கருக்கா வினோத்துக்கு 10 ஆண்டுகள் சிறை! ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் தீர்ப்பு!
சென்னை: சென்னை கிண்டி ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டுகளை வீசிய ரவுடி கருக்கா வினோத்துக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.5,000 அபராதம் விதித்து பூந்தமல்லி என்.ஐ.ஏ நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது.
சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை முன்பு கடந்த 2023 ஆம் ஆண்டு அக்டோபர் 25 ஆம் தேதி ரவுடி கருக்கா வினோத், பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் சரித்திர பதிவேடு குற்றவாளி கருக்கா வினோத்தை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்த பெட்ரோல் குண்டையும் பறிமுதல் செய்தனர்.

இதையடுத்து மத்திய உள்துறை அமைச்சகம் இந்த வழக்கை என்ஐஏ விசாரிக்க பரிந்துரைத்தது. இதன் பேரில் கருக்கா வினோத் மீது கூட்டுச்சதி உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் என்ஐஏ வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியது. மேலும், கருக்கா வினோத்திடம் என்ஐஏ அதிகாரிகள் விசாரணை நடத்தி அவரது வாக்குமூலத்தை பதிவு செய்தனர்.
அதைத்தொடர்ந்து, ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசிய இடத்தை என்ஐஏ அதிகாரிகள் ஆய்வு செய்து பல்வேறு தடயங்களைச் சேகரித்தனர். மேலும், பெட்ரோல் குண்டு வீசப்பட்டபோது, அங்கு பணியில் இருந்த காவலர்களிடமும் விசாரணை நடத்தினர்.
இந்த வழக்கு விசாரணை முடிந்து, 680 பக்க குற்றப் பத்திரிகையை என்ஐஏ அதிகாரிகள் பூந்தமல்லி நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வந்தபோது, நீதிபதிகளை நோக்கி கருக்கா வினோத் காலணியை வீசியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில் பூவிருந்தவல்லி என்.ஐ.ஏ நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளித்துள்ளது.
கடந்த 2023ல் ஆளுநர் மாளிகை முன்பு அடுத்தடுத்து இரண்டு பெட்ரோல் குண்டுகளை வீசிய கருக்கா வினோத்துக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.5,000 அபராதம் விதித்து பூந்தமல்லி என்.ஐ.ஏ. நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.












Click it and Unblock the Notifications