காமுக சாமியார் சிவசங்கர் பாபாவை தூக்க டேராடூனில் சென்னை போலீஸ்- தப்பாமல் இருக்க லுக் அவுட் நோட்டீஸ்
சென்னை/ டேராடூன்: காமுக சாமியார் சிவசங்கர் பாபாவை கைது செய்ய சென்னை சிபிசிஐடி போலீசார் உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் முகாமிட்டுள்ளனர். மேலும் சிவசங்கர் பாபா வெளிநாடுகளுக்கு தப்பி செல்லாமல் இருக்க விமான நிலையங்களில் லுக் அவுட் நோட்டீஸ் விடுத்துள்ளனர்.
Recommended Video
சென்னை கேளம்பாக்கத்தில் சுஷில் ஹரி இன்டர்நேஷனல் பள்ளியை நடத்தி வந்தவர் சர்ச்சை சாமியார் சிவசங்கர் பாபா. 30 ஆண்டுகளுக்கு முன்னர் லாரி சர்வீஸ் தொழிலில் ஈடுபட்டவர். அப்போது பெண்களிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டு அடி உதை வாங்கியவர்.
அதன் பின்னர் அம்மன் பெயரில் குறிசொல்ல ஆரம்பித்து பிரபல சாமியாரானார். ஒருகட்டத்தில் டான்ஸ் ஆடிக் கொண்டே குறிசொல்வதை தமது ஸ்டைலாக வைத்துக் கொண்டதால் டான்ஸ் சாமியார் சிவசங்கர் பாபா எனவும் அழைக்கப்பட்டார்.
குடும்பத்தில் பிரச்சினைனு வந்த மாணவியின் மார்பில் கை வைத்த சிவசங்கர் பாபா.. முன்னாள் மாணவி பேட்டி
பறவை சாமியார்/ சிவசங்கர் பாபா
1990களில் சென்னையில் பிரபலமாக இருந்தவர் யாகவா முனிவர் எனும் பறவை சாமியார். அவருக்கும் சிவசங்கர் பாபாவுக்கும் ஏழாம் பொருத்தம். டிவி நிகழ்ச்சி ஒன்றில் இருவரும் அடித்துக் கொண்ட சம்பவம் அப்போது பெரும் பரபரப்பாக பேசப்பட்டது. இந்த சம்பவமே மறைந்த நடிகர் விவேக் நடித்த சினிமாவில் காட்சியாகவும் உருவாக்கப்பட்டது. இன்றளவும் அது சமூக வலைதளங்களில் கலக்கி வருகிறது.
சென்னை பத்மா சேஷாத்ரி பள்ளி
இந்த நிலையில்தான் சென்னை பத்மா சேஷாத்ரி பள்ளி மாணவர்களின் பாலியல் தொல்லை புகார் வெளிச்சத்துக்கு வந்தது. இந்த புகாரின் அடிப்படையில் பத்மா சேஷாத்ரி பள்ளி ஆசிரியர்கள் இருவர் சிக்கி உள்ளனர். ஆனால் இதில் மேலும் பலருக்கு தொடர்பு இருப்பதால் பள்ளி நிர்வாகத்தையும் விசாரணைக்கு கொண்டு வந்துள்ளனர் போலீஸார்.
சிவசங்கர் பாபா மீது புகார்
பத்மா சேஷாத்ரி பள்ளியைத் தொடர்ந்து சிவசங்கர் பாபாவின் சுஷில் ஹரி இன்டர்நேஷனல் பள்ளி மாணவிகளும் பாலியல் தொல்லை புகார் கொடுத்தனர். சர்ச்சை சாமியார் சிவசங்கர் பாபாவின் காமலீலைகளை மாணவிகள் அம்பலப்படுத்தியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் தொடர்பாக முதலில் குழந்தைகள் உரிமைகள் ஆணையம் விசாரணை நடத்தது. இந்த விசாரணையில் சிவசங்கர் பாபா ஆஜராகவில்லை.
டேராடூன் தப்பி ஓட்டம்
மேலும், ஆன்மீக சுற்றுலா சென்றபோது உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. ஆனால் கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்கவே சிவசங்கர் பாபா, மாரடைப்பு நாடகமாடுவதாகவும் சந்தேகிக்கப்பட்டது. இந்த நிலையில் சிவசங்கர் பாபா மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அத்துடன் இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கும் மாற்றப்பட்டது.
தப்பாமல் இருக்க நோட்டீஸ்
இதனைத் தொடர்ந்து தற்போது சிபிசிஐடி போலீசார் டேராடூனுக்கு சென்று சிவசங்கர் பாபாவை தேடி வருகின்றனர். அங்கிருந்து சிவசங்கர் பாபா தப்பி ஓடிவிடாமல் இருக்கவும் அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சிவசங்கர் பாபா வெளிநாடு செல்வதைத் தடுக்க அவரை தேடும் நபராக அறிவிக்கும் லுக் அவுட் நோட்டீஸும் அனைத்து விமான நிலையங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.