சென்னையின் முக்கிய சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல்.. பல கி.மீக்கு அணிவகுத்து நிற்கும் வாகனங்கள்
சென்னை : தீபாவளி பண்டிகைக்கு இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில், சென்னையின் முக்கிய பகுதிகளில் புத்தாடைகளை வாங்க பொதுமக்கள் குவிந்துள்ளதால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
வணிக வளாகங்கள், கடை வீதிகள் நிறைந்த நகரின் பல பகுதியில் இன்று பிற்பகல் முதலே கடுமையான வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.
வாகனங்கள் பல கி.மீ தொலைவுக்கு சாலைகளில் அணிவகுத்து நிற்பதால், பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
கடும் போக்குவரத்து நெரிசல் காரணமாக வேலைக்கு செல்வோர், மருத்துவமனைக்கு செல்வோர், பள்ளி, கல்லூரி மாணவர்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

தீபாவளி பண்டிகை
வரும் அக்டோபர் 24ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. சென்னையில் வசிக்கும் வெளி மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் தீபாவளியை கொண்டாட சொந்த ஊர்களுக்கு செல்லத் தொடங்குவார்கள். இதனால், புத்தாடைகள் வாங்க மக்கள் கடை விதிகளுக்கு குடும்பத்தினருடன் படையெடுத்து வருகின்றனர். இதனால், சென்னையின் வணிக வளாகங்கள், கடைகள் இருக்கும் முக்கிய பகுதிகளில் இப்போதே கூட்டம் குவியத் தொடங்கியுள்ளது.

விற்பனை ஜோர்
சென்னையில் கடை வீதிகள் நிறைந்த முக்கிய பகுதிகளான தியாகராய நகர், பாரிஸ் கார்னர், வண்ணாரப்பேட்டை, பெரம்பூர், திருவல்லிக்கேணி உள்ளிட்ட பகுதிகளில் தற்போது தீபாவளி விற்பனை மும்முரமாக நடந்து வருகிறது. தீபாவளி பண்டிகைக்காக ஜவுளிக் கடைகளில் பொதுமக்கள் கூட்டம் குவிந்து வருவதால் அந்தப் பகுதிகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.

சனிக்கிழமை
இன்று சனிக்கிழமை விடுமுறையையொட்டி இன்று காலை முதல் தி.நகர் ரங்கநாதன் தெருவில் மக்கள் கூட்டம் அலைமோதியது. வணிக வளாகங்கள், துணிக்கடைகள், நகைக்கடைகள், ஹோட்டல்கள் போன்ற இடங்கள் பொதுமக்கள் கூட்டத்தால் திக்குமுக்காடியது. தீபாவளி விற்பனை காரணமாக, இன்று பிற்பகலே கடுமையான வாகன நெரிசல் ஏற்பட்டது. முக்கியமான சாலைகளில் பல கி.மீ தொலைவுக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்று வருகின்றன.

நெரிசல் குறையலையே
வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக அணிவகுத்து நின்றதால், கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர். போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் முயற்சியில் போக்குவரத்து போலீசாருடன், சட்டம் ஒழுங்கு போலீசாரும் ஈடுபட்டுள்ளனர். தி.நகர் ரங்கநாதன் தெருவில், கூட்ட நெரிசலை தவிர்க்க பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ள நிலையிலும் போக்குவரத்து நெரிசல் குறையாதது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

கடும் அவதி
மக்கள் புழக்கம் அதிகம் உள்ள சென்னை பாண்டி பஜார் பகுதியில் போக்குவரத்து நெரிசல் காரணமாக வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. இதனால் வேலைக்குச் செல்வோர், மருத்துவமனைக்குச் செல்வோர், பள்ளி, கல்லூரி மாணவர்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். போக்குவரத்தை சீர் செய்ய முடியாமல் போக்குவரத்து காவல்துறையினர் திணறி வருகின்றனர்.

வடிகால் பணிகள்
மேலும், சென்னையின் பல இடங்களில் மழைநீர் வடிகால் பணிகள் நடைபெறுவதன் காரணமாக சாலைகளில் பள்ளங்கள் தோண்டப்பட்டுள்ளன. பணிகள் இன்னும் முடிவடையாத சூழலில், மழையும் பெய்து வருவதாலும் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. பண்டிகை காலத்தை மனதில் கொண்டு அரசு விரைந்து செயல்பட்டு வடிகால் பணிகளை துரிதப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications