எத்தனை கனவுகளுடன் பள்ளிச் சென்ற சவுமியா! லாரி டயரில் சிக்கி இறந்த சோகம்! கனரக வாகனங்களுக்கு தடை!
சென்னை: சென்னை பெரம்பூர் பேப்பர் மில் சாலையில் நடந்த சாலை விபத்தில் சிறுமி பலியானதை தொடர்ந்து பள்ளி நேரங்களில் கனரக வாகனங்களை இயக்க சென்னை காவல் ஆணையர் அருண் தடை விதித்துள்ளார். மீறினால் போக்குவரத்து அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
சென்னை கொளத்தூர் பொன்னியம்மன்மேடு பகுதியைச் சேர்ந்தவர் யாமினி. இவர் தனது 10 வயது குழந்தை சவுமியாவை பள்ளியில் விடுவதற்காக நேற்று காலை இரு சக்கர வாகனத்தில் சென்றார்.

பெரம்பூர் பேப்பர் மில் சாலையில் வந்த போது பெரம்பூர் வீனஸ் அருகே சென்னை மாநகராட்சி குடிநீர் ஒப்பந்த லாரி ஒன்று வந்தது. இந்த லாரி, யாமினியின் இரு சக்கர வாகனத்தின் மீது மோதியது. இதனால் சிறுமி கீழே விழுந்தார்.
அப்போது அவர் மீது லாரியின் சக்கரம் ஏறி இறங்கியதில் சிறுமி சவுமியா உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் தொடர்பாக தகவலறிந்த போக்குவரத்து போலீஸார், சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர்.
அங்கிருந்த சிறுமியின் சடலத்தை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்திற்கான காரணம் குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள். முறையாக பாதுகாப்பு பணியில் ஈடுபடாத இரு காவல் துறை அதிகாரிகள் மீது காவல் துறை உயரதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
பீக் அவர்ஸான காலை 8 மணி முதல் 10 மணி வரை கன ரக வாகனங்கள் சாலையில் அனுமதிக்கக் கூடாது என்ற விதி இருந்தும் அந்த தண்ணீர் லாரியை அனுமதித்த ஆய்வாளர் மீதும் இந்த பணியை கண்காணிக்கத் தவறிய உதவி ஆணையர் மீதும் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது
அதாவது போக்குவரத்து காவல் ஆய்வாளர் சுடலை மணியை பணியிடை நீக்கம் செய்தும், உதவி ஆணையர் சத்தியமூர்த்தி மீது துறை ரீதியிலான விசாரணை நடத்தவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சென்னை காவல் ஆணையர் அருண் ஒரு எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
அதாவது பள்ளி நேரங்களில் கனரக வாகனங்களை இயக்க தடைவிதிக்கப்படுகிறது. பள்ளி நேரங்களில் கனரக வாகனங்களை அனுமதித்தால் போக்குவரத்து அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
அது போல் விபத்தை ஏற்படுத்தும் வாகனங்களை 100 நாட்களுக்கு அதன் உரிமையாளரிடம் ஒப்படைக்கக் கூடாது. காலை 7 மணி முதல் பகல் 12 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையும் கனரக வாகனங்கள் இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அருண் ஐபிஎஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.












Click it and Unblock the Notifications