கம். இவரது மகனின் பிறந்த நாள் கடந்த புதன் கிழமை கொண்டாடப்பட்டது. இதில் அவரால் கலந்து கொள்ள முடியவில்லை. காரணம், சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் பணியில் மூழ்கியிருப்பதுதான். மகனின் பிறந்த நாளை வீடியோ மூலம் பார்த்து வாழ்த்தியுள்ளார்.
இதுகுறித்து ரமேஷ் கூறுகையில், ''எனது குடும்பத்தினரின் பாதுகாப்பு முக்கியம். பிறந்த நாள் விழாவை மிஸ் செய்தாலும் பரவாயில்லை. குடும்பத்தினர் புரிந்து கொள்வார்கள். எனது மகனும் அவனுடைய நண்பர்களிடம் எனது தந்தை போரில் இருக்கிறார் என்று கூறியுள்ளான். நாங்களும் கொரோனா என்ற போரை எதிர்கொள்ள வேண்டிய சூழலில் இருக்கிறோம்'' என்று தெரிவித்துள்ளார்.
ஓமந்தூரார் மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு என்று 500 படுக்கைகள் போடப்பட்டு உள்ளன. இதுகுறித்து செந்தில் கூறுகையில், ''மருத்துவமனைக்கு ஆயிரக்கணக்கான நோயாளிகள் வருகின்றனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்க நாங்கள் இங்கு இருக்க வேண்டியது அவசியமாகிறது'' என்கிறார்.
இந்த மருத்துவமனையில் இதுவரை 15,000 நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து உள்ளனர். 10,000 பேருக்கு சிடி ஸ்கேன் எடுத்துள்ளனர். தொடர்ந்து டாக்டர்கள், நர்ஸ்கள், லேப் டெக்னீசியன் என்று 24 மணி நேரமும் பம்பரமாக பணிபுரிந்து வருகின்றனர். சென்னையில் தற்போது கொரோனா நோய் தொற்று குறைந்து வருவதாக தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் கழகத்தின் தலைவர் டாக்டர் கே. செந்தில் தெரிவித்துள்ளார். இதனால் பல டாக்டர்கள் தங்களது சொந்த ஊருக்கு திரும்புகின்றனர். முதுகலை மருத்துவம் படித்து வரும் சில டாக்டர்கள் தேர்வுக்கு தயாராகி வருகின்றனர் என்று செந்தில் தெரிவித்துள்ளார்.
Recommended Video
கொரோனா தடுப்புப் பணியில் இருக்கும்போது தொற்று காரணமாக டாக்டர்கள் உயிரிழந்தால், ரூ. 50 லட்சம் வழங்கப்படும் என்றும் அவர்களது குடும்பத்தில் ஒருவருக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படும் என்றும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்து இருந்தார். ஆனால், இன்னும் தமிழகத்தில் உயிரிழந்த மருத்துவர்களுக்கு அந்த நஷ்ட ஈடு வந்து சேரவில்லை என்று கூறப்படுகிறது. மேலும், கொரோனா தொற்றுக்கு ஆளாகி இருந்தால், ரூ. 2 லட்சம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. அதுவும் இதுவரை வழங்கப்படவில்லை.