கிளாம்பாக்கத்தில் குவியும் கூட்டம்.. ஆம்னி பஸ்களில் டிக்கெட் கட்டணத்தை கேட்டு ஆடிப்போன மக்கள்
சென்னை: சுதந்திர தினத்தையொட்டி பலரும் சொந்த ஊருக்கு சொல்ல கிளாம்பாக்கம் நோக்கி பயணித்து வருகிறார்கள். வெள்ளிக்கிழமை ஒரு நாள் விடுமுறை எடுத்தால் தொடர்ந்து நான்கு நாட்கள் விடுமுறை கிடைக்கும் என்பதால் சொந்த ஊருக்கு மக்கள் ஆர்வம் காட்டுகிறார்கள். இந்நிலையில் தொடர் விடுமுறை எதிரொலியாக, ஆம்னி பேருந்து கட்டணம் இரு மடங்காக உயர்ந்துள்ளது.ஆன்லைன் ஆப்களில் இதை காண முடியும்.
சென்னையில் உள்ள 80 சதவீதம் மக்கள் தென் மாவட்டம் மற்றும் மேற்கு மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் ஆவார். இவர்கள் அனைவரும் சொந்த ஊருக்கு செல்வதை விரும்புகிறார்கள். ஒவ்வொரு சனி ஞாயிறும் ஊருக்கு செல்ல பலர் ஆர்வம் காட்டுகின்றனர். இதேபோல் சொந்த ஊர்களில் திருமணம், உறவினர்கள் வீட்டு விசேஷம் , கோயில் திருவிழா போன்ற விழாக்களில் பங்கேற்கவும் செல்கிறார்கள்.

இதேபோல் சுதந்திர தினம், பொங்கல், குடியரசு தினம், ஆயுத பூஜை, விநாயகர் சதுர்த்தி, புத்தாண்டு, கிறிஸ்துமஸ் போன்ற பண்டிகை காலங்களிலும், காலாண்டு, அரையாண்டு, முழு ஆண்டு விடுமுறை காலங்களிலும் சொந்த ஊருக்கு செல்ல மக்கள் விரும்புகிறார்கள். இந்த காலக்கட்டங்களில் ரயிலில் இடம் கிடைப்பது என்பது சாத்தியமே இல்லாத ஒன்று.
பல லட்சம் பேர் ஒரே நேரத்தில் சென்னையை விட்டு வெளியேறவும், சென்னைக்கு திரும்பவும் வரவும் ஏற்ற போக்குவரத்து வசதிகள் உண்மையிலேயே இல்லை. ரயில், சொந்த வாகனங்கள், அரசு பேருந்துகள், ஆம்னி பேருந்துகள் என பல வழிகளில் மக்கள் சொந்த ஊருக்கு செல்கிறார்கள்.
பலரும் சொந்த ஊர் செல்ல ரயில் பயணத்தை விரும்புகிறார்கள். அதில் இடம் கிடைக்காதவர்கள் ஆம்னி பேருந்துகளில் செல்ல விரும்புகிறார்கள். ஆனால் ஆம்னி பேருந்துகளில் முக்கிய நாட்களில் வழக்கத்தைவிட கட்டணம் இரண்டு மடங்கு முதல் மூன்று மடங்கு வரை உயர்ந்து இருக்கும். சாதாரண நாட்களில் 750 ரூபாய் கட்டணம் என்றால், விசேஷ நாட்களில் 1500 ரூபாய் ஆக இருக்கும்.
இந்த சூழலில் சுதந்திர தினத்தையொட்டி தொடர் விடுமுறை எதிரொலியாக, ஆம்னி பேருந்து கட்டணம் இரு மடங்காக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக சென்னை கிளம்பாக்கத்தில் இருந்து கன்னியாகுமரிக்கு 3,000 ரூபாய் கட்டணம் உயர்ந்துள்ளது. திருநெல்வேலிக்கு 2,700 ரூபாய் வரையிலும், கோவைக்கு 2,700 ரூபாய் வரையிலும் கட்டணம் உயர்ந்து காணப்படுகிறது. சேலத்திற்கு 1,800 வரையிலும் பேருந்து கட்டணம் உயர்ந்து காணப்படுகிறது. இதேபோல் தமிழகம் முழுவதும் கட்டணம் 1000 முதல் 1500 வரை அதிகமாக இருக்கிறது..
இதனால் நான்கு பேர் கொண்ட சாதாரண நடுத்தர குடும்பம் சொந்த ஊர் சென்று திரும்ப சராசரியாக 18000 வரை தேவைப்படும் என்பதால் மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். அதேநேரம் அரசு பேருந்துகளில் டிக்கெட் கட்டணம் உயர்த்தப்படவில்லை.. அரசு பேருந்துகளில் கட்டணம் குறைவு என்றாலும், நகருக்குள்ளேயே ஏற முடிகிறது.. ஸ்லீப்பர் வசதி, விரைவான பயணம் போன்ற காரணங்களால் ஆம்னி பேருந்துகளை மக்கள் அதிகம் விரும்புகிறார்கள். அதற்கான கட்டணம் தற்போது நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு இருப்பதால் கவலை அடைந்துள்ளனர். அதேநேரம் இந்த கட்டணம் எல்லாம் ஆம்னி பேருந்துகள் விதிமீறி அறிவிக்கவில்லை.. வழக்கமாக ஆம்னி பேருந்துகளில் விடுமுறை கால கட்டணங்கள் ஆகும். இந்த கட்டணங்கள் எல்லாம் ஆம்னி பேருந்துகள் சங்கங்கள் ஒரு காலத்தில் அறிவித்த கட்டணங்கள் ஆகும். எனவே கட்டணம் அதிகம் என்று முறையிட முடியாத நிலை இருக்கிறது.












Click it and Unblock the Notifications