'இது அவதூறு பேர்வழிகளுக்கு எச்சரிக்கை'.. மாரிதாஸ் கைதுக்கு சென்னை பத்திரிகையாளர் மன்றத்தின் ரியாக்ஷன்
சென்னை: மதுரை அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்தவர் மாரிதாஸ். பா.ஜ.க. ஆதரவாளரான இவர் யூடியூப் சேனல் நடத்தி வருகிறார். ட்விட்டர், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களிலும் பாஜகவுக்கு ஆதரவான கருத்துக்களை தெரிவித்து வந்தார்.
இதற்கிடையே நீலகிரி மாவட்டம் வெலிங்டன் அருகே நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் முப்படை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி உள்பட 13 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தை வைத்து டுவிட்டர் ஒன்றை பதிவிட்ட மாரிதாஸ் காஷ்மீருடன் தமிழ்நாட்டை ஒப்பிட்டு சர்ச்சைக்குரிய வகையில் கருத்து கூறி இருந்தார்.

மாரிதாஸ் கைது
மாரிதாஸ் தமிழகத்தின் அமைதியை சீர்குலைக்க முயற்சி செய்வதாக கூறி மதுரை மாநகரக் காவல் துறையில் புகார் கொடுக்கப்பட்டது. இதனை தொடர்ந்து வீட்டுக்கு சென்று மாரிதாசை போலீசார் கைது செய்தனர். அவர் மீது 504 (தனது கருத்தால் அல்லது பதிவால் சமூகத்தில் பிரச்னை ஏற்படும் என தெரிந்தே பதிவிடுதல்), 505 ( ii ) (ஜாதி, மத, இன வேறுபாடு ஏற்படுத்தி பிரச்னையை ஏற்படுத்தும் வகையில் தூண்டி விடுதல்), 505 ( i ) ( b ) (பொது அமைதியை சீர்குலைக்கும் வகையில் செயல்படுதல்) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

மீண்டும் கைது
இதனை தொடர்ந்து மரிதாஸை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திவிட்டு தேனி சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் சிறையில் இருக்கும் மாரிதாஸை வேறு ஒரு வழக்கில் போலீசார் கைது செய்தனர். அதாவது கடந்த ஆண்டு நியூஸ்18 தமிழ்நாடு நிர்வாகத்தின் மீது தான் பல்வேறு புகார்களை வைத்ததாகவும், இதனை அந்நிறுவனம் ஏற்றுக் கொண்டு, மூத்த ஆசிரியர் வினய் சரவாகி அனுப்பியதாக மெயில் ஒன்றை அனுப்பியதாகவும் மாரிதாஸ் டுவிட் போட்டு இருந்தார்.

இதுதான் காரணம்
தான் அப்படியொரு இமெயிலை மாரிதாஸுக்கு அனுப்பவில்லை என்றும், அவர் போர்ஜரி செய்து மோசடியாக மெயில் ஒன்றை வெளியிட்டதாகவும் சென்னை மாநகர குற்றப்பிரிவில் பத்திரிகையாளர் வினய் சரவாகி புகார் கொடுத்து இருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் மாரிதாசை போலீசார் இன்று கைது செய்துள்ளனர். இந்த நிலையில் மாரிதாஸ் கைது செய்யப்பட்டதற்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம் வரவேற்பு தெரிவித்துள்ளது.

சென்னை பத்திரிகையாளர் மன்றம்
இது தொடர்பாக சென்னை பத்திரிகையாளர் மன்றம் வெளியிட்ட அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
செய்தி ஊடகங்களின் செயல்பாட்டுக்கு உள்நோக்கம் கற்பித்தும், ஊடகவியலாளர்களை நேர்மையான வகையில் தங்கள் பணிகளைச் செய்யவிடாமல் அச்சுறுத்தும் வகையிலும் செயல்பட்டு வந்த மதுரையைச் சேர்ந்த யூடியூபர் மாரிதாஸ் என்பவரை, நியூஸ்18 தொலைக்காட்சி நிர்வாகத்தின் சார்பில் மூத்த பத்திரிகையாளர் திரு. வினய் சரவாஹி அளித்த மோசடி புகாரில் கைது செய்திருப்பதை சென்னை பத்திரிகையாளர் மன்றத்தின் சார்பில் வரவேற்கிறோம்.

நடவடிக்கை பாராட்டுக்குரியது
போலியாக மின்னஞ்சலை உருவாக்கி, மோசடி செய்திருப்பதாகவும், அவரது செயலால் தங்கள் நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதாகவும் திரு. வினய் சரவாஹி கடந்த 10.7.2020-ம் தேதி அன்று சென்னை மாநகர காவல்துறை ஆணையாளரிடம் புகார் அளித்திருந்தார். அந்த வழக்கை புலன் விசாரணை செய்துவந்த மத்திய குற்றப்பிரிவு போலீஸார், மாரிதாஸை கைது செய்துள்ளனர். இந்த நடவடிக்கை பாராட்டுக்குரியது.

எச்சரிக்கையாக அமையும்
ஊடக செயல்பாட்டுக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையிலும், பத்திரிகையாளர்களையும் அவர்களது குடும்பத்தினரையும் கொச்சைப்படுத்தும் வகையிலும் தான்தோன்றித் தனமாக அவதூறான வகையில் பேசியும் செயல்பட்டும் வந்த மாரிதாஸின் செயல்கள் கருத்துச் சுதந்திரத்துக்கு எதிரானது என்று சென்னை பத்திரிகையாளர் மன்றம் அப்போதே கண்டனம் செய்திருந்தது. சட்டபூர்வமான நடவடிக்கைகளை அவர் மீது எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியதை நினைவு கூர்கிறோம். தாமதமானாலும் தற்போதைய இந்த நடவடிக்கை போலியான அவதூறு பேர்வழிகளுக்கு எச்சரிக்கையாக அமையும் என்று நம்புகிறோம்
Recommended Video

ஆரோக்கியமானது அல்ல
தங்கள் நோக்கங்களுக்கு வளைந்து கொடுக்காத பத்திரிகையாளர்களை மிரட்டி அச்சுறுத்துவதும், அவர்களைப் பற்றியும் குடும்பத்தினரைப் பற்றியும் இழித்தும் பழித்தும் பேசுவதுமான போக்கு ஆரோக்கியமானது அல்ல. பத்திரிகையாளர்களை அவர்களது பணியில் இருந்து விலக்குவதற்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் மிரட்டல் விடுக்கும் போக்கை எவர் ஒருவர் முன்னெடுத்தாலும் அத்தகைய போக்குக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும். *மூகவிரோத சக்திகளிடம் இருந்து ஊடக சுதந்திரத்தை பாதுகாக்கும் வகையில் தனிநபர்கள், அரசியல் கட்சியினர் என அனைவரது செயல்பாடுகளும் இருக்க வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications