மெரினா பக்கம் போனா இதை பார்க்க மறக்காதீங்க.. சென்னை போலீஸ் கொண்டு வந்துள்ள வேற லெவல் திட்டம்! செம
சென்னை: மெரினா கடற்கரையில் சென்னை போலீசார் முக்கிய நடவடிக்கையை எடுத்துள்ளனர். இதன் மூலம் போலீசாருக்கும் பொதுமக்களுக்கும் இடையேயான நல்லுறவு மேம்படும் என்றும் அவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
சென்னை நகரில் பொதுமக்களைப் பாதுகாப்பது என்பதைத் தாண்டி சென்னையில் போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். அப்படியொரு முக்கிய நடவடிக்கையைச் சென்னை போலீஸ் இப்போது எடுத்துள்ளனர்.

இசை நிகழ்ச்சி: பொதுவாகச் சுதந்திரம் மற்றும் குடியரசு நாட்களில் மட்டுமே சென்னை பெருநகர போலீசாரின் பேண்ட் இசைக் குழு, பெண்கள் பேக் பைப்பர் இசைக் குழு நிகழ்ச்சி மெரினாவில் நடைபெறும். இந்த இசை நிகழ்ச்சிக்காகவே தனியாக ரசிகர்களும் உள்ளனர். அந்தளவுக்கு மிகச் சிறப்பாக இந்த இசை நிகழ்ச்சி இருக்கும். இனிமேல் இந்த இசை நிகழ்ச்சியைக் காணப் பொதுமக்கள் மாதக் கணக்கில் காத்திருக்க வேண்டாம்
அதன் ஒரு பகுதியாக, மெரினா கடற்கரையில் உள்ள திறந்தவெளி சென்னை பெருநகர போலீசாரின் பேண்ட் இசைக் குழு, பெண்கள் பேக் பைப்பர் இசைக் குழு இசை நிகழ்ச்சி இனி அனைத்து சனிக்கிழமைதோறும் மாலை 5 மணி முதல் ஒரு மணி நேரம் நடத்தத் திட்டமிடப்பட்டது. மெரினா கடற்கரையில் விவேகானந்தர் இல்லம் எதிரே இனி ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமைகளில் இந்த நிகழ்ச்சி நடத்தப்படும்.
அமைச்சர் உதயநிதி: இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இந்த இசை நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார். உலகின் மற்ற நாடுகளில் உள்ள முக்கிய நகரங்களில் பொது இடங்களில் இதுபோன்ற நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டாலும், நமது நாட்டில் இதுபோல நடத்தப்படுவது இதுவே முதல்முறையாகும். இந்த இசை நிகழ்ச்சி ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமைகளில் மாலை 5 மணி முதல் 6 மணி வரை நடைபெறும்.
இந்தியாவிலேயே முதன்முறையாகப் பெண்களை மட்டுமே கொண்ட பேக்பைபர் இசைக்குழுவைச் சென்னை பெருநகர காவல்துறை உருவாக்கியுள்ளது. இவர்கள், ஏற்கனவே பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் தங்கள் திறமையை வெளிக்காட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது. நேற்று இதனை அமைச்சர் உதயநிதி தொடங்கி வைத்த நிலையில், இந்த நிகழ்ச்சியில், டிஜிபி சங்கர் ஜிவால், சென்னை மாநகராட்சி ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன், சென்னை போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
முதல்முறை: இந்த நிகழ்ச்சியில் பேசிய டிஜிபி சங்கர் ஜிவால், "இனி மெரினாவில் ஒவ்வொரு வாரமும் இந்த இசை நிகழ்ச்சி நடத்தப்படும். பெண்களைக் கொண்ட 'பேக் பைப்பர் இசைக் குழு' இந்தியாவிலேயே முதல்முறையாகத் தமிழ்நாட்டில் தான் உருவாக்கப்பட்டது. அதன் பிறகே சத்தீஸ்கர், டெல்லி போலீசாரும் இதை உருவாக்கினர்.
மேலும், போலீஸ் பேண்ட் இசைக் குழுவைத் தனியார் நிகழ்ச்சிக்கும் அழைக்கலாம். ஆனால், அதற்கு நிகழ்ச்சியை நடத்துவோர் போலீஸ் நடைமுறையைப் பின்பற்ற வேண்டும். காவல் சிறார் மன்றத்தில் இருக்கும் சிறுவர்களுக்கும் ஆர்வம் இருப்பதால் அவர்களும் இந்த இசைக் குழுவில் இணைக்கப்படுவார்கள் அவர்களுக்குப் பயிற்சி அளிக்கப்படும் " என்றார்.
இந்த நிகழ்ச்சி மூலம் பொதுமக்களுக்கும் போலீசாருக்கும் இடையேயான நல்லுறவு வளரும் என்ற சென்னை போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர், இரு தரப்பிற்கும் இடையே ஒத்துழைப்பு அதிகரிக்க இதுபோன்ற நிகழ்ச்சிகள் பெரியளவில் உதவும் என்றும் அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications