“ஞானசேகரன் மட்டுமே பாலியல் குற்றவாளி.. வேறு யாருக்கும் தொடர்பில்லை" சென்னை காவல் ஆணையர் அருண் பேட்டி
சென்னை: சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான சம்பவத்தில், கைது செய்யப்பட்ட ஞானசேகரன் மட்டுமே குற்றவாளி என்றும், இந்த வழக்கில் வேறு யாருக்கும் தொடர்பில்லை என்றும் சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் தெரிவித்துள்ளார்.
சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி, இரவு நேரத்தில் பல்கலைக்கழக வளாகத்தில் மாணவர் ஒருவருடன் பேசிக் கொண்டிருந்தபோது, மாணவரை மிரட்டி, அந்த மாணவியை ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் தமிழ்நாட்டையே அதிர வைத்துளது. பாலியல் வன்கொடுமை வழக்கில் ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த வழக்கில் பதிவான எஃப்.ஐ.ஆர் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

பாலியல் வன்கொடுமை, பாலியல் துன்புறுத்தல் மற்றும் போக்சோ வழக்குகளில் பாதிக்கப்பட்ட நபரின் விவரங்களை வெளியிடக் கூடாது என்பது சட்டம். இந்த நிலையில், பாதிக்கப்பட்ட அண்ணா பல்கலைக்கழக பெண்ணின் பெயர், முகவரியுடன் கூடிய எஃப்.ஐ.ஆர் காப்பி வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. எதிர்க்கட்சிகள், காவல்துறையை கடுமையாக விமர்சித்து வருகின்றன.
இதுதொடர்பாக இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய காவல் ஆணையர் அருண், “புகாரில் பாதிக்கப்பட்டவர்கள் என்ன சொல்கிறார்களோ, அதை அப்படியே பதிவு செய்வதுதான் எஃப்.ஐ.ஆர். அந்தச் சம்பவம் நடைபெறும்போது, ஞானசேகரன் மீது போன் ஃப்ளைட் மோடில் இருந்தது. எனவே அவர், 'சார்’ என பேசியதாக பரவும் தகவல் போலியானது. இந்த வழக்கில் சார் என்று யாரும் இல்லை.
இந்த வழக்கைப் பொறுத்தவரை மாலை 4 மணிக்கு புகார் அளித்தனர். 3 மணி நேரத்தில் குற்றவாளி கைது செய்யப்பட்டார். அடுத்த நாளுக்குள் எஃப்ஐஆர் பதிவு செய்து, குற்றவாளியை கைது செய்து ரிமாண்ட் செய்திருக்கிறோம்.
இதுவரை ஞானசேகரன் மீது கடந்த 2013ல் இருந்து 20 வழக்குகள் பதிவாகியுள்ளன. அவை அனைத்தும் திருட்டு உள்ளிட்ட வழக்குகளே தவிர பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக, அவர் மீது வழக்கு ஏதும் பதிவாகவில்லை. இதில், ஆறு வழக்கில் இவருக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது. மற்ற வழக்குகளில் விசாரணை நடைபெற்று வருகிறது.
தற்போது மாணவி கொடுத்துள்ள புகாரை தவிர, இதுவரை இவரால் பாதிக்கப்பட்டதாக எந்தப் பெண்ணும் புகார் கொடுக்கவில்லை. ஆனால், தற்போது ஞானசேகரனிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. அதில் வேறு யாரும் பாதிக்கப்பட்டிருந்தது தெரியவந்தால், அவர்களிடம் பேசி வழக்குப் பதிவு செய்யப்படும். ஞானசேகரனின் போன் உள்ளிட்ட தகவல்களை சேகரித்து யாராவது பாதிக்கப்பட்டிருந்தால், அவர்களிடம் புகார்கள் பெறப்படும்.
போக்சோ மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்களில் எஃப்.ஐ.ஆர் எனும் முதல் தகவல் அறிக்கை, இணையதளத்தில் தானாகவே லாக் ஆகித்தான் இருக்கும். பாதிக்கப்பட்டோரின் விபரங்களை பார்க்க முடியாது. ஆனால், IPC-யில் இருந்து புதிய சட்டங்களான BNS-க்கு மாற்றப்பட்டதால் சில தொழில்நுட்பக் கோளாறு காரணமாக லாக் ஆவதில் சற்று தாமதம் ஆகியுள்ளது. இந்த நேரத்தில் சிலர் அதனை பதிவிறக்கம் செய்திருக்கலாம். மேலும், பாதிக்கப்பட்ட தரப்புக்கும் FIR நகல் கொடுக்கப்பட்டது. இந்த 2 இடங்களிலும் ஏதாவது ஒரு இடத்தில் FIR லீக் ஆகியிருக்கலாம்.
FIR-ஐ வெளியிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். அண்ணா பல்கலைக்கழகத்தில் 70 சிசிடிவி கேமராக்கள் உள்ளன. 56 கேமராக்கள் வேலை செய்கின்றன. கைதான ஞானசேகரன் மீது திருட்டு உள்பட 20 வழக்குகள் உள்ளன. அவரால் வேறு யாரும் பாதிக்கப்பட்டதாக புகார் அளித்தால் நடவடிக்கை எடுக்கப்படும்.
காவல்துறை எந்த பாகுபாடும் பார்க்கக் கூடாது. எந்தக் கட்சியாக இருந்தாலும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றே ஆய்வுக் கூட்டங்களில் தமிழக முதலமைச்சர் கூறியுள்ளார். எங்களுக்கு எந்த கட்சி சார்பும் இல்லை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் 140 பேர், 3 ஷிப்டுகளாக காவலாளிகள் பணியில் உள்ளனர். வளாகத்திற்கு 11 நுழைவு வாயில்கள் உள்ளன. இன்னும் அங்கு பாதுகாப்பை மேம்படுத்துவது குறித்து ஆய்வு நடக்கிறது" எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications